You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகத்தில் ஒரு சிறுத்தையைப் பிடிக்க ஒரு மாதமாகப் போராடும் 300 பேர்
- எழுதியவர், செரிலன் மொல்லன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
- பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக கோல்ஃப் மைதானத்திற்குள் நுழைந்து தலைமறைவாகியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சிறுத்தை முதலில் ஆகஸ்ட் 5 அன்று, வடக்கு கர்நாடகாவில் உள்ள பெல்காம் நகரத்தில் ஒரு தொழிலாளியைத் தாக்கியபோது பேசுபொருளானது. அந்தத் தாக்குதலில் காயமடைந்திருந்தாலும் அந்த நபர் உயிர் பிழைத்துவிட்டார்.
அப்போதிருந்து, அந்த நகரத்திலுள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தைச் சுற்றி இது சில முறை பார்க்கப்பட்டது. அது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
சிறுத்தையைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்காக கால்நடை மருத்துவர்கள், மயக்க ஊசி செலுத்துவதற்கான ஷார்ப் ஷூட்டர்கள் முதல் மயக்க மருந்து நிபுணர்கள் வரை சுமார் 300 பணியாளர்களை மாநில வனத்துறை நியமித்துள்ளது. ஆனால், இதுவரை அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
ஒருபுறம், இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டியை ராஜினாமா செய்யுமாறு கேட்டு வருகின்றனர். அதற்கு உமேஷ் கட்டி, "நான் ராஜினாமா செய்தால் சிறுத்தையைப் பிடித்துவிடலாம் என்றால், நான் ராஜினாமா செய்யத் தயார்," என்று கூறியுள்ளார்.
"சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டுமென்று பொதுமக்களின் அழுத்தம் அதிகமாக உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்," என்று கர்நாடக வனத்துறையின் முதன்மை செயலாளர் விஜயகுமார் கோகி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், பெரிய அளவிலான செயல்பாடு, ஊடக கவனம் அனைத்தும் தனிமைப்பட்டிருக்கும் சிறுத்தையைப் பிடிப்பதில் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள், கடந்த ஆண்டுகளில் அவற்றின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால், இரையைத் தேடி ஊருக்குள்ளும் நகரங்களுக்கும் அவை வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
நாட்டிலேயே இரண்டாவது அதிக சிறுத்தைகள் உள்ள பகுதி கர்நாடகா என்று அரசுத் தரவுகள் கூறுகின்றன. அது, பரந்த அளவிலான காட்டுப் பகுதி மற்றும் காட்டுயிர் சரணாலயங்களைக் கொண்டுள்ளது. அங்கு 1,783 சிறுத்தைகள் உள்ளன. பெங்களூரு, மைசூர் போன்ற அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அவை அடிக்கடி காணப்படுகின்றன.
இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கும் பெல்காம் வனத்துறை அதிகாரி அந்தோணி எஸ் மாரியப்பா, "பெல்காம் நகரில் சிறுத்தை காணப்படுவது இதுவே முதல் முறை. அதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்," என்று கூறினார்.
இந்த ஆபரேஷன் எப்படி நடக்கிறது?
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் பல்வேறு இடங்களில் சுமார் 20 கேமரா பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேமரா பொறிகளில் அகச்சிவப்பு சென்சார் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அது நகரக்கூடிய பொருட்களை உணரும்போது தானாகவே படம் எடுத்துக் கொள்கிறது.
சிறுத்தையைப் பிடிக்க நாய்கள், பன்றிக்குட்டிகள் ஆகியவற்றை 10 கூண்டுகளில் இரையாக வைத்துள்ளார்கள்.
"ஃபெரோமோன் எனப்படும் இனக்கவர்ச்சி மூலம் சிறுத்தையை ஈர்த்து வர வைப்பதற்காக, பெண் சிறுத்தையின் சிறுநீர், சாணம் ஆகியவற்றை அந்தக் கூண்டுகளின் மீது பயன்படுத்தியுள்ளோம்," என்று கூறுகிறார் விஜயகுமார் கோகி.
சிறுத்தை உலவி வரும் 300 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியை 300-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுக்கள் மூன்று முறை முற்றிலுமாகத் தேடிவிட்டதாக அவர் கூறினார். சிறுத்தையைப் பிடித்து அதன் இயற்கையான வாழ்விடமாக இருக்கும் காப்புக் காட்டுக்கு இடம் மாற்றுவதற்காக, ஷார்ப் ஷூட்டரை பயன்படுத்தி, மயக்க ஊசியைச் செலுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
"சிறுத்தையை உயரத்திலிருந்து கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும் என்பதால், பயிற்சி பெற்ற இரண்டு யானைகளையும் பணியமர்த்தினோம்"
கூடுதலாக, ஆறு ஜேசிபி அகழ்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை, சிறுத்தையின் தாக்குதலில் இருந்து பிழைக்கத் தேவையான உரிய பாதுகாப்புகளோடு, அடர்த்தியான பகுதிகளுக்குள் தேடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில், அதைக் கண்டறிவதற்காக ட்ரோன்களும் பறக்கவிடப்பட்டன.
சிறுத்தையை ஏன் இன்னும் பிடிக்கவில்லை?
"சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கையின்போது அதை இரண்டு முறை பார்த்தோம். ஆனால், அதைப் பிடிப்பதற்கு முன்பே பதுங்கிவிட்டது," என்கிறார் மாரியப்பா.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதாலும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மழைக்கு நடுவே துல்லியமாகக் கண்காணிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய பகுதியில் பல நீர்நிலைகள் உருவானதால், வனத்துறை அதிகாரிகள் பொறிகளை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
"இந்தப் பகுதியில் ஏராளமான இரை உயிரினங்களும் உள்ளன. எனவே அமைத்துள்ள கூண்டுகளில் இருக்கும் இரை உயிரினங்கள் மீது சிறுத்தை ஆர்வம் காட்டவில்லை," என்றவர், இந்த விவகாரத்தில் ஊடகங்களின் கவனம் பெருகி வருவதும் பொதுமக்களின் அழுத்தமும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
"அதிகாரிகளும் பொதுமக்களும் விரைவான முடிவை எதிர்பார்க்கிறார்கள். எனவே, ஒவ்வொரு நாளும் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கும் அல்லது எங்கள் செயல்பாடுகளில் புதிய மாற்றங்களைச் செய்யும் சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், ஒரு சிறுத்தையைப் பிடிக்க மனிதத் தலையீடு மிகக் குறைவாகவும் அமைதியான சூழலும் இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
கர்நாடகாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுத்தைகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் காட்டுயிர் உயிரியலாளர் சஞ்சய் குப்பி இதை ஒப்புக்கொள்கிறார்.
"சிறுத்தைகள் ஒரு சின்ன இடையூறு ஏற்பட்டாலும், தாக்குவதைவிட அங்கிருந்து தப்பிச் செல்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆகவே பொதுமக்களின் அழுத்தம் காரணமாக, பெரிய அளவிலான சிறுத்தைப் பிடிப்பு நடவடிக்கைகள் நன்மையை விடக் கெடுதலையே அதிகம் செய்கின்றன," என்கிறார் சஞ்சய் குப்பி.
இந்த ஒரு சிறுத்தையைப் பிடிப்பதால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
"சிறுத்தைகளையும் அவற்றின் நடத்தைகளையும் மக்கள் புரிந்துகொள்ள உதவும் கூடுதல் திட்டங்கள் நமக்குத் தேவை. இது சகிப்புத் தன்மையையும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையையும் உருவாக்க உதவும். இதனால், மனிதர்களும் சிறுத்தைகளும் பாதுகாப்பான, அமைதியான முறையில் வாழ்விடத்தைப் பகிர்ந்து, இணைந்து வாழ முடியும்," என்கிறார் சஞ்சய் குப்பி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்