You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டில் முறையற்ற பிரசவம், கருவிலேயே இறந்த சிசு, தாயும் பலி - எங்கு நடந்தது?
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 21 வயதான பெண்ணும் அவருடைய ஏழு மாத சிசுவும் உயிரிழந்துள்ளனர். கூடலூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தவர் 21 வயதான ப்ரியா. இவர் மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் இவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் தொடர்ந்து சில நாட்களாக ப்ரியாவுக்கு கடுமையான வயிறு வலி இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தான் ப்ரியா ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் கருவை கலைக்க அந்த ஜோடி முற்பட்டனர். ஆனால் ஆறு வாரங்களை கடந்து விட்டதால் கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிக ரத்தப்போக்குடன் ப்ரியா நீலகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு வரும் முன்பே ப்ரியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின்பேரில் கூடலூர் காவல்துறையினர் ப்ரியாவின் மரணம் தொடர்பாக விசாரித்தனர். கூடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமாரிடம் இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் பேசியது.
"சிசு ஆறு வாரங்கள் வளர்ந்த பிறகே தான் கருவுற்றிருந்த விஷயம் ப்ரியாவுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் சிசுவை கலைக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டபோது கருவை கலைக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் எடுத்துக் கொண்ட முறை ஒத்துக் கொள்ளாமல் சிசு இறந்துவிட்டது. பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சிசுவை வீட்டிலேயே புதைத்துவிட்டனர்.
மகளுக்கு அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து வந்துள்ளனர்," என்று மகேஷ் குமார் கூறினார்.
குறைப்பிரசவம் காரணமா?
முதல் கட்ட விசாரணையில் சிசுவை புதைத்த தகவல் கிடைத்ததும் வருவாய் துறையினர் மூலம் புதைக்கப்பட்ட சிசுவை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். ப்ரியாவின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் கருவை கலைக்க வற்புறுத்தப்பட்டதாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அடுத்த கட்ட விசாரணை பற்றி முடிவெடுக்கப்படும்," என்று கூறினார்.
அதே சமயம் ப்ரியாவுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டதால் கூட உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் கூடலூர் காவல் ஆய்வாளர் அருள்.
"ப்ரியாவுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரமில்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். அந்த சிசு இறந்தே பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் சிசுவை வீட்டிலேயே புதைத்துள்ளனர். ரத்தப்போக்கு அதிகமான நிலையில் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வழியில் அவரது உயிர் பிரிந்து விட்டது," என்கிறார் அருள்.
இந்த நிலையில் கருவை கலைக்க மாத்திரை எடுத்துக் கொண்டார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை வந்த பிறகே தெளிவு கிடைக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ப்ரியாவை காதலித்த இளைஞர் மற்றும் அவரின் பெற்றோர், உறவினர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
கருக்கலைப்புக்கு எது சரியான காலம்?
இது பற்றி எழும்பூர் மகப்பேறு நிறுவனத்தின் இயக்குநரும் மருத்துவருமான விஜயாவிடம் பிபிசி தமிழிடம் கேட்டது.
"24 வாரங்களை தாண்டாத சிசு என்றால் தனியார் மற்றும அரசு மருத்துவமனைகளில் எந்த தடையும் இல்லாமல் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். ஆனால், 24 வாரங்களைத் தாண்டிய சிசு என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.
சிசு உடல்நலக் குறைவுடன் உள்ளது அல்லது பிழைப்பது கடினம் என்றும் தெரிந்தால் 24 வாரங்களைக் கடந்திருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். அதே போல் பாலியல் வன்முறை மூலம் கருவுற்றிருந்த சிசுவாக இருந்தால் 24 வாரங்களைக் கடந்திருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். 18 வயதை தாண்டாத பெண்களுக்கு மட்டுமல்ல 21 வயதை தாண்டியிருந்தாலும், திருமணம் ஆகாமல் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும்.
இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு குழந்தைகள் மருத்துவர் அடங்கிய குழு ஒன்று உள்ளது. அவர்கள் தான் இதன் மீது முடிவெடுப்பார்கள். 24 வாரங்களைத் தாண்டினால் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைக்கு தான் பரிந்துரைத்து அனுப்புவார்கள். இந்த குழு ஒவ்வொரு பிரசவத்தைப் பொறுத்து முடிவெடுக்கும் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் கருக்கலைப்பு மேற்கொள்ளலாம். இதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத, எந்த பாதிப்புக்கும் உள்ளாகாத பிரசவம் என்றால் கலைப்பது கடினம். அதனால் தான் மக்கள் மாற்று வழிகளை முயற்சிக்கிறார்கள். கூடலூர் பெண் விஷயத்தில் ஏழு மாதங்களை கடந்திருந்தும் கர்ப்பத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்றால் கலைத்திருப்பது கடினம் தான்," என்கிறார் மருத்துவர் விஜயா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்