You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பையில் இந்த 4 இந்திய வம்சாவளி வீரர்களும் எந்தெந்த நாடுகளுக்கு ஆடுகிறார்கள்?
- எழுதியவர், ஜான்வி முலே
- பதவி, பிபிசி நியூஸ் மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இந்தியாவின் சீனியர் அணி விளையாடுவதைக் காண வேண்டும் என்ற இந்திய கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த முறை நிறைவேறவில்லை.
இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்குகிறார்கள்.
ஜூன் 11 அன்று தொடங்கிய இந்தத் தொடரை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன, மேலும் இந்த முறை 48 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், பல்வேறு நாடுகளின் அணிகளில் விளையாடுவதைக் காணலாம்.
2006-ல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை விகாஷ் தோரசூ பெற்றார். ஆனால், அவரது சர்வதேச கால்பந்து செயல்பாடு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களான சர்பிரீத் சிங் (நியூசிலாந்து), நிஷான் வேலுப்பிள்ளை (ஆஸ்திரேலியா), தஹ்சீன் முகமது ஜம்ஷெத் (கத்தார்) மற்றும் சாமுவேல் முத்துசாமி (டிஆர் காங்கோ) ஆகியோர் உலகக் கோப்பையில் விளையாடுவதை இந்திய ரசிகர்கள் காண உள்ளனர்.
இந்த நால்வர் யார் என்று தெரிந்துகொள்வோம்.
சர்ப்ரீத் சிங் – நியூசிலாந்து
1999 இல் ஆக்லாந்தில் பிறந்த சர்பிரீத், நியூசிலாந்து கால்பந்து அணியின் மிட்ஃபீல்டர் ஆவார்.
இவரது பெற்றோர் பஞ்சாபிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் நியூசிலாந்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தது.
சர்பிரீத் சிறுவயதில் பல விளையாட்டுகளை விளையாடினார், ஆனால் கால்பந்து தான் அவரது முதல் விருப்பமாக இருந்தது. 2015 இல், தனது 16 ஆவது வயதில், வெலிங்டன் பீனிக்ஸ் கால்பந்து கிளப்புக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார்.
2018 ஆம் ஆண்டில், மும்பையில் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பையில் நியூசிலாந்து சீனியர் தேசிய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார் சர்பிரீத் .
அந்தத் தொடரில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. சர்பிரீத் அந்த இரண்டு கோல்களுக்கும் உதவினார் .
ஒரு வருடம் கழித்து, 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணியின் திறனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
விரைவில் அவர் ஜெர்மனியின் உயர்மட்ட கால்பந்து லீக் ஆன பன்டெஸ்லிகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார்.
பன்டெஸ்லிகாவில் விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை சர்பிரீத் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய கால்பந்து லீக்குகளில் உள்ள பல கிளப்புகளுக்காக விளையாடினார்.
தற்போது 27 வயதாகும் சர்பிரீத், நியூசிலாந்துக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளார். மேலும் கிளப் கால்பந்திலும் 34 கோல்களை அடித்துள்ளார்.
தஹ்சீன் முகமது ஜம்ஷெட் - கத்தார்
ஜூன் 16 அன்று 20 வயதை எட்டிய தஹ்சீன் முகமது ஜம்ஷெத், இந்த ஆண்டு உலகக் கோப்பையில் கத்தாருக்காக விங்கராக விளையாடவுள்ளார்.
தஹ்சீனின் தந்தை ஜம்ஷெத், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அவரது தாய் ஷியாமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த குடும்பம் 2006 முதல் கத்தாரில் வசித்து வருகிறது.
ஜம்ஷெத் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துக்காக கால்பந்து விளையாடியுள்ளார், மேலும் தனது மகனின் பயிற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கத்தாரில் உள்ள ஆஸ்பியர் அகாடமியில் பயிற்சி பெற்ற தஹ்சீனுக்கு, இளம் வயதிலேயே அல்-துஹைல் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விரைவில் அவர் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.
அவர் 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
தோஹாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற சர்ச்சைக்குரிய 2024 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியிலும் அவர் களத்தில் இருந்தார்.
அந்தப் போட்டியில் கத்தார் அணி இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஆனால் நடுவரின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது.
அவர் சர்வதேச அளவில் இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை.
நிஷான் வேலுப்பிள்ளை - ஆஸ்திரேலியா
25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, ஓர் ஆங்கிலோ-இந்திய தாய் மற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தந்தை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
நிஷான் ஆஸ்திரேலியாவில் பிறந்து மெல்போர்னில் வளர்ந்தார்.
கிளப் கால்பந்தில், அவர் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடுகிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியான சாக்கரூஸின் தாக்குதல் ஆட்டக்காரராக அவர் அறியப்படுகிறார்.
2024 ஆம் ஆண்டில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பை அவர் பெற்றார், மேலும் அதே போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச கோலையும் அடித்தார்.
இதுவரை ஏழு சர்வதேசப் போட்டிகளில் மூன்று கோல்களை அடித்துள்ளார் நிஷான் .
சாமுவேல் முத்துசாமி - காங்கோ ஜனநாயகக் குடியரசு
சாமுவேல் முத்துசாமியின் தந்தை இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் கரீபியன் பிராந்தியமான குவாடலூப்பைச் சேர்ந்தவர். அவரது தாய் காங்கோவை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பிறந்தார்.
ஃபிஃபா விதிகளின்படி, ஒரு வீரர் தனது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், ஆனால் அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
2019 முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக விளையாடி வரும் சாமுவேல் முத்துசாமி, இதுவரை 57 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச அளவில் அவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை, ஆனால் கிளப் கால்பந்தில் 14 கோல்களை அடித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு