செஸ் ஒலிம்பியாடில் புதிய முயற்சி: முதல்முறையாக போட்டியாளர்களுக்கு தியானம், யோகா பயிற்சி

yoga
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கு டென்மார்க்கில் இருந்து வந்துள்ளார் செஸ் மாஸ்டர் லூயிஸ் ஃபிரடெரிசியா. இவர் கடந்த ஒரு வார காலமாக, விளையாட செல்வதற்கு முன்னதாக பிராணயாமம் மூச்சுபயிற்சி செய்து தன்னை தயார்படுத்திக்கொள்கிறார். இதுவரை உலகளவில் நடைபெற்ற ஏழு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், இந்தமுறைதான் மூச்சுப்பயிற்சி செய்ததாக கூறுகிறார்.

லூயிஸ் ஃபிரடெரிசியா போல, பல நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் போட்டியாளர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா மற்றும் தியான பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.

தமிழக அரசின் உபசரிப்புகளில் ஒன்றாக, யோகா மற்றும் தியான பயிற்சி வழங்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள், போட்டியாளர்களும் ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்கள். தமிழக அரசின் இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட யோகா மருத்துவர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அக்கல்லூரியின் டீன் மணவாளன் தெரிவித்தார்.

பிராணாயாமம் பயிற்சி தன் மனதை இலகுவாக்கியதாக கூறும் செஸ் மாஸ்டர் லூயிஸ் ஃபிரடெரிசியா, இனி தான் பங்கேற்கும் போட்டிகளுக்கு செல்லும் முன் மூச்சு பயிற்சி செய்வதன் அவசியத்தை புரிந்துகொண்டுள்ளதாக கூறுகிறார். ''நான் பல நாடுகளுக்கு பயணித்து போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஏழு ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துள்ளேன். இதுவரை இதுபோன்ற யோகா, தியான பயிற்சிகள் எதுவும் எனக்கு கிடைத்ததில்லை. இங்கு நான் கற்றுக்கொண்டதில் பெருமைப்படுகிறேன். இனிவரும் போட்டிகளுக்கும் இந்த பயிற்சி உதவும் என்று நம்புகிறேன். எளிமையான தியான பயிற்சி செய்வதால், மனம் லேசாகுவதை உணரமுடிந்தது,''என்கிறார் லூயிஸ் ஃபிரடெரிசியா.

yoga

லூயிஸ் ஃபிரடெரிசியாவை போல நூற்றுக்கணக்கான செஸ் போட்டியாளர்களுக்கு அரசு யோகா மருத்துவர்கள் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குச் சென்று பயிற்சி தருவதாக சொல்கிறார் மருத்துவர் தீபா சரவணன். ''செஸ் விளையாட்டில் கவனக்குவிப்பு என்பது மிகவும்அவசியம். நீண்ட நேரம் அமர்ந்து, யோசனையில் ஆழ்ந்து விளையாடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்றவாறு, மூச்சு பயிற்சி, எளிமையான தியான பயிற்சி, முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்றுக்கு தயாராகும்போது என்ன பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என விவரித்தோம்.

பல நாடுகளில் இருந்து வந்திருந்த போட்டியாளர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி கொடுத்தபோது, பலரும் இந்த பயிற்சிகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக கூறினார்கள்.

போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் பயிற்சியாளர்களும் யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் உபசரிப்போடு, நம் கலாசாரத்தையும் கற்றுக்கொடுத்துள்ளதாக எண்ணுகிறோம்,''என்கிறார் மருத்துவர் தீபா.

யோகா பயிற்சி

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பை (FIDE)சேர்ந்த அலுவலர்களிடம் பேசியபோது, யோகா மற்றும் தியான பயிற்சிகள் இதுவரை பிற நாடுகளில் அளிக்கப்பட்டதில்லை என தெரிவித்தனர். ''போட்டியாளர்கள் அவர்களாகவே தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில பயிற்சிகள் செய்வார்கள். ஒருசிலர், உடற்பயிற்சி செய்வது, ஓய்வு எடுத்துக்கொள்வது என போட்டிகளுக்கு நடுவே தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக்கொள்வார்கள். இந்தமுறை இந்தியாவில் நடக்கும் ஒலிம்பியாட் நிகழ்வில்தான் இதுபோன்ற யோகா, தியான பயிற்சிகள் போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது,''என தெரிவித்தனர்.

பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒரு வெளிநாட்டில் ஒன்றுகூடுவதால், உணவு கட்டுப்பாட்டில் கவனம் அதிகம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ''சீனாவை சேர்ந்த போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டும்தான் சாப்பிடவேண்டும் என நிர்ணயம் செய்திருப்பார்கள். ரஷ்யாவில் இருந்து வரும் பெண் போட்டியாளர்கள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வின்போது நடைபெறும் பெர்முடா பார்ட்டி என்ற பார்ட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. இந்தமுறை போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தியான பயிற்சி அவர்களுக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது,''என்று தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: