பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்தது.

குறைவான பயன்பாடு கொண்ட, அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1ஆம் தேதி முதல் தடை செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதனை அமல்படுத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதை சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தடை விதிக்கப்படும் பொருட்கள்:

  • பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி
  • பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி
  • பிளாஸ்டிக் குச்சி
  • பிளாஸ்டிக் கொடி
  • மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக்
  • ஐஸ்கிரீம் குச்சி
  • அலங்கார வேலைகளுக்கான தெர்மாகோல்
  • சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி
  • சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள்

பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச எரிபொருள் சந்தை - கொள்முதலில் இந்தியா - இலங்கை இணைவா?

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை ஒரு தவணைக்கு 40,000 டன் வீதம் இலங்கை அரசு வாங்க உள்ளதாக டெய்லி மிர்ரர் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உலகச் சந்தையிலிருந்து மொத்தமாக எரிபொருளை சில தள்ளுபடிகளுடன் வாங்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில். இரு நாட்டு உறவு மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, இணைந்து எரிபொருள் வாங்குவதற்கான முன்வடிவை இலங்கை இந்தியாவிடம் அளித்துள்ளது. அதாவது, உலக சந்தையிலிருந்து இந்தியா வாங்கும் அதே தள்ளுபடி சலுகைகளுடன் இலங்கைக்கும் சேர்த்து எரிபொருள் வாங்கும்படியான கோரிக்கை முன்வடிவு இது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த யோசனையை அண்மைக்காலங்களில் தெரிவித்து வந்தார்.

தற்போது நான்கு தொகுப்புகளாக எரிபொருள் கொள்வனவை முன்னெடுக்க இலங்கை அரசு யோசனை தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக டீசல் கப்பல் வந்து சேரும். பின்னர் தேவையின் அடிப்படையில் பெட்ரோல் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை விற்கப்பட்டு பணமாக மாற கூடுதலாக ஒருவார கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை இந்தியாவிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றுள்ளது என்று டெய்லி மிர்ரர் செய்தி தெரிவிக்கிறது.

உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர் எம்.சண்முகம், தொடர்ந்த வழக்கை கடந்த ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'அதிமுக பொதுக்குழுவில் ஏற்கெனவே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்கள் குறித்தோ அல்லது கட்சி விதிகளில் திருத்தம் செய்வது குறித்தோ எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். அதையடுத்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளரான பழனிசாமி தரப்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

"அதிமுகவின் பொதுக்குழுவில் தலையீடு செய்து நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. அதிமுக அவைத் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கருத்தை பொறுத்தே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படும்.

கட்சி விதிகளின்படி பொதுக்குழுவுக்கே அனைத்து அதி்காரங்களும் உள்ளது. அதன்படி, விதிகளை திருத்தம் செய்யவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: