You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
No Kissing Zone: ஜோடிகளின் மறைவிடமாகும் பகுதிகள் - அதிரடி காட்டிய குடியிருப்புவாசிகள்
- எழுதியவர், மயங்க் பகவத்
- பதவி, பிபிசி மராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
மும்பையின் சில அரசு அலுவலகங்களிலோ தெருக்களிலோ பூங்காக்களிலோ, "புகை பிடிக்கக்கூடாது", "துப்பக்கூடாது" என்று அறிவிப்புகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஆனால் போரிவாலியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், அந்த கட்டடத்துக்கு வெளியில் உள்ள தெருவில் "முத்தமிடுவது தடை செய்யப்பட்ட பகுதி" (No Kissing Zone) என்று எழுதப்பட்டிருக்கிறது.
சத்யம் சிவம் சுந்தரம் சொசைட்டியைச் சேர்ந்த காலனியில் வசிக்கும் மக்கள், அங்கு வருபவர்கள் பொதுவெளியில் அன்பை வெளிப்படுத்துவதைப் பார்த்து இந்த அறிவிப்பை வைத்திருக்கிறார்கள்.
மும்பையில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் இருப்பதால், மரைன் ட்ரைவ், வோர்லி சீ ஃபேஸ் ஆகிய இடங்களில் அமர்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளும் மூடப்பட்டிருப்பதால் ஜோடிகளுக்கு சந்திப்பதற்கான இடம் கிடைப்பதில்லை.
ஏன் இப்படி ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது?
இரண்டாவது ஊரடங்குக்குப் பிறகு இது தொடங்கியது. ஊரடங்கு காலத்தில் இது வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறியது; பிறகு இங்கு ஜோடிகள் வரத் தொடங்கினர்.
இரு சக்கர வாகனங்களிலும் கார்களுக்குள்ளும் அமர்ந்து அவர்கள் முத்தமிடத் தொடங்கினார்கள்.
இங்கு வசிக்கும் ருசி பரேக் இதை முதன்முதலில் பார்த்திருக்கிறார். பிபிசியிடம் அவர் பேசும்போது, "இரண்டாவது ஊரடங்கின்போது ஒரு ஜோடி காலையும் மாலையும் வரும். முத்தமிடுவதைத் தாண்டி ஆபாச செயல்களில் ஈடுபட்டார்கள்.
பொதுவெளியில் இப்படி நடந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லிப்பார்த்தோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை," என்று தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஜோடிகளை புகைப்படம் எடுத்த குடியிருப்புவாசிகள், காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்கள்.
சத்யம் சிவம் சுந்தரம் சொசைட்டியின் தலைவர் வினய் அனசுங்கர் பேசும்போது, "போலீஸார் வந்து இவர்களை விரட்டியடிப்பார்கள், அவர்கள் சென்றபிறகு ஜோடிகள் திரும்ப வந்துவிடுவார்கள்" என்கிறார்.
ஆகவே "முத்தமிடுவது தடை செய்யப்பட்ட பகுதி" என்று ஓர் அறிவிப்பை குடியிருப்புவாசிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் ஜோடிகள் இங்கு உலவுவது குறையும் என நம்பிக்கை தெரிவிக்கிறர்கள்.
இந்த யோசனை எப்படி வந்தது?
சொசைட்டியின் தலைவர் வினய் அனசுங்கர் இந்த யோசனையைக் கூறியிருக்கிறார்.
"மும்பையில் பல அறிவிப்புப் பலகைகள் இருக்கும். அதைப் பார்த்ததும் நாமும் இந்த வாசகத்தை வைத்து ஓர் அறிவிப்புப் பலகை வைக்கலாம் என்று உறுப்பினர்களிடம் யோசனை சொன்னேன். பலரும் இவர்கள் செய்யும் ஆபாச செயல்களைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். ஆகவே இப்படி ஒரு யோசனை வந்தது" என்கிறார்.
ஆண்களும் பெண்களும் நின்று பேசுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆபாசமாக நடந்துகொள்வதுதான் நிறுத்தப்படவேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கிறார்கள்.
"இது முத்தமிடுவதைப் பற்றிய பிரச்னை அல்ல. இவர்கள் செய்யும் ஆபாச செயல்களைப் பற்றி சொல்லவே நாக்கு கூசுகிறது" என்கிறார் ருசி பரேக்.
"நாங்கள் ஜன்னல்களை மூடிவிடுவோம்"
இதுபோன்ற ஜோடிகள் மாலை ஐந்து மணிக்கு வருவார்கள் என்பதால் அந்த நேரம் ஜன்னலை மூடிவிடுவதாகக் கூறுகிறார்கள் குடியிருப்புவாசிகள். "மாலை டீ குடிக்கும்போதோ குடும்பமாக உட்கார்ந்து பேசுவதற்கோ ஜன்னலுக்கு அருகில் வருவோம். ஆனால் இதுபோன்ற ஆபாசங்கள் நடப்பதால் ஜன்னலை மூடிவிடுவோம். வீட்டில் குழந்தைகள், முதியவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கிறது" என்கிறார் ருசி பரேக்.
இந்த ஜோடிகளிடம் தாங்களே போய் பேசியும் குடியிருப்பு வாட்ச்மேனை அனுப்பிப் பேசியும் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் குடியிருப்புவாசிகள்.
இந்த அறிவிப்பு உதவியிருக்கிறதா?
"இப்படி எழுதி வைத்தபின்பு ஜோடிகள் வருவது குறைந்திருக்கிறது. சில சமயம் ஆண்களும் பெண்களும் வருவார்கள்; ஆனால் ஆபாசங்கள் நின்றுபோய்விட்டன" என்கிறார் ருசி பரேக்.
"முத்தமிடுவதில் எனக்குப் பிரச்னையே இல்லை. ஆனால் பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொள்வது பார்ப்பவர்களுக்கும் தர்மசங்கடமாக இருக்கும். காதல் என்றால் என்ன என்று இளையவர்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டும்" என்கிறார் வினய் அனசுங்கர்.
கோவிட் சூழல் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது?
மரைன் டிரைவ். பாந்த்ராவில் உள்ள பாண்ட் ஸ்டாண்ட் கடற்கரை, வோர்லி சீ ஃபேஸ் போன்ற இடங்கள் ஜோடிகள் சந்திக்கும் இடங்களாக இருந்தன. இளையவர்கள் பலரும் இங்கு அடிக்கடி வருவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால் எல்லா பொது இடங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
இந்த இடங்களில் காலை நான்கு மணி நேரமும் மாலை மூன்று மணி நேரமும் நடப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. அதற்கு மேல் அங்கு இருப்பவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
கிர்காம், ஜுஹு கடற்கரைகளும் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருக்கின்றன. ஆகவே, பொழுதுபோக்க எங்கே செல்ல வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஜோடிகள் என்ன சொல்கிறார்கள்?
மும்பையின் பொது இடங்களில் ஜோடிகள் உலாவுவது பற்றி பல ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் பொது இடங்கள் மூடப்பட்டிருப்பதால் சந்திப்பதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
பெயர் வெளியிடக்கூடாது என்ற உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு பிபிசியிடம் பேசிய முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவர், "ஊரடங்கு காலத்தில் சந்திக்க முடியவில்லை. கடற்கரைகளையும் பூங்காக்களையும் மூடிவிட்டார்கள். எங்குதான் சந்திப்பது? சாலைகளில் அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. யாருக்கும் நாங்கள் தொந்தரவு தருவதில்லை" என்கிறார்.
பிற செய்திகள்:
- சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: வுஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை
- "வாழ விருப்பம் இல்லை, குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்"- வருத்தத்தில் யாஷிகா ஆனந்த்
- சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- மீரட்டில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக முஸ்லிம் பெண் புகார்
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்