துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் மிரட்டல்: காவல்துறை அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது

பிரசுரிக்கப்பட்டது

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சென்னை மாதவரம் காவல்துறை ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு. உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சதீஷ்குமார் என்பவர் முன்பு மணலி காவல் நிலையத்தில் காவல்துறை சிறப்புப் படையின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். அப்போது மணலியில் உள்ள நியாய விலைக்கடையில் பணியாற்றும் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் 15 வயது மகளுக்குத் தெரியவந்தது. அதனை அந்தச் சிறுமி தன் தந்தையிடம் தெரிவிக்கப்போவதாகக் கூறினாள்.

இதையடுத்து அந்தச் சிறுமியை சதீஷ்குமார் துப்பாக்கியால் மிரட்டியுள்ளார். "இதை வெளியில் சொன்னால் உன்னையும் உன் தம்பியையும் சுட்டுக் கொன்றுவிடுவேன்" என்றும் கூறியுள்ளார்.

இதில் பயந்துபோன சிறுமி விஷயத்தைத் தன் தந்தையிடம் சொல்லாமல் இருந்துள்ளார். பிறகு சிறுமியையும் பாலியல் ரீதியான உறவுக்கு அழைத்த சதீஷ், இதற்காக சிறுமியின் தாய்க்கும் அவரது பெரியம்மாவுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடன்படாத அந்தச் சிறுமி தனது பாட்டியிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.

பிறகு அந்தப் பெண்ணின் பாட்டி, சிறுமியின் தந்தையிடம் நடந்ததைச் சொல்லியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சதீஷ்குமார், அந்தச் சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. சதீஷ்குமார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :