தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தற்போது தமிழ்நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இவர்களில் 264 பேர் டெல்லி மாநாடு தொடர்புடைய நோயாளிகள் என அறியப்பட்டிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் 86,342 பேர் கொரோனா தொடர்பாக வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அரசின் கண்காணிப்பின் கீழ் 90 பேர் உள்ளனர். 4070 பேர் 28 நாள் வீட்டுக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி தப்லிக் ஜமாத் நிகழ்வுக்கு சென்று வந்ததாக கண்டறியப்பட்ட 1103 பேருக்குமே சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் இன்னும் சிலருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவருமே நல்ல நிலையில் இருப்பதாகவும் இதுவரை 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில், இந்த நோயைச் சோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது 17 ஆய்வகங்கள் இருக்கும் நிலையில் மேலும் 6 ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வீட்டிலிருப்பவர்களைக் கண்காணிக்க கிட்டத்தட்ட 4585 களப்பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: