தேர்தல் முடிவுகள்: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் யாருக்கு வெற்றி?

பட மூலாதாரம், Election Comission of India
இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு அக்டோபர் 21 அன்று நடந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று, வெளியாகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஹரியாணாவில் காங்கிரசை விடவும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக முன்னிலை வகிப்பதால் இழுபறியாக உள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 163 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும், பிற கட்சிகள் 33 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவில் முறையே 288 மற்றும் 90 இடங்கள் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான 17வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின் சட்டமன்றங்களுக்கு நடக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் பாஜக - சிவா சேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலில் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மூலம் ஆட்சியமைத்த இந்தக் கட்சிகள் இந்த முறை தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொண்டன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
ஹரியாணாவைப் பொறுத்த வரை பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
இதுவரை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமான சூழல் இருப்பதாகக் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















