நடிகர் ரஜினிகாந்த்: "புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா பேசிய கருத்தை ஆதரிக்கிறேன்"

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "நடிகர் சூர்யா கருத்தை ஆதரிக்கிறேன்" - நடிகர் ரஜினிகாந்த்
'புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா பேசிய கருத்தை ஆதரிக்கிறேன்' என்று ரஜினிகாந்த் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. 'ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோதி கேட்டிருப்பார்' என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோதி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார்.

பட மூலாதாரம், Facebook
எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்." என்றார்.


தினமணி: 'வலியுறுத்துவோம்' - தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், ARUN KARTHICK
"தமிழக நிதி நிலைமை குறித்து, சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே வரவேண்டிய நிதியை பெறுவதற்கு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அணை பாதுகாப்பு மசோதா விவகாரம்: அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வரப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுத்ததன் விளைவாக அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. மீண்டும் கொண்டு வந்தால், எம்.பி.க்கள் அவையிலே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். கேரளத்தில் கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்துக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்கக் கூடிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கடந்த கூட்டத் தொடரிலேயே வலியுறுத்தினோம். ஆனால், கொண்டு வரப்படவில்லை.
இப்போது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்துக்குப் பாதுகாப்பான சட்டத்தைக் கொண்டு வந்தால் ஏற்போம். மாநிலத்துக்கு உகந்ததாக இல்லை என்றால் அதை எதிர்ப்போம். எந்தவொரு மாநில அரசும், அணை கட்டவோ, நீரை மறுபக்கம் திருப்பவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தீர்ப்பின் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று குரல் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்." என்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறுகிறது தினமணி நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பரோலில் வருகிறார் நளினி'

பட மூலாதாரம், Getty Images
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்தார். ஆனால், ஒரு மாதம் மட்டுமே பரோல் ஜூலை 5ம் தேதி வழங்கப்பட்டது.


பட மூலாதாரம், Dinamani

இந்து தமிழ் திசை: 'வடதமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு'
வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி, கோவை,தேனி மற்றும் நெல்லை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் கன மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது." - இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














