You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாசப் பட வழக்கு: இளம் பெண்ணை சிறைக்கு அனுப்பிய மியான்மர் ராணுவ நீதிமன்றம்
மியான்மரில், வயது வந்தோருக்கான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றும், சந்தா இணையதளமான ஒன்லிஃபேன்ஸ் (onlyfans) மற்றும் பிற தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் மாடல் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாடலிங் செய்பவரும், முன்னாள் மருத்துவருமான நாங் ம்வே சான் என்பவர் மீது கலாசாரத்துக்கும், கண்ணியத்துக்கு தீங்கு விளைவித்ததாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
2021ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மியான்மரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிரான போராட்டங்களிலும் நாங் ம்வே சான் முன்பு பங்கேற்றிருந்தார்.
ஒன்லிஃபேன்ஸ் தளத்தில் பதிவிட்ட உள்ளடக்கத்திற்காக மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் நபர் இவர்.
போராட்டங்களில் பங்கேற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும் பதிவேற்றிய இன்னொரு மாடல் பெண்ணான தின்சார் வின்ட் கியாவும், இதே சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். வரும் அக்டோபர் மாதம் அவர் விசாரணையை எதிர்கொள்வார்.
கட்டணம் பெற்றுக்கொண்டு, சமூக ஊடகங்களில் நிர்வாணப் புகைப்படங்களையும், காணொளிகளையும் நாங் ம்வே சான் விநியோகித்ததாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம்.
ராணுவ சிறப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யாங்கோனின் வடக்கு டாகோன் டவுன்ஷிப் பகுதியில் இந்த மாடல் வாழ்ந்து வந்தார்.
இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட மியான்மரின் அவசர சட்டங்களின் கீழ் வருகின்ற பகுதிகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராணுவ நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். வழக்கறிஞரை அணுகும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு, பல அரசியல் கைதிகள் அனுப்பப்பட்ட மோசமான சிறைச் சாலையும், மியான்மரிலுள்ள மிகப் பெரிய சிறைச் சாலையுமான இன்செயின் சிறைச்சாலை நீதிமன்றத்தில் நாங் ம்வே சான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது குறித்து பேசுகையில் அவரது தாயார், சமீபத்திய வாரங்களில் தமது மகளைத் தொடர்பு கொள்ள முடிந்தது என்றும், புதன்கிழமை ராணுவ ஊடகம் உறுதிசெய்யும் வரை தீர்ப்பு குறித்து தெரியவில்லை என்றும் பிபிசியின் பர்மிய மொழி சேவையிடம் தெரிவித்தார்.
2021 பிப்ரவரி மாதம் மியான்மர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சி-யின் அரசை அந்நாட்டு ராணுவம் அகற்றியது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளையும், பரவலான எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டியது.
ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, ஆங் சான் சூ ச்சி, பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் உள்பட 15,600-க்கு மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
1,200-க்கும் மேலானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 2,322 அரசியல் கைதிகள் ராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு என்கிற கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், குடிவரவு சட்டங்களை மீறியதாக மியான்மருக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் விக்கி பௌமானும், அவரது கணவரும் ஓராண்டு சிறை தண்டனை பெற்றனர்.
ஆனால், குடிவரவுக் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டவர்கள் மியான்மரில் தண்டனை பெறுவது மிகவும் அரிதானது. எனவே, அவர்களின் வழக்கு, குடிவரவு குற்றங்கள் என்பதை விட விரிவான அரசியல் நோக்கமுடையது என்று கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்