You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாற்று பிழை திருத்தம்: சூனியக்காரிகள் என்று கொல்லப்பட்ட கேட்டலோனிய பெண்களுக்கு பொது மன்னிப்பு
15 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் சூனியக்காரிகள் என்று கருதப்பட்டு கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான பெண்களுக்கு, கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு வழங்கியுள்ளது. கேட்டலோனியா ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு தன்னாட்சி பிராந்தியம் ஆகும்.
கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட 700க்கும் மேற்பட்ட பெண்களின் நினைவை மீண்டும் சரியாகக் கட்டமைக்க வேண்டும் என்கிற தீர்மானத்துக்கு அப்பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாக ஆதரவளித்து நிறைவேற்றியுள்ளனர்.
ஐரோப்பாவில், சூனியக்காரிகளை வேட்டையாடும் கலாசாரத்தை ஆரம்ப காலங்களிலேயே கொண்டிருந்த பகுதிகளில் கேட்டலோனியாவும் ஒன்று என, ஸ்பானிய வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சூனியக்காரிகளாகக் கருதப்பட்ட பெண்கள் கொலை செய்யப்படும் மோசமான பகுதிகளில் ஒன்றாக கேட்டலோனியா கருதப்படுகிறது.
"15 - 18ஆம் நூற்றாண்டு வரை துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர் பட்டியலை சமீபத்தில்தான் கண்டுபிடித்தோம்," என்று அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த குழுவினர்கள் கூறினர்.
திடீரென குழந்தைகள் இறந்து போனால் அல்லது நல்ல அறுவடை இல்லை என்றால் சூனியக்காரிகள்தான் காரணமென பழி கூறப்பட்டது என பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நவீன வரலாற்றுப் பேராசிரியர் பாவ் காஸ்டெல் கூறுகிறார்.
பெண்களுக்கு எதிரான மனநிலை மற்றும் துன்புறுத்தலுக்கு பலியானவர்கள் அவர்கள் என்று சுதந்திரத்துக்கு ஆதரவான மற்றும் இடதுசாரிக் குழுக்கள் கூறுகின்றன. மேலும் அவர்களின் பெயர்களை சாலைகளுக்கு சூட்டுவதன் மூலம் அவர்களது நினைவுகள் கெளரவிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றன.
ஐரோப்பிய கண்டம் முழுமைக்கும் உள்ள ஆயிரக் கணக்கானவர்கள் (பெரும்பாலானோர் பெண்கள்), சூனியக்காரர்களாகக் கருதப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இதே போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
"முன்பு அவர்கள் எங்களை சூனியக்காரிகள் என்றழைத்தனர், இப்போது எங்களை 'ஃபெமிநாஜி' (தீவிர பெண்ணியவாதம் பேசுவோரை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்) என்று அழைக்கின்றனர் அல்லது பாலியல் ரீதியில் விரக்தி அடைந்தவர்கள் என்று அழைக்கின்றனர் அல்லது மிகை உணர்ச்சிப் பிரச்னை கொண்டவர்கள் என்று அழைக்கின்றனர்" என்று கேட்டலோனியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் டயஸ் கூறியதாக ஏ.எஃப்.பி முகமையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா?
- உ.பி-யில் பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள் - தேர்தல் நேரத்தில் தீர்வு வருமா?
- தமிழ்நாடு ஆளுநருக்கு தங்கம் தென்னரசு எதிர்வினை - நீட், மொழிக்கொள்கை விவகாரம்
- நிலவின் மீது மோதி வெடிக்க உள்ள ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: