செளதி அரேபியாவின் அரசர் சல்மான் மருத்துவமனையில் அனுமதி

அரசர் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

சௌதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சௌதி அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை ஸ்பா தெரிவித்துள்ளது.

84 வயதாகும் அரசர் சல்மான் பித்தப்பையில் ஏற்பட்டுள்ள அழற்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் மருத்துமனையில் சில பரிசோதனைகள் எடுக்க வேண்டியுள்ளதால் அனுமதிக்கப்பட்டுளளதாக அந்த செய்தி முகமையின் அறிக்கை கூறுகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடான சௌதி அரேபியாவின் அரசராக கடந்த 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ்.

அரசர் சல்மான் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகளாக பட்டத்து இளவரசராகவும் பணியாற்றியிருக்கிறார்..

சௌதி அரேபியா அரசை நிறுவிய அரசர் கிங் அப்துலாசிஸ் பின் அப்துல் ரஹ்மானின் 25-வது மகன்தான் சல்மான். 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி ரியாத்தில் பிறந்தார். பத்தொன்பது வயதிலேயே அதாவது 1954-ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி ரியாத் பிராந்தியத்துக்கு செயல் கவர்னராக நியமிக்கப்பட்டார் சல்மான். அதற்கு அடுத்த ஆண்டே அவர் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக ரியாத் பிராந்தியத்தின் கவர்னராக அவர் செயல்பட்டுள்ளார். இவரது நிர்வாக காலத்தின் கீழ் சுமார் 2 லட்சம் பேர் வாழ்ந்து வந்த சிறு நகரம் தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கக் கூடிய பகுதியாக உருவெடுத்துள்ளது என்கிறது ஸ்பா செய்தி முகமை.

இளவரசராக இருந்த சல்மான் கடந்த 2011-ம் ஆண்டு சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இது மட்டுமின்றி பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.மெக்கா , மெதினா பல்கலைகழகங்கள் மட்டுமின்றி இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாகடர் பட்டத்தையும் பெற்றுள்ளார் சல்மான்.

அரசர் சல்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் சௌதி அரேபிய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சௌதியின் வெளியுறவு அமைச்சர் திங்கள் கிழமையன்று தெரிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

முடியரசர் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

சௌதியின் அரியணையில் அடுத்து அமர இருப்பவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். எண்ணெய் வளத்தை மட்டுமே பெரிதாக நம்பியிருக்கும் சௌதியின் முகத்தை மாற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை செய்துவருவபவராக முகமது பின் சல்மான் பார்க்கப்படுகிறார்.

34 வயதாகும் பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் சௌதி பத்திரிகையாளர் கசோக்ஜி கொலை செய்ய உத்தரவிட்டதாக முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதை அவர் ஒரு பேட்டியில் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: