'நாங்கள் பழகிய துபை அல்ல' - இரான் தாக்குதல் இந்த நகரத்தில் ஏற்படுத்திய விளைவு என்ன?

    • எழுதியவர், ஆலிஸ் கட்டி ,மேரி லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்ரியலா போமராய்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியம் முழுவதும் இரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் துபையில் வசிப்பவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபையின் முக்கிய விமான நிலையம் ஆகியவை சேதமடைந்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு சுற்றுலா சென்றவர்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை விவரித்தனர்.

அங்கு வசிக்கும் பெக்கி வில்லியம்ஸ், "நேற்று எனது வீட்டிற்குப் பின்னால் இருந்து சுமார் 15 ஏவுகணைகள் ஏவப்படுவதைக் கண்டேன்" என்றார்.

இரானிலிருந்து வந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அவர் குறிப்பிட்டார்.

"அவை இடைமறிக்கப்படுவதை கேட்க முடிகிறது," என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் தனது வான்வெளியைப் பாதுகாக்கும் என்று கூறிய அவர், "இது விரைவில் சரியாகிவிடும்" என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் நடத்திய தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தன.

துபையின் ஆடம்பரமாக உருவாக்கப்பட்ட தீவுக்கூட்டமான பாம் ஜுமேராவில் , ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஃபேர்மாண்ட் தி பாம் ஒரு பெரிய வெடிப்பால் பாதிக்கப்பட்டது.

இடைமறிக்கப்பட்ட டிரோனின் சிதறல்களால் ஐந்து நட்சத்திர ஹோட்டலான புர்ஜ் அல் அரப்பின் வெளிப்புற முகப்பில் "சிறிய தீ" ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபையில் வசிக்கும் மற்றொரு நபர் பிபிசியிடம் , "கடந்த 24 மணிநேரத்தில் நாங்கள் அனுபவித்தது, மோதல் பகுதிகளில் மற்றவர்கள் அனுபவித்து வருவதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. எனவே இது எங்களுக்கு ஒரு தெளிவான பார்வையைத் தருகிறது," என்றார்.

இதற்கிடையில், சத்யா ஜெகநாதனின் ஞாயிற்றுக்கிழமை திட்டங்கள் இந்த சம்பவங்களால் நிறைவேறாமல் போய்விட்டன.

"இப்போது நாங்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

35 வயதான அந்த பெண், தனது சகோதரியின் குடும்பத்தினரும் செல்லப்பிராணிகளும் ஜெபல் அலி துறைமுகத்திற்கு அருகில் வசித்ததாலும், அங்கு "நிறைய சிதறல்கள் விழுந்து கொண்டிருந்தன" என்பதாலும், அவர்கள் தங்களது குடியிருப்பிலேயே தஞ்சமடைய வேண்டியிருந்தது என்றார்.

'நாள் முழுவதும் பல ஏவுகணைகளின் சத்தம்'

உலகின் ஒன்பதாவது பரபரப்பான துறைமுகமான இங்குள்ள ஒரு தளத்தில், "வான்வழி இடைமறிப்பு" காரணமாக ஏற்பட்ட பாகங்களின் சிதறல்களால் தீ விபத்து ஏற்பட்டதாகச் சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஒவ்வொரு சில மணிநேரத்திற்கும் ஒருமுறை பலத்த சத்தம் மட்டுமே கேட்பதால் ஓரளவிற்கு அமைதியாகவே இருக்கிறது. ஆனால் இது நாங்கள் பழகிய துபை அல்ல என்பதால் ஒருவித அச்சமூட்டும் சூழல் நிலவுகிறது," என்று ஜெகநாதன் விளக்கினார்.

அதிகாரிகள் "சம்பவம்" என்று குறிப்பிடும் ஒன்றால் துபை சர்வதேச விமான நிலையமும் சேதமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூடி ட்ரோட்டர் சனிக்கிழமை தனது விடுமுறை முடிந்து லண்டன் திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் அவர் விமான நிலையம் வந்தடைந்தபோது அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

"தங்களது பயணத் திட்டங்கள் குறித்து மிகவும் வருத்தமடைந்த நபர்களை நான் சந்தித்தேன், விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தனர். இறுதிச் சடங்குகளைத் தவறவிடுவதாக என்னிடம் கூறியவர்களையும் நான் சந்தித்தேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அங்கிருந்த பல பயணிகள் இணைப்பு விமானத்துக்காக வந்தவர்கள் என்றும் இப்போது அங்கே சிக்கிக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ட்ரோட்டர் உட்பட தவித்துக் கொண்டிருந்த சுமார் 1,000 பயணிகள் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர், அங்கிருந்த ஜன்னல்களை விட்டு விலகி இருக்குமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

"ஹோட்டலில் நிறைய கண்ணாடிகள் உள்ளன, அது கவலையளிக்கிறது" என்று கூறிய அவர், "நாள் முழுவதும் பல ஏவுகணைகளின் சத்தத்தை" கேட்டதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு பிரிட்டன் சுற்றுலாப் பயணியான கேட் பிஷர், தானும் தனது குடும்பத்தினரும் "மிகவும் பயந்துபோயுள்ளதாக" கூறினார்.

சனிக்கிழமை மாலை, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரும் அவரது துணையும் "அவசரகால பையை" தயார் செய்ததாகக் கூறினார்.

மேலும், "இரவில் தீ விபத்து போன்ற சூழலில் தப்பிக்க" வேண்டியிருந்தால் தேவைப்படும் என்பதால் குளியலறை அங்கிகள் மற்றும் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு விசித்திரமான நாளாக இருந்ததாகவும் கூறிய அவர், ''ஒரு பக்கம் மக்கள் விடுமுறையை அனுபவித்து குழந்தைகளை மகிழ்விக்க மறு பக்கம் டிரோன், ஏவுகணை தாக்கிய பகுதிகளில் இருந்து புகை வருவதை காண முடிந்தது"என தெரிவித்தார்.

ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் (Strictly Come Dancing) போட்டியாளரான விக்கி பேட்டிசன், துபையில் பாதுகாப்பான தங்குமிடத்திற்கு செல்ல வேண்டியவர்களில் ஒருவராக இருந்தார்.

துபை, பணக்காரர்களும் பிரபலங்களும் விரும்பும் இடமாகவும் அறியப்படுகிறது.

பேட்டிசன் தனது கணவர் எர்கன் ரமடாவுடன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல வேண்டிய அவர்களது விமானம் ரத்து செய்யப்பட்டது.

'ஐ ஆம் எ செலிபிரிட்டி... கெட் மீ அவுட் ஆஃப் ஹியர்' (I'm A Celebrity... Get Me Out Of Here) நிகழ்ச்சியின் முன்னாள் வெற்றியாளரான அவர், தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.

அதில், "தற்போது நிம்மதியற்ற சூழலிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கும் அனைவரைப் பற்றியும் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்று எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு