நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி நபர் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவருக்கு காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆன்டனி ஜூர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் இளைய மேயர், அதன் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்ரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்புகளை அவர் பெறுகிறார்.
முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்து அவர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது.
அதற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளில் பலர் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இளமை, ஆளுமை மற்றும் அவரது தலைமுறைக்கே உரித்தான சமூக ஊடக இணக்கம் ஆகியவற்றை அவர் கொண்டிருக்கிறார்.
அவரது இனம் கட்சியின் அடித்தளத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அத்துடன், இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தடையற்ற சந்தை கட்டமைப்பில் அரசாங்க தலையீடு போன்ற இடதுசாரி கருத்துகளை அவர் ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு முன்னுரிமையாக இருந்த பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் திறனையும் மம்தானி வெளிப்படுத்தியுள்ளார். அவர் இடதுசாரிகளின் கலாசாரக் கொள்கைகளை மறுக்கவில்லை.
ஆனால் பரந்துபட்ட அமெரிக்காவில் இத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தன்னைத் தானே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டவரை ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி முகமாக குடியரசுக் கட்சியினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க் நகரில், அவர் ஒரு வெற்றியாளராக இருந்தார்.
மேயர் தேர்தலில் மம்தானியின் பரப்புரை மிகப்பெரிய அளவில் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கான மேயர் தேர்தலைக் காட்டிலும் ஒருவேளை இது அதிகமாக இருக்கலாம்.
மேயராக, அவரது வெற்றிகள் மற்றும் தோல்விகள் உன்னிப்பாக ஆராயப்படும் என்பதையும் இது குறிக்கிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் ஒரு தளத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் டி ப்ளாசியோ வெற்றி பெற்றார். மம்தானியைப் போலவே, இடதுசாரி அமெரிக்கர்களும் அவரது நிர்வாகம் திறமையான தாராளமய நிர்வாகத்திற்கு ஒரு தேசிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இருப்பினும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகிய டி ப்ளாசியோ பரவலாக பிரபலமடையவில்லை. புதிய கொள்கைகளை செயல்படுத்த தனது மேயர் அதிகாரத்தின் வரம்புகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.
மம்தானியும் அதே வரம்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.
சக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மம்தானியின் லட்சிய திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவதை எதிர்க்கிறேன் என்று ஏற்கெனவே கூறியுள்ளார்.
போதுமான நிதி இருந்தாலும், மம்தானியால் ஒருதலைபட்சமாக திட்டங்களை செயல்படுத்த முடியாது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதெல்லாம் பிற்காலத்திற்கான பிரச்னை. இப்போதைக்கு, பொது வெளியில் தமது பிம்பத்தை வரையறுக்கும் பணியை தனது எதிரிகளுக்கு முன்பாக மம்தானி தொடங்க வேண்டும்.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு, அமெரிக்க மக்களில் 46% பேர் நியூயார்க் மேயர் தேர்தலை "நெருக்கமாகப் பின்தொடரவில்லை" என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது மம்தானி மற்றும் அமெரிக்க இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள பழமைவாதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை ஒரு சோசலிச அச்சுறுத்தலாக சித்தரிக்க முயற்சிப்பார்கள். "அதன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு அழிவைக் கொண்டுவரும், நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆபத்தை ஏற்படுத்தும்" என்று அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கலாம்.
ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஊதிப் பெருக்கி, ஒவ்வொரு எதிர்மறை பொருளாதார குறிகாட்டியையும் அல்லது குற்ற புள்ளிவிவரத்தையும் அவை முன்னிலைப்படுத்தும்.
நியூயார்க்குடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்ட டிரம்ப், மம்தானியுடன் ஒரு அரசியல் மோதலை வரவேற்பார் என்பது உறுதி. புதிய மேயரின் வாழ்க்கையை சிக்கலாக்க அவருக்கு ஏராளமான வழிகள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், மம்தானிக்கு உள்ள வாய்ப்பு என்னவென்றால், பிரசாரத்தின் போது அவரது அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற அவரது கடந்த காலம் அவருக்கு சுமையாக இல்லை.
ஜனவரியில் அவர் பதவியேற்கும் போது, புதிதாக அரசியல் நற்பெயரை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவருடன் டிரம்ப் பகைமை கொண்டால் மம்தானிக்கு அவர் ஒரு பெரிய தளத்தை வழங்குவதாக அமையும்.
மம்தானியின் அரசியல் திறமையும் திறன்களும் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளன. இது சிறிய சாதனையல்ல. ஆனால் வரும் ஆண்டுகளில் அவருக்கு காத்திருக்கும் சோதனைகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
ஸோஹ்ரான் மம்தானியின் இந்திய பின்னணி
(பிபிசி இந்தி சேவை வழங்கிய கூடுதல் விவரங்கள்)
- ஸோஹ்ரான் குவாமே மம்தானி 1991ஆம் ஆண்டு உகாண்டா தலைநகரான கம்பாலாவில் பிறந்தார். புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் தந்தை அவருக்கு குவாமே என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.
- புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி ஆகியோரின் மகன்தான் இந்த ஸோஹ்ரான் குவாமே மம்தானி.
- ஆரம்ப நாட்களை கம்பாலாவில் கழித்த அவர், 5 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1848 ஆம் ஆண்டு கேப்டவுனில் நிறுவப்பட்ட தென் ஆப்ரிக்காவின் பழமையான செயின்ட் ஜார்ஜ் கிராமர் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.
- மம்தானிக்கு 7 வயதாக இருக்கையில் அவரது குடும்பம் நியூயார்க் குடிபெயர, அங்கே பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியில் அவர் பயின்றார்.
- 2014ஆம் ஆண்டு,போடன் கல்லூரியில் ஆப்ரிக்க ஆய்வுகளில் அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- சில ஆண்டுகளுக்குப் பிறகு 2018-இல், மம்தானி அமெரிக்க குடிமகன் ஆனார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












