இரக்கமின்றி சொந்த குழந்தையை பல ஆண்டுகள் நோய்வாய்ப்படுத்திய தாய் - குழந்தை மீண்டது எப்படி?

ஒரு 1982 ஆம் ஆண்டு புகைப்படம், ஏழு வயதில் நினா ப்ளோம் ஒரு வீட்டிற்குள் கோடைகால ஆடை அணிந்திருப்பதைக் காட்டுகிறது. அவர் குட்டையான பொன்னிற முடியைக் கொண்டுள்ளார் மற்றும் அவரது முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை உள்ளது. அவர் மாதிரி கப்பல்களின் முன்னால் அமர்ந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, ஏழு வயதில் நினா ப்ளோம்
    • எழுதியவர், இண்டியா ரகுசேன்
    • பதவி,
    • எழுதியவர், ராடெக் போஷெட்டி
    • பதவி, பிபிசி அவுட்லுக்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த 1970கள் மற்றும் 1980களில் நெதர்லாந்தில் வளர்ந்த நினா ப்ளோம், ஒரு சாதாரண குழந்தையைப் போலவே தோன்றினார். அவர் இசை, பாடுதல், நடனம் ஆகியவற்றை விரும்பினார், தனது குடும்ப வீட்டின் மாடியில் சகோதரியுடன் விளையாடிய மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டுள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் அரிதானவையாக இருந்தன.

அவர் தனது வீட்டைவிட்டு வெளியேற எப்போதாவதுதான் அனுமதிக்கப்பட்டார். எட்டு வயதில் இருந்தே, அவர் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தாய் அவரை நம்ப வைத்தார். அவர் அவரைப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக மீண்டும் மீண்டும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றார். சில ஆண்டுகளிலேயே ஆறு மருத்துவமனைகளுக்கு 15 முறை அழைத்துச் சென்றார். காலப்போக்கில், நினாவை சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வைத்ததுடன், அவருக்கு குணப்படுத்த முடியாத தசை நோய் இருப்பதாகவும், அவர் இறந்து கொண்டிருப்பதாகவும் நினாவின் தாய் அவரிடம் கூறினார்.

பல ஆண்டுகளாக பல மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதித்த போதிலும், அவருக்கு என்ன ஆனது என்று யாராலும் விளக்க முடியவில்லை. ஆனால், ஒரு நுண்ணறிவுமிக்க மருத்துவரால் மட்டுமே நீனாவின் கதையின் சிதைந்த துண்டுகளை ஒன்றாக இணைத்து, அவரது 'நோய்' என்பதற்கான உண்மையான, அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிக்கொணர முடிந்தது. அந்தக் காரணம், அவரது தாய்.

'முன்சாசன் சிண்ட்ரோம் பை பிராக்சி' (Munchausen Syndrome by Proxy) என்றும், 'புனையப்பட்ட அல்லது தூண்டப்பட்ட நோய்' (Fabricated or Induced Illness - FII) என்றும் அழைக்கப்படும் 'குழந்தை நோய் புனைதல்' (Paediatric Condition Falsification) என்பது ஒரு வகையான குழந்தை வதை ஆகும். இதில் குழந்தையைப் பராமரிப்பவர், வழக்கமாக ஒரு பெற்றோர், குழந்தையின் நோயை மிகைப்படுத்திக் கூறுகிறார், நோயைப் பற்றி பொய் உரைக்கிறார் அல்லது வேண்டுமென்றே குழந்தைக்கு நோயை உண்டாக்குகிறார். இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

முதல் மருத்துவமனை அனுமதிகள்

நினாவுக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவர் அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகளால் அவதிப்படத் தொடங்கினார் மற்றும் கணிசமான எடையை இழந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு ஆப்பிள் ஜூஸ் மற்றும் சூப் வழங்கப்பட்டது, விசித்திரமாக, அவர் குணமடையத் தொடங்கினார்.

"நினா நலமாக இருக்கிறார்... அவர் வீட்டிற்குச் செல்லலாம்' என்று மருத்துவர் கூறுவார்."

ஆனால் நினாவின் தாய் அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்ப வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். மேலும் அவருக்கு வலிக்கவில்லை என்றாலும்கூட அவருக்கு இன்னும் வயிறு வலிப்பதாக மருத்துவர்களிடம் கூற வேண்டுமென வற்புறுத்தினார்.

மூன்று வயதில் நினா ஒரு பழைய பாணி சுழலும் (rotary style) கருப்புத் தொலைபேசியுடன் விளையாடுவதைக் காட்டுகிறது. அவர் நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கிறார். அந்த அறையில் 1970களின் தனித்துவமான வடிவமைப்பு கொண்ட சுவரொட்டி மற்றும் அடர் வண்ண மரச்சாமான்கள் உள்ளன.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, இளம் குழந்தையாக, நினாவால் மகிழ்ச்சியாக விளையாட முடிந்தது

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நடைமுறை மீண்டும் மீண்டும் தொடர்ந்தது.

ஒருமுறை, குடும்ப விடுமுறையின்போது, நீச்சலடித்த பிறகு தனக்கு வலி இருப்பதாக நினா கூறினார். உடனடியாக அவரது தாயார் அவருக்குத் தசை நோய் இருப்பதாக முடிவு செய்து, மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

நினா மறுத்தபோது, "என்னை முட்டாளாக்காதே. நீ வலியால் துடிக்கிறாய், அதைத்தான் நீ மருத்துவரிடம் சொல்லப் போகிறாய்," என்று அவரது தாய் பதிலளித்தார். நினாவுக்கு, இது மிகவும் குழப்பமாக இருந்தது.

"நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உண்மையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் ஒரு வார்டில் படுத்திருந்ததால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது," என்று அவர் கூறுகிறார். "எனக்கு ஒன்றும் இல்லை என்றே நான் நினைத்துக் கொண்டிருந்தேன்."

அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு அடுத்த படுக்கையில் இருந்த ஒரு சிறுவன் இறந்துவிட்டான், இது அவரது குற்ற உணர்வை மேலும் அதிகரித்தது.

ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தில், ஒரு சிறிய குழந்தை (நினா) தரையில் தனது தாயின் மடியில் அமர்ந்திருக்கிறது. தாய் குனிந்து பார்ப்பதால் அவரது முகம் நமக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு முன்னால் தரையில் இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடக்கின்றன.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, மூன்று வயதில் நினா ப்ளோம் தனது தாயாருடன்

'அம்மா இரக்கமற்றவராக இருந்தார்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எலும்பு மஜ்ஜை பயாப்ஸி போன்ற வலிமிகுந்த நடைமுறைகள் உள்படப் பல பரிசோதனைகளுக்கு நினா உட்படுத்தப்பட்டார். ஆயினும் மருத்துவர்கள் எந்தக் குறைபாட்டையும் கண்டறியவில்லை.

அவரது தாய் எப்போதும் அங்கேயே இருந்தார், நினா சிரிப்பதைக் காணும் போதெல்லாம், அவர் கோபமடைந்து அவரைத் தண்டித்தார்.

நான்கு வாரங்கள் நீடித்த ஒரு மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் இறுதியாக நினாவை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். அவர் வீட்டிற்கு வந்த உடனேயே, அவரது தாய் அவரை ஒரு சக்கர நாற்காலியில் அமர வைத்து, பள்ளியில் இருந்து நிறுத்தி, வரவேற்பறையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு படுக்கையிலேயே அவரது நாட்களைக் கழிக்கச் செய்தார்.

அவர் அதன் பிறகு நண்பர்களைப் பார்க்கவில்லை. அவர் கேட்க விரும்பிய இசையை அவரது தாய் பறித்துக் கொண்டார். அவர் பின்னல் வேலைகளில் ஆறுதல் கண்டார், ஆனால் அவரது கைகள் சோர்வடைந்து வலித்தன. அவரது தாய் உடனடியாக ஏதோ பயங்கரமான தவறு நடந்துவிட்டதாகக் கூறி, அவரது கைகளில் கட்டுகளை இறுக்கமாகக் கட்டினார்.

அவரது கைகளும் விரல்களும் மரத்துப் போகும் அளவுக்கு அவை இறுக்கமாக இருந்தன. இது அவரது தாயை மகிழ்ச்சியடையச் செய்தது போலத் தோன்றியதாக நினா கூறுகிறார். "என் அம்மா அதை ரசிப்பது போல் இருப்பதைப் பார்ப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது."

ஒரு வண்ண 1982 புகைப்படம், 11 வயது நினா ஒரு அறையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஒரு வெளிர் நிற நீண்ட கை சட்டையின் மேல் பொருந்தக்கூடிய பச்சை மற்றும் மஞ்சள் கட்டம் போட்ட ஆடையை அணிந்துள்ளார் மற்றும் ஆரஞ்சு நிற மணிகளின் மாலையைப் பிடித்துள்ளார். பின்னணியில் உள்ள ஒரு சாளரத்தை லேஸ் திரைச்சீலைகள் மூடியுள்ளன, மேலும் சக்கர நாற்காலிக்கு அருகில் ஒரு வடிவமைப்பு கொண்ட சோபா நாற்காலி ஓரளவு தெரிகிறது.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, ஒவ்வொரு முறையும் அவரது குடும்பம் வீட்டை மாற்றும்போது, நினா புதிய மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்படுவார்

'நீ இறக்கப் போகிறாய்'

ஆண்டுகள் கடந்தபோது, அவரது தாயின் கதை மாறியது. "உனக்கு வலி இல்லை என்பதையும், இதையெல்லாம் நீயேதான் கற்பனை செய்து கொண்டாய் என்பதையும் நான் கண்டுபிடித்தால், நான் உன்னை காயப்படுத்துவேன்" என்று அவர் நினாவிடம் கூறினார்.

நினா அதிகமாகக் குழப்பமடைந்து 'தன்னையே இழந்துவிட்டதாக' அவர் கூறுகிறார். அவர் படுக்கையிலேயே அதிக நேரத்தைக் கழித்ததாலும், அவரது கைகள் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் படிப்படியாகத் தனது வலிமையை இழந்தார். இறுதியில் மருத்துவர்கள் அவரை பிசியோதெரபி சிகிச்சைக்காக ஒரு மறுவாழ்வு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு, அவர் மீண்டும் நடக்கக் கற்றுக்கொண்டார், மேலும் அங்கு நோயாளியாக இருந்த ஒரு சிறுவனுடன் காதலிலும் விழுந்தார். பல ஆண்டுகளில் முதல்முறையாக, அவர் மகிழ்ச்சியாக உணரத் தொடங்கினார்.

ஆனால் மருத்துவமனை அவரை வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க அனுமதித்தபோது, அவரது தாய் உடனடியாக மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார். அவரை மீண்டும் வலிமிகுந்த கட்டுகளை அணியுமாறு கட்டாயப்படுத்தினார், படுக்கையை விட்டு எழுவதற்குத் தடை விதித்தார்.

அவருக்கு இதய நோய் இருப்பதாகக் கூறிய அவர், ஒரு நாள் நினாவிடம் "நீ இறக்கப் போகிறாய்" என்று கூறியுள்ளார்.

"நான் உண்மையாகவே தனிமையை உணர்ந்தது அதுவே முதல்முறை," என்று கூறிய நினா, "நான் ஒரு கருந்துளைக்குள் விழுந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்" என்றார்.

ஒரு வண்ணப் புகைப்படம், 1990 இல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு இளம் நினா, பெரிய அளவிலான விப்ட் கிரீம் கொண்ட ஐஸ்கிரீம் கோனை பிடித்திருப்பதைக் காட்டுகிறது. நினா பக்கவாட்டுத் தோற்றத்தில் காட்டப்படுகிறார், அவரது முடி பின்னால் கட்டப்பட்டுள்ளது, மேலும் அவர் வெளிர் நிற மேல் சட்டை மற்றும் கைக்கடிகாரம் அணிந்துள்ளார். மரங்கள் மற்றும் சில கட்டடங்கள் தண்ணீருக்கு அப்பால் மென்மையாக மங்கலான பின்னணியில் காணப்படுகின்றன. இந்த படம் ஒரு குடும்பத்தின் எதேச்சையான புகைப்படத்தின் தொனியையும் இயல்பான உணர்வையும் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, கடந்த 1990ஆம் ஆண்டில் வீட்டிற்கு வெளியே ஓரிடத்தில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தபோது நினா ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்.

'நாங்கள் கருணைக் கொலையை விரும்புகிறோம். உதவ முடியுமா, டாக்டர்?'

அப்போது ஏதோ மாறியது.

மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நினா ஒரு புதிய குழந்தை நல மருத்துவ நிபுணரான மருத்துவர் வ்ரியென்டனை சந்தித்தார்.

அவர் மீண்டும் நடப்பதற்காக அவரது கைகால்கள் மற்றும் மூட்டுகளின் அசைவை மேம்படுத்த நிபுணர்கள் உதவக்கூடிய ஓரிடத்தைக் கண்டறிய விரும்புவதாக அவரிடம் கூறினார்.

நினா திகைத்துப் போனார். அவரது தாயார் எப்போதும் அவருக்கு ஓர் ஆபத்தான தசை நோய் இருப்பதாகவும், அதனால் அவர் இறந்துவிடுவார் என்றும் கூறியிருந்தார். ஆழமாக அவருக்குள் சந்தேகங்கள் இருந்தன, ஆனால் கேள்விகள் கேட்க அவர் ஒருபோதும் துணிந்ததில்லை.

அவரது தாய் ஆத்திரமடைந்தார், வீட்டிற்குத் திரும்பியதும், நினாவின் கால்களை எக்ஸ் வடிவ நிலைக்குத் தள்ளி, தலையணைகளால் அங்கேயே கட்டினார். அவர் அவரது உணவைக் கட்டுப்படுத்தினார். அவரது மூக்கு வழியாக ஓர் உணவு குழாயைச் செலுத்தினார், ஒரு நாளைக்கு 20 மாத்திரைகளை உட்கொள்ளச் செய்தார்.

ஒரு மருத்துவரைச் சந்தித்தபோது, நினாவின் தாயார் அவரை கருணைக் கொலை மூலம் இறக்க அனுமதிக்குமாறு கேட்டார். நோய்வாய்ப்பட்டு சோர்வடைந்திருந்த நினா அதற்கு ஒப்புக்கொண்டார். "டாக்டர், நான் இறக்க விரும்புகிறேன். எனக்கு உதவ முடியுமா?," என்று நினா அவரிடம் கூறினார்.

மருத்துவர் பின்வாங்கி, அவரது தாயுடன் சுருக்கமாகப் பேசி, 24 மணிநேர மார்ஃபினை பரிந்துரைத்தார்.

"நாம் அவரைத் தூக்கத்தில் வைப்போம்," என்று அவர் கூறினார்.

சற்று மங்கலான வண்ணப் புகைப்படம், ஒரு மருத்துவ வார்டில் நினா மருத்துவமனை படுக்கையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. படுக்கையில் உயர்த்தப்பட்ட உலோக பக்கவாட்டு தடுப்புகள் மற்றும் வெள்ளை படுக்கை விரிப்புகள் உள்ளன, மேலும் மருத்துவ உபகரணங்கள் அருகில் உள்ள சுவரில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பெரிய சாளரம் படத்தின் இடது பக்கத்திலிருந்து பகல் வெளிச்சத்தை அனுமதிக்கிறது. அலமாரிகள், தட்டுகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் பின்னணியில் காணப்படுகின்றன. இந்த புகைப்படம் 1989 ஆம் ஆண்டின் பழைய புகைப்படத்தின் வழக்கமான மங்கிய வண்ண டோன்களையும் கறுகறுப்பான தன்மையையும் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, கடந்த 1989இல் நினா சாதாரண ஆடைகளில் முதன்முறையாக அமர்ந்திருக்கிறார்

மீட்பு

ஆனால் டாக்டர் வ்ரியென்டன் இந்த மர்மப் புதிரை ஒன்றிணைத்து, குழந்தைப் பாதுகாப்பு சேவைகளைத் தொடர்பு கொண்டார்.

ஒரு நாள், ஒரு பெண் நினாவின் அறைக்குள் நுழைந்து, அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். "இல்லை, தயவு செய்து. என்னை இறக்க விடுங்கள்," என்று நினா அவரிடம் கெஞ்சினார்.

அவரது தாய் பீதியடையத் தொடங்கியதை அவர் கவனித்தார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் அருகில் நின்றுகொண்டிருந்தனர். விரைவில், அவர் ஒரு ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது கைகள் மற்றும் கால்களில் இருந்த கட்டுகள் அகற்றப்பட்டன. அவரது அறையில் ஒரு வீடியோ கேமரா பொருத்தப்பட்டது. இரண்டு நாட்களாக, அவர் தனது பெற்றோர்கள் இருவரையும் பார்க்கவில்லை.

அவர்கள் இறுதியாகப் பார்க்க வந்தபோது, நினா அவர்களிடம், "எனக்கு எந்தவித நோயும் இல்லை" என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

அவர் அதை மீண்டும் மீண்டும் கூறினார், மொத்தம் 18 முறை. கேமரா தங்கள் செயல்களைப் பதிவு செய்து கொண்டிருப்பதை மறந்து அவரது தாய் கோபமடைந்தார். இத்தனை ஆண்டுகளாக என்ன நடந்து கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரம் அது.

தற்போதைய ஒரு புகைப்படம், வளர்ந்த நினா கேமராவை நேராகப் பார்த்து புன்னகைப்பதைக் காட்டுகிறது. அவர் குட்டையான, வெளிர் நிற முடியைக் கொண்டுள்ளார் மற்றும் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிழல்களில் வடிவம் கொண்ட மேல் சட்டை, ஓவல் வடிவ கல் கொண்ட பதக்க நெக்லஸ் மற்றும் ஒரு சிறிய வெள்ளி மூக்குத்தி அணிந்துள்ளார். இந்த படம் தலை மற்றும் தோள்களைச் சுற்றி இறுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது, மென்மையான மங்கலான உட்புற பின்னணியைக் கொண்டுள்ளது. பிரகாசமான வண்ணங்களும் இயற்கையான விளக்குகளும் புகைப்படத்திற்கு தெளிவான, சமகாலத் தோற்றத்தைத் தருகின்றன.

பட மூலாதாரம், Courtesy of Nina Blom

படக்குறிப்பு, நினா தனது கடந்த காலத்தை விட்டுவிட்டுத் தனது வாழ்வைக் கொண்டாட முடிவு செய்தார்

வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்

சிறிது காலத்திற்குப் பிறகு, நினா தனது பெற்றோருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்தார். அவர் ஒரு சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உடல் மற்றும் உளவியல் சிகிச்சையைப் பெற்றார். இறுதியில் ஒரு புதிய நகரத்தில் வேறொரு அடையாளத்தின் கீழ் குடியேறினார்.

அவர் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார்: கலைப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார், வேலை தேடிக் கொண்டார், காதலிலும் விழுந்தார்.

அவரது பெற்றோர் தாங்கள் செய்ததை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஒரு கட்டத்தில் அவரைக் கண்டுபிடிக்க ஒரு தனியார் துப்பறியும் நபரையும் வேலைக்கு அமர்த்தினர். இது அவருக்குப் பெருமளவிலான புதிய மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

நினா அவர்களைப் பற்றிப் புகார் செய்ய நினைத்தார். ஆனால் இறுதியில் அவர் அந்த யோசனையைக் கைவிட்டார். சில ஆண்டுகள் கழித்து, அவரது பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

"என் பெற்றோர் எனக்குச் செய்தது ஒரு குற்றம். அது கடுமையான குழந்தை துஷ்பிரயோகம், நான் இதிலிருந்து தப்பிப் பிழைத்ததே பெரிய விஷயம்," என்று நினா கூறுகிறார்.

ஆனால் அவர் இப்போது ஒரு நல்ல இடத்தில் இருப்பதற்காக நன்றியுணர்வுடன் இருக்கிறார்.

"நான் பிழைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், வாழ்வதற்கு நிறைய இருக்கிறது."

இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவையின் அவுட்லுக் நிகழ்ச்சியில் வெளியான ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.

நினாவின் சுயசரிதை 'யூ ஆர் எ ஹாரிபிள் சைல்ட்' (You Are a Horrible Child) என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவரது கதை மார்க்ரீட் டி ஹீர், நினா ப்ளோம் ஆகியோரின் 'யூ ஆர் கோயிங் டு டை' (You're Going to Die) என்ற கிராஃபிக் நாவலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு