விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பு என்ன?

    • எழுதியவர், வெங்கட் கிஷண் பிரசாத்
    • பதவி, பிபிசி செய்தி தெலுங்கு
  • பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ இன்று நவம்பர் 18ஆம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்பட்டது.

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

‘விக்ரம்’ எஸ் என்றால் என்ன?

விக்ரம் எஸ் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.

விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. அவை சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வழங்குவதற்காக மேம்படுத்தப்படுகின்றன.

முதல் வரிசையில் விக்ரம் I ரக ராக்கெட் உள்ளது.

விக்ரம் II, விக்ரம் III ஆகியவற்றால் 'லோ எர்த் ஆர்பிட்டுக்கு' (தாழ்வான புவி வட்டப்பாதைக்கு) அதிக எடையுள்ள 'பேலோடை' (செயற்கைக்கோள்கள்) சுமந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

விக்ரம் எஸ் மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். அதாவது மூன்று சிறிய செயற்கைக்கோள்களை 'லோ எர்த் ஆர்பிட்டில்' கொண்டு சென்றன.

இதில் இரண்டு பேலோடுகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை. மூன்றாவது பேலோடு, வெளிநாட்டுக்கு சொந்தமானது.

ராக்கெட்டின் முழுமையான பரிசோதனை 2022ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக 'ஸ்கைரூட்' ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த துணை வட்டப்பாதை திட்டத்துக்கு 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.

ஸ்கைரூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12 மற்றும் 16 க்கு இடையில் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், சாதகமற்ற வானிலை காரணமாக அதன் ஏவுதல் திட்டம் நவம்பர் 18 க்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ மற்றும் பிற தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்கள்

பெரும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்காவில் சமீபத்திய ராக்கெட் ஏவும் திட்டங்களுக்காக சர்வதேச அளவில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது.

அந்தப் போக்கு இந்தியாவிலும் வந்திருப்பதாகத் தெரிகிறது.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து 2018ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இந்த பணிக்காக ஒருங்கிணைப்பு வசதி, ஏவுதளம், தூரத் தொடர்பு, கண்காணிப்பு ஆதரவு ஆகியவை இஸ்ரோவால் தங்களுக்கு வழங்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தன் சமீபத்தில் கூறினார்.

"இந்த திட்டத்துக்காக இஸ்ரோ பெற்றுக் கொண்ட கட்டணம் பெயரளவுக்கானதுதான்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் அதன் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகியிருக்கிறது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ்கிட்ஸ் தவிர, கோயம்புத்தூரைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் சில இந்திய நிறுவனங்களாகும்.

ஸ்கைரூட் உயர்தர தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் மலிவு விலையிலும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் என்று நம்புகிறது.

அடுத்த தசாப்தத்தில் சுமார் 20,000 சிறிய செயற்கைக்கோள்களை தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.

"விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவுவது ஒரு டாக்சியை முன்பதிவு செய்வது போல விரைவில் எளிதாகிவிடும் - அது விரைவான, துல்லியமான மற்றும் மலிவானதாக அமையும்", என்று ஸ்கைரூட் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.

தமது ராக்கெட்டுகள் எந்த ஏவுதளத்திலிருந்தும் 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கைரூட் குறிப்பிட்டுள்ளது.

இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள்

இந்திய விண்வெளித் துறையில் பொது-தனியார் பங்கேற்புக்கான அடித்தளம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது.

ஜூன் 2020 இல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இந்தத் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கிய போது அது தனியார் நிறுவனங்களுக்கு வழி வகுத்தது.

IN-SPACEe என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இஸ்ரோ மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களை இணைக்கிறது.

2040ஆம் ஆண்டில், உலகளாவிய விண்வெளித் தொழில் சுமார் $1 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா இந்த லாபம் கொழிக்கும் சந்தையில் தடம் பதிக்க ஆர்வமாக உள்ளது - தற்போது உலகின் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2% ஆக உள்ளது.

இந்த இடைவெளியை நிரப்ப விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை இந்தியா ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் பயணம்

விண்வெளித் துறையில் இந்தியாவின் பயணம், 1960களில் டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலின் கீழ் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) வடிவில் தொடங்கப்பட்டது.

இந்திய விண்வெளித் துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அஸ்ட்ராகான் ஒப்லாஸ்டில் இருந்து முதல் இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவப்பட்டது.

இந்திய மண்ணில் முதல் ராக்கெட் ஏவுதல் நவம்பர் 21, 1963 அன்று நடந்தது. அமெரிக்க நைக்கி அப்பாச்சி சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அந்த ராக்கெட் வெறும் 715 கிலோ எடை கொண்டது. 30 கிலோ எடையுடன் 207 கிலோமீட்டர் உயரத்தை எட்டும் வகையில் அது இருந்தது.

இந்தியாவின் சமீபத்திய பணியுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022,ஆகஸ்டில் ஏவப்பட்ட சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் (SSLV) 120 டன் எடை கொண்டது. அதன் நீளம் 34 மீட்டர். 500 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் 500 கிலோ செயற்கைக்கோள்களை அதனால் அனுப்ப முடியும். 

சப்ஆர்பிட்டல் ராக்கெட் என்றால் என்ன?

விக்ரம் எஸ் என்பது மூன்று பேலோடுகளை சுமந்து சென்ற ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ராக்கெட் ஆகும்.

விக்ரம் தொடரின் விண்வெளி ஏவுதல் வாகனங்களில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் இது உதவும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் தலைமை செயல் அதிகாரி நாக பரத் டாக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரோவின் முன்னாள் மூத்த விண்வெளி விஞ்ஞானி ஒருவர் துணை ராக்கெட்டுகள் பற்றி விளக்கினார்.

“சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகள் விண்வெளியில் எரிந்து பூமியில் விழுகின்றன. வானத்தில் எறியப்பட்ட கல்லைப் போல, இந்த ராக்கெட் பூமியில் மீண்டும் விழுவதற்கு முன்பு ஒரு பரவளைய பாதையாக வரும். இந்த ராக்கெட்டுகள் 10 முதல் 30 நிமிடங்களில் கீழே விழுந்துவிடும்.

“இந்த ராக்கெட்டுகள் சவுண்டிங் ராக்கெட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

நாட்டிகல் மொழியில், ஒலி என்றால் அளவிடுவது என்று பொருள். இந்த ராக்கெட்டுகள் வளிமண்டல அளவை ஒத்து பயணிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார். வட்டப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் வேகம்.

ஒரு ராக்கெட் வட்டப்பாதையில் சுற்றுப்பாதை வேகத்தை எட்ட வேண்டுமானால் அவை மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பூமியில் விழுந்துவிடும்.

ஒரு ராக்கெட் இந்த வேகத்தை அடைவது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலான பணியாகும். எனவே இதை சாத்தியம் ஆக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரமும் கூட.

ஆனால் சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகளில் அப்படி இருக்காது. அவற்றுக்கு இத்தனை வேகம் தேவையில்லை. அவை தங்கள் வேகத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறந்து, இயந்திரங்கள் செயலிழந்த பிறகு கீழே விழும். உதாரணமாக, இந்த ராக்கெட்டுகளுக்கு மணிக்கு 6,000 கிமீ வேகமே போதுமானதாக இருக்கும்.

வரலாற்றில், 1942ஆம் ஆண்டில் நாஜி விண்வெளி பொறியாளர்களால் முதன்முதலில் துணை சுற்றுப்பாதை ராக்கெட் V-2 பயன்படுத்தப்பட்டது.

அதன் மூலம், தங்கள் கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை நாஜிக்கள் வழங்கினர். அந்த ராக்கெட்டின் வேகம் காரணமாக எதிரிகளால் அதை தடுக்க முடியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: