கிரிக்கெட்டில் ஆண்களுக்கு முன்பே பெண்கள் நிகழ்த்திய 10 சாதனைகள்

    • எழுதியவர், ஜான்வி முலே
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மகளிர் கிரிக்கெட் சமீபத்தில்தான் தொடங்கியது என்றும், அது ஆடவர் கிரிக்கெட்டை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் பலருக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது.

ஆனால், பெண்கள் 18-ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர்.

பெண்களுக்கான முதல் போட்டி இங்கிலாந்தில் 1745 ஜூலையில் விளையாடப்பட்டது. இருப்பினும், மகளிர் கிரிக்கெட்டின் முதல் அதிகாரபூர்வ சர்வதேசப் போட்டி 1934-இல் நடைபெற்றது.

மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆடவர் கிரிக்கெட்டை விடச் சற்று மெதுவாக இருந்தபோதிலும், கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மகளிர் கிரிக்கெட்டில் இருந்தே தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆண்களுக்கு முன்பே பெண்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் சில சாதனைகள் இந்தியப் பெண்கள் படைத்துள்ளனர்.

முக்கியச் சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் என்றாலே, பலர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பெயர்களைச் சொல்வார்கள்.

ஆனால், முதல் இரட்டைச் சத சாதனை ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பெயரில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 2010-இல் குவாலியரில் இரட்டைச் சதம் அடித்தார். ஆனால், அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1997-இல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேசப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார்.

1997 மகளிர் உலகக் கோப்பையின்போது, டிசம்பர் 16 அன்று டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் பெலிண்டா கிளார்க் 155 பந்துகளில் 229 ரன்கள் எடுத்தார், இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டி மும்பையின் எம்.ஐ.ஜி. கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

2. ஒருநாள் போட்டியில் 400 ரன்கள்

1997-இல் டென்மார்க்கிற்கு எதிரான அதே போட்டியில், பெலிண்டா கிளார்க்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தது.

ஆடவர் அல்லது மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் 400 ரன்களைக் கடந்த முதல் அணி அவர்களின் அணியாகும்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 412 ரன்கள் எடுத்தது.

ஆடவர் அணி இந்தப் சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகே எட்டியது. 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆடவர் அணிகள் 400 ரன்களைக் கடந்தன.

3. ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சாதனையும் ஒரு பெண் வீராங்கனையின் பெயரிலேயே உள்ளது.

1973 மகளிர் உலகக் கோப்பையின்போது, ஆஸ்திரேலியாவின் டீனா மெக்பர்சன் (Tina Macpherson) இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 12 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டீனாவின் இந்தச் சாதனைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1975 உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைத்தார்.

4. ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள்

ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் செய்த சாதனை ஆடம் கில்கிறிஸ்ட் பெயரில் 2000-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அவர் ஆறு பேட்ஸ்மேன்களைக் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.

இருப்பினும், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு மகளிர் விக்கெட் கீப்பர்கள் இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் கல்பனா வெங்கடாச்சார் மற்றும் நியூசிலாந்தின் சாரா இலிங்வொர்த் (Sarah Illingworth).

இருவரும் ஆறு டிஸ்மிசல்கள் என்ற சாதனையைப் படைத்தனர்.

கல்பனா டென்மார்க்கிற்கு எதிராக ஐந்து ஸ்டம்பிங் மற்றும் ஒரு கேட்ச் எடுத்தார், அதே நேரத்தில் சாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு கேட்ச்கள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங் எடுத்தார்.

5. டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் பத்து விக்கெட்டுகள்

ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்று இயான் போத்தம் (Ian Botham) மற்றும் ஆலன் டேவிட்சன் (Alan Davidson) அறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெட்டி வில்சன் (Betty Wilson) 1958-இலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், ஒரு சதமும் அடித்தார்.

6. சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சமன் (Tie) ஆன போட்டி மகளிர் கிரிக்கெட்டில் தான் நடந்தது.

இந்தப் போட்டி 1982-இல் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்றது, இதில் இரு அணிகளும் 147 ரன்கள் எடுத்தன.

7. மிகவும் இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர்

மிகக் குறைந்த வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்று வரும்போது, பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹசன் ரசாவின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் இந்தச் சாதனை பாகிஸ்தானின் சாஜிதா ஷா பெயரில் உள்ளது. இவர் 2000-ஆம் ஆண்டில் 13 வயதிலேயே சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஷஃபாலி வர்மா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

8. முதல் உலகக் கோப்பை மற்றும் டி20 போட்டி

முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1973-இல் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகின் முதல் சர்வதேச டி20 போட்டியும் மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. இந்தப் போட்டி 2004 ஆகஸ்ட் 5 அன்று இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்தது.

ஆடவர்களின் டி20 சர்வதேசப் போட்டி 2005 பிப்ரவரியில் தொடங்கியது.

9. பிங்க் பந்து கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை அதிகரிக்கப் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து (Pink Ball) பயன்படுத்தத் தொடங்கப்பட்டது.

ஆனால், முதல் பிங்க் பந்துப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் அல்ல, மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது.

2008-இல், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு டி20 கண்காட்சிப் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டது.

சர்வதேச அளவில், பிங்க் பந்து 2009-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது.

ஆடவர் கிரிக்கெட்டில் பிங்க் பந்து 2015-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பயன்படுத்தப்பட்டது.

10. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு (Overarm Bowling)

ஓவர்ஆர்ம் பந்துவீச்சை (தோளுக்கு மேல் கையை உயர்த்திப் பந்து வீசுதல்) முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஒரு பெண்ணையே சேரும். அவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான கிறிஸ்டியானா வில்ஸ் (Christiana Willes).

1805-இல், தனது பாவாடையால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, அவர் ஓவர்ஆர்ம் பந்துவீசத் தொடங்கினார், இது நவீன பந்துவீச்சு பாணியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

ஓவர்ஆர்ம் பந்துவீச்சு தொடங்கிய காலகட்டமே நவீன கிரிக்கெட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.