தோல்வியின் விளிம்பிற்கு சென்று 2 - 0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

Ashwin with Shreyas Iyer

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

45 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது இந்தியா. வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை. வங்கதேசமோ மீதமிருந்த 6 விக்கெட்களை வீழ்த்தும் முனைப்புடன் இருந்தது. 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெஹுதி ஹசன் பந்துவீச்சில் நிலைகுலைந்த இந்தியா, ஒரு மணி நேர இடைவெளியில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது. அரங்கத்தில் குழுமியிருந்த வங்கதேச ரசிகர்கள் தமது சொந்த மண்ணில் இந்தியா வீழப்போவதாக எண்ணி ஆனந்தத்தில் கரகோஷம் எழுப்பினர். இந்தியா தோல்வியின் விளிம்புக்கு வந்த நேரம் அது.

இந்தியா த்ரில் வெற்றி

ஷ்ரேயாசுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் களத்தில் நங்கூரமிட்டார். வெற்றி இலக்கு குறைவாக இருந்தாலும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிப்பது சவாலாகவே இருந்தது. யாராவது ஒருவர் வெளியேறினாலும் அடுத்து களமிறங்குபவர்கள் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளராகத்தான் இருக்க முடியும். அது இந்தியாவின் வெற்றியை முற்றிலுமாக பறித்துவிடக்கூடும் என்பதால் இருவரும் கவனத்துடன் ஆடினர். அஷ்வினை வெளியேற்ற வங்கதேசத்திற்கு வாய்ப்புகள் அமைந்தும், அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர். அதற்கு விலையாக இறுதியில் அஷ்வின் அவர்களின் வெற்றியையே பறித்துவிட்டார். ஷ்ரேயாஸ் 46 பந்துகளில் 29 ரன்களும், அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். 8வது விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்த இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்திய அணி. இதன் மூலம் 2 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த அஷ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். புஜாராவுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.

2ம் இடத்தை பிடித்த இந்தியா

வங்கதேசத்துடனான வெற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 3வது இடத்தில் இருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்துள்ளது. ஐசிசி தரவுகளின்படி இந்தியாவின் வெற்றி சதவீதம் 58.93 ஆக உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா 54.55 வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளது. முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 76.92 -ஆக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க,வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் இங்கிலாந்தால் பங்கேற்க முடியாது. இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுக்கு மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன. இதர அணிகளின் ஆட்டத்தை பொறுத்தே அது அமையும். தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 2,3ம் இடத்தில் உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருந்தாலும் இதனை முடிவு செய்வது என்னவோ புள்ளிப்பட்டியலில் முதன்மை இடத்தில் பலமாக உள்ள ஆஸ்திரேலியா அணி தான்.

Indian cricket team with trophy

பட மூலாதாரம், Getty Images

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியவுடன் 4 போட்டிகளை கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியாவுடன் 2, வெஸ்ட் இண்டீஸுடன் 2 போட்டிகள் என 4 ஆட்டங்கள் உள்ளன. ஆக மொத்தம் இரண்டு அணிகளுமே தலா 4 டெஸ்ட் போட்டிகளை விளையாட வேண்டியுள்ளது. இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் எனில் எதிர்வரும் ஆஸ்திரேலியா உடனான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 4 -0 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டும். அப்படி செய்தால், தென்னாப்பிரிக்கா விளையாடும் 4 டெஸ்டில் அனைத்திலும் வெற்றிபெற்றாலும் இந்தியாவை புள்ளிகளின் அடிப்படையில் அசைக்க முடியாது. இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஒரு போட்டியில் தோற்று மூன்றில் வெற்றிகண்டால், தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இந்த இரண்டு அணிகளுமே மோசமான தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில், 4ம் இடத்தில் உள்ள இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றினால், இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிக்கொள்ளும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: