இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

நேற்று இரவு 9.10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில், இரண்டு போர் விமானிகளும் மோசமான நிலையில் காயமடைந்தததால் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு 10.51 மணிக்கு இந்திய விமானப்படை, விபத்தில் காயமடைந்த இரண்டு போர் விமானிகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.

இந்திய விமானப்படை ஒரு ட்வீட்டில், "விமானப்படைக்குச் சொந்தமான இருவர் அமரக்கூடிய, மிக்-21 பயிற்சி விமானம் பயிற்சிக்காக ராஜஸ்தான் மாநிலம் உதார்லை விமானப்படை தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. அந்த போர் விமானம், நேற்றிரவு 9.10 மணியளவில் பார்மர் அருகே விபத்திற்குள்ளானது. அந்தப் போர் விமானத்தில் இருந்த இரண்டு போர் விமானிகளும் மோசமாகக் காயமடைந்தனர்," என்று தெரிவித்தது.

அதோடு, மற்றுமொரு ட்வீட்டில், உயிரிழந்தவர்களுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்த விமானப்படை, இதுகுறித்த விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரியிடம் பார்மரில் நடந்த விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :