இலங்கை வவுனியா அருகே மர்மமாக உயிரிழந்த 16 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் 9 வயதான சிறுமியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி ஓரிரு தினங்களில், மற்றுமொரு சிறுமியின் சடலம் வவுனியா பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா - கணேசபுரம் பகுதியிலிருந்து 16 வயதான சிறுமியின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கைகளை உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், உறவினர்கள் நெளுக்குளம் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, பிரதேச மக்களின் உதவியுடன், போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமியின் வீட்டிற்கு அண்மித்த பகுதியிலிருந்து, அவரது பாதணி மற்றும் புத்தகங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வவுனியா பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நேற்றிரவு சம்பவ இடத்திற்கு போலீசாருக்கு மேலதிகமாக, ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பெற்றோரை இழந்த சிறுமி, அவரது உறவினர் ஒருவரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் மற்றும் வவுனியா போலீசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

9 வயது சிறுமியின் கொலை

களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் கடந்த 28ம் தேதி 9 வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 27ம் தேதி கோழி இறைச்சி வாங்குவதற்காக வர்த்தக நிலையத்திற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பாத நிலையில், சிறுமியை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

இந்த நிலையில், வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றில் புதைக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சடலம் மறுதினம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதான சந்தேகநபர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக நிலையத்திற்கு சென்று வீட்டு திரும்பிய சிறுமியை தான், தோட்டமொன்றிற்கு அழைத்து சென்று, துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளது.

எனினும், சிறுமி அதற்கு எதிர்ப்பை தெரிவித்த நிலையில், சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முடியாது போனதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை சிறுமி ஏதோ ஒரு வகையில், ஏனையோருக்கு வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலேயே, சிறுமியை நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் பாணந்துறை மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்டது.

சிறுமியின் வாய் மற்றும் மூக்கு பகுதிக்குள் சேற்று நீர் சென்றமையே, மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையை நடத்திய மூன்று பேரை கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் மர்மமாக உயிரிழந்த மற்றுமொரு சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அத்துடன், சிறுமி எந்தவகையிலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்வர மறுப்பு

அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்கள் என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அஜித் பீ பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரதேசத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமையே, இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாணந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அஜித் பீ பெரேரா தெரிவிக்கின்றார்.

காணொளிக் குறிப்பு, "திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: