“தோல்வி பயத்தால் அதிமுக செய்த நாடகம்” – முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அப்போது, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கோவையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடவாடித்தனங்கள் பல நடந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் வேலுமணி அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். ராணுவம் அங்கு வரும் வரை போராட்டம் நடைபெறும் என்று அடம்பிடித்தார். ராணுவம் வரும் அளவுக்கு எந்தப் பெரிய சம்பவமும் அங்கு நடக்கவில்லை. அதிமுக தோல்வி பயத்தால் செய்த நாடகம் அது” என்று கூறினார்.
மேலும், அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நாங்கள் செய்த தவறை ஆதாரத்தோடு கூறினால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். கடந்த ஆட்சியில் போலி நகைகளை வைத்து பல முறைகேடுகளை நகைக்கடன்களில் செய்துள்ளார்கள். அதையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி முறையாகச் செய்து வருகிறோம்,” என்றார்.
மேலும், “சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த ஆதரவைவிட அதிக ஆதரவை மக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாக்களிக்காத மக்களும் தவறு செய்துவிட்டோமே என்று நினைக்கும் அளவுக்குச் செயல்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.