"கள்ள ஓட்டு போடவே திமுக இப்படிச் செய்கிறது" - ஹிஜாப் விவகாரத்தில் விளக்கமளித்த பாஜக முகவர்
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் அமைக்கப்பட்ட அல்-அமீன் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய வாக்காளர்கள், ஹிஜாப் அணிந்துவந்ததால் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி பாஜக முகவர் கிரிராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தேர்தல் அதிகாரிகளிடம் அவரை வெளியேற்றக் கோரிய அதிமுக, மற்றும் திமுக முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மூலம் பாஜக பிரமுகர் கிரிராஜன் வாக்குச் சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக பாஜக முகவராக உஷா என்பவர் நியமனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நீக்கப்பட்ட பாஜக முகவர் கிரிராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்கு மையத்தில் 60 வயதுடைய வாக்காளரின் வாக்கினை 30 வயதுடைய நபர் ஹிஜாப் அணிந்து கொண்டு வாக்களிகின்றனர். இதனால் அடையாளம் காணும் வகையில், ஹிஜாபை அகற்றக் கூறியதால் திமுக நிர்வாகி யாசின் மற்றும் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்கவும் முற்பட்டனர்.மேலும் அங்கிருந்த அதிகாரிகளும் என்னை வெளியேறுமாறு கூறினர்.
திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதற்காக இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றன,” என்று குற்றம் சாட்டினார்.