ராமநாதபுரம் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர் ஒருவர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செப்.1 முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவ, மாணவியரை நிறுவன வாகன இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு செவ்வாய்கிழமை மாலையில் வெளியானது.
இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவர், பனைகுளத்தை சேர்ந்த ஒருவர் என இரண்டு மாணவர்கள் மற்றும் உதவியாளர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் அடுத்த ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், "கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வாகனத்தில் வந்து செல்லும் பனைக்குளம், ராமேஸ்வரம் பகுதி மாணவர் இருவர் மற்றும் கல்லூரி உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்கல்லூரி மாணவ, மாணவியர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரெகுநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி செயல்படாத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.