ராமநாதபுரம்: கொரோனாவால் முடங்கியது சுற்றுலா தலம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, ராமநாதபுரத்தில் இருந்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு இரண்டாவது அலையில் அதிகமான பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வரை 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிதல், முகக்கவசம் அணியாதவர்கள் என மொத்தமாக 42 லட்சம் ரூபாய் சுகாதாரத்துறை சார்பில் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழில் மீன்பிடித்தொழில். அடுத்தது சுற்றுலா தொழில். ராமேஸ்வரத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி வருவாய் ஈட்டிவந்த சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கால் ஆன்மீக தலங்களுக்கு பக்தர்கள் செல்லஅனுமதி ரத்து செய்யப்பட்டதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலை நம்பி வாழ்ந்துவந்த 500க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.