You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் வரும் ஏழாம் தேதியன்று திறக்கப்படமாட்டாது என்றும், இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 69,000 பேரும், இத்தாலியில் சுமார் 29,000 பேரும், பிரிட்டனில் சுமார் 29,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  2. சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படுமா?

    சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்புவும், சுஜாதா விஜயகுமாரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

    அப்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக் கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார்.

    மேலும் அவர், தொலைக்காட்சி தொடர்களில் முன்பை போன்று அனைத்து கலைஞர்களையும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதை கொஞ்சம் மாறும் எனவும், கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரங்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

    சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகியவற்றில் தினசரி ஊழியர்கள்தான் அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். 90% பேர் தினசரி சம்பளம் வாங்கக் கூடியவர்கள். 15 நாட்களுக்கும் மேலாக லாக்டவுணில் இருந்தோம் என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு. இந்த சூழலில், இதே லாக்டவுண் இன்னும் நீடித்தால் அவர்களுடைய அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள் என பிபிசி தமிழிடம் சின்னத்திரை நடிகையும், சீரியல் தயாரிப்பாளருமான நீலிமா ராணி கூறினார்.

  3. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிறப்பு விமானம்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்துவர இருந்து மே 7 அன்று இரு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

    அபுதாபியில் இருந்து கொச்சி வரை ஒரு விமானமும், துபாயில் இருந்து கோழிக்கோடு வரை இன்னொரு விமானமும் இயக்கப்படும் என்று துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    அவசர மருத்துவத் தேவை உள்ளவர்கள், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், மோசமான சூழலில் சிக்கிக்கொண்டுள்ளவர்கள் ஆகியோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று துணைத் தூதரகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு திருப்பியதும் அந்தப் பயணிகளே விமானப் பயணத்துக்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. கமல் ஹாசன் கண்டனம்

    தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கமல் ஹாசன் டிவிட்டரில் பதிவிட்ட செய்தி.

  5. மதுக்கடைகளில் இன்றும் கூட்டம்

    டெல்லியில் இன்றும் மதுக்கடைகள் முன் நீண்ட கூட்டம் காத்திருக்கிறது.

    டெல்லியில் மதுவின் விலையோடு, 70% சிறப்பு கொரோனா வரியும் சேர்க்கப்படுகிறது.

  6. கொரோனா வைரஸ் பரவக் காரணமான இரான் விமான நிறுவனம்

    இரான் புரட்சிகர ராணுவத்துடன் தொடர்புடைய விமான நிறுவனம் ஒன்று மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது பிபிசி புலன்விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

    மஹான் ஏர் எனும் அந்த விமான நிறுவனம் இயக்கிய விமானங்களின் மூலம் லெபனான் மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அந்தந்த நாடுகளின் வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதல் நபர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தங்கள் விமான நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலை கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறை ஆகியவற்றை குறித்து கவலை தெரிவித்தபோது விமான ஊழியர்கள் மௌனிக்க ப்பட்டதாக மஹான் ஏர்நிறுவனத்தின் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

    இரான் அரசு விமானங்களை இயக்க தடை விதித்திருந்த போதும் அந்த நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு விமானங்களை இயக்கியது தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

    மஹான் ஏர் நிறுவனம் இதுகுறித்து பிபிசியிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

  7. சோமாலியாவில் விமான விபத்து

    கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களைக் கொண்டு சென்ற விமானம் ஒன்று சோமாலியாவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

    ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் ஆறு பேர் பயணித்தனர்.

    தலைநகர் மொகடிஷூவில் இருந்து பார்தேல் நகருக்குச் சென்ற அந்த விமானம், பார்தேல் விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் விபத்துக்கு உள்ளானது.

    திங்கள் மாலை நடந்த இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

    விபத்தில் இறந்தவர்கள் சோமாலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

  8. ’தற்காலிக ரேஷன் அட்டைகளை வழங்கலாம்’ - அபிஜித் பானர்ஜி

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியுடன் உரையாடினார்.

    அவர்களின் உரையாடலிலிருந்து முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • வங்கி கடன்களுக்கான வட்டி அல்லது ஈஎம் ஐ-யை மூன்று மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என கூறப்பட்டது ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான் ஆனால் அரசால் மேலும் செய்ய இயலும். அந்த தொகையை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்திருக்கலாம் அது மக்களுக்கு மேலும் உதவியாக இருந்திருக்கும்.
    • நோயின் தீவிரத்தை பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்குவது குறித்து தீர்மானிக்க முடியும். அதிகளவிலான மக்கள் நோயுற்று கொண்டிருக்கும்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது.
    • தேவையானவர்களுக்கு தற்காலிகமான ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம். ஒரு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக கொடுத்துவிட்டு அதன்பிறகு யாருக்கு தேவையோ அதை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது போல திட்டம் வகுக்கலாம்.
    • ஜன் தன் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு பணம் வழங்கலாம் ஆனால் பலரிடம் அந்த கணக்குகள் இல்லை குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம். எனவே மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதை அரசு மேற்கொள்ளலாம்.
    • சிறு மற்றும் குறு தொழில்களை மட்டும் இலக்கு வைப்பது சரியான தீர்வாக இருக்காது. அவர்கள் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்குவதற்கு அவர்கள் கையில் பணம் வேண்டும். பொருட்களை வாங்கினால்மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைய முடியும்.
    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை மாநில அளவில் முடிவுகளை அனுமதிக்க வேண்டும். ரயில்வே மற்றும் விமானம் போன்ற முடிவுகளை மாநில அரசால் எடுக்க முடியாது ஆனால் மாநில அரசால் இதனை எளிதில் கையாள முடியும்.
    • இந்தோனீசியாவில் மக்களுக்கு பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது; ஆனால் அவை யாருக்கும் சென்றடைய வேண்டும் என உள்ளூர் குழுக்களே முடிவு செய்யும். அவர்களுக்கு தெரியும் யாருக்கு உண்மையான தேவைகள் என்று.
    • இம்மாதிரியான ஒரு அதீத நெருக்கடியான சமயத்தில் துணிச்சலாக செயல்படுவதே ஒரே வழி.
    • மக்கள் கைகளில் பணம் வழங்குவதே பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒரே வழி. இதில் நாம் அமெரிக்காவின் வழியை பின்பற்றலாம்.
    • ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீட்டமைப்பது குறித்து நாம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
  9. ரூ.4.15 கோடி அபராதம்

    ஊரடங்கு விதிகளை மீறியதால் தமிழகத்தில் இதுவரை 3,93,463 வழக்குகள் பதிவாகியுள்ளன. வாகனங்களில் வெளியே சுற்றிய 4,16,344 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதுநாள் வரை 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

  10. கொரோனா வைரஸ் உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும்

    உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

    சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.

    தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.

    ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.

    நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி,

    இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 46,433 ஆகியுள்ளது.

    இந்தியாவில் 32,138 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,726 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 1568 பேர் இந்த நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  12. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பற்படை கப்பல்கள்

    மாலத் தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மூன்று இந்திய கப்பற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திங்களன்று இரவு இரண்டு கப்பல்கள் மாலத்தீவிற்கு சென்றன மற்றொன்று துபாய்க்கு சென்றுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தில் சுமார் 2 லட்சம் பேர் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

    வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை இதுவரை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

    மே 7ஆம் தேதிக்கு பிறகு பல கட்டமாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்படுவர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன அதேசமயம் இந்திய தூதரகம் சிக்கியுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்து வருகிறது.

  13. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திங்களன்று (மே 4) தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  14. நிவாரண நிதியாக சேமிப்பு தொகையை வழங்கிய மாணவர்கள்

    கோவையில் 4ஆம் வகுப்பு மாணவி, அவரின் சகோதரி மற்றும் சகோதரம் தங்களது சேமிப்பு பணமான 7000 ரூபாயை, முதலமைச்சர் நிவாரண நிதியாக அமைச்சரிடம் வழங்கினர்.

  15. நம்பிக்கை செய்திகள்

    நியூசிலாந்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஏற்கனவே கடந்தவாரம் நியூசிலாந்து அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தது. இதேநிலை தொடர்ந்தால் மேலும் தளர்வுகள் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாளில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 1,015 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  16. கொரோனா வைரஸ் மருந்து: நிதி திரட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமெரிக்கா, ரஷ்யா

    கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக எட்டு பில்லியன் (800 கோடி) அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என உலக தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் இணையத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் 40 நாடுகள் கலந்து கொண்டன.

    இந்த தொகையைக் காட்டிலும் மேலும் கூடுதலான தொகை தேவைப்படலாம் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா ஃபான் டேர் லெயன் தெரிவித்தார். இந்த நன்கொடை 30க்கும் அதிகமான நாடுகள், ஐ.நா சபை, தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. சீனா சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன பிரதிநிதி இதில் கலந்து கொண்டார்.

    ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. நார்வேயும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய அளவிலான தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    பிரான்ஸ் 500 மில்லியன் யூரோ தருவதாக தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, ஜெர்மனி போன்ற நாடுகளும் கிட்டதட்ட இதே அளவு தொகையை தருவதாக உறுதியளித்துள்ளன.

    ஜப்பான் 800 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

    தற்போதைய நெருக்கடியிலிருந்து இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு மருந்து ஒன்றே வழி என ஐ.நா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  17. கொரோனா தொற்று பரவல் இன்னும் எத்தனை நாட்களுக்கு?

    ''லாக்டவுன் முடிந்த அடுத்த நாள் வைரஸ் ஒழிந்துவிடாது. இன்னும் ஒன்றரை இரண்டு வருஷத்துக்கு மாஸ்க் போடணும், வூஹான்ல இருந்த வைரஸை விட இங்கே வந்திருக்கும் வைரஸில் சில மாற்றங்கள் இருக்கு'' என்கிறார் Dr.சுதா சேஷய்யன்

  18. உலகளாவிய எண்ணிக்கை

    தற்போதைய நிலவரப்படி உலகமுழுவதும் 35 லட்சத்து 82 ஆயிரத்து 469 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவேகுணமடைந்தோரின் எண்ணிக்கையும் அடங்கும்.

    சில நாடுகளின் கொரோனா வைரஸ் குறித்தான தகவல்கள்

    அமெரிக்கா -மொத்த பாதிப்புகள் - 1,180,288; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் 954,336; குணமடைந்தவர்கள் – 187,180; உயிரிழப்புகள் - 68,922

    ஸ்பெயின் - மொத்த பாதிப்புகள் – 218,011 ; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் - 71,240; குணமடைந்தவர்கள்-121,343; உயிரிழப்புகள் - 25,428

    இத்தாலி - மொத்த பாதிப்புகள் – 211,938; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் – 99,980; குணமடைந்தவர்கள்-82, 879; உயிரிழப்புகள் – 29,079

    பிரிட்டன் -மொத்த பாதிப்புகள் - 191,832; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 162,113; குணமடைந்தவர்கள்-910; உயிரிழப்புகள் - 28,809

    பிரான்ஸ் -மொத்த பாதிப்புகள் - 169,583; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் – 92,903 ; குணமடைந்தவர்கள்-51, 476; உயிரிழப்புகள் – 25,204

    ஜெர்மனி -மொத்த பாதிப்புகள் - 166,152; தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 26,459; குணமடைந்தவர்கள்-132,700; உயிரிழப்புகள் - 6,993

    ரஷ்யாமொத்த பாதிப்புகள் - 145,268; தற்போது சிகிச்சைபெறுபவர்கள் – 125,817; குணமடைந்தவர்கள்-18,095; உயிரிழப்புகள் - 1,356

    இது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள்

  19. 56 பேருக்கு கொரோனா தொற்று பரவ காரணமான நபர்

    ஆந்திரப்பிரதேசத்தில் முடக்க நிலை காலத்தில் பொழுது போக்குவதற்காக ஒரு நபர் செய்த சில செயல்களால் 56 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  20. பிரான்ஸில் டிசம்பர் மாதமே தோன்றியுள்ள கொரோனா

    பிரான்ஸில் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தது என அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    அந்தசமயத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளை தற்போது ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு கோவிட் 19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தனது 50களில் இருக்கும் அந்நபர் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது அவருக்கு தெரியாது.

    இதன்மூலம் பிரான்ஸில் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் ஒருமாதம் முன்னதாகவே அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொடங்கியுள்ளது.

    பிரான்ஸில் தற்போதுவரை முதல் தொற்று ஜனவரி 24ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.