You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. "பத்திரிகையாளரை எழுதக்கூடாது என்பது, வழக்குரைஞர் வாதிடக்கூடாது என்பது போல" நீதிபதி சந்திரசூட்

    ''ஒரு பத்திரிகையாளரை எப்படி எழுதக்கூடாது என்று சொல்ல முடியும்? அது ஒரு வழக்குரைஞரை வாதிடக்கூடாது என்று சொல்வதற்கு சமம்.''

    பத்திரிகையாளர் முகமது ஜூபைருக்கு பிணை வழங்கிய வழக்கில் உத்தர பிரதேச அரசுக்குஉச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வியெழுப்பினார்.

  2. இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமானம் - படங்கள்

    இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துகொண்டார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், சத்திய பிரமானம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  3. கால் நூற்றாண்டாக அடிப்படை வசதியில்லாத மேலவளவு கிராமம்

    மேலவளவு படுகொலை சம்பவம் நடைபெற்ற் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் மேலவளவு காலனி பகுதி இன்னும் முழுமை பெறாமலே தனித்து விடப்பட்டுள்ளது. காலனியில் பெரும்பாலான வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால் இன்னமும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர்.

  4. பிட்காயின்களை விற்பனை செய்த ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்

    மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் தனது கிரிப்டோகரன்சியை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு தான், பிட்காயினில் அதிக முதலீடு செய்வதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

    தற்போது அதன் பிட்காயின்களில் 75 சதவீதத்தை விற்றுள்ளதாகக் கூறுகிறது. இது 2021ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் இரண்டு பில்லியன் மதிப்பு கொண்டிருந்தது.

    கிரிப்டோகரன்சிகளின் விலை இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

    டெஸ்லா தனது பிட்காயின்களை விற்றதன் மூலமாக வழக்கமான பணத்தில் 936 மில்லியன் டாலர் பெற்றதாகக் கூறுகிறது.

    டெஸ்லா உரிமையாளர் ஈலோன் மஸ்க் கிரிப்டோகரன்சிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கைகள் கிரிப்டோகரன்சி சந்தையின் ஏற்ற இறக்கத்தை அடிக்கடி பாதித்துள்ளன.

    பிப்ரவரி 2021-இல், டெஸ்லா நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு பிட்காயினில் முதலீடு செய்வது குறித்துப் பேசியது.

    கடந்த ஆண்டு நவம்பரில், பிட்காயின்களின் விலை சுமார் 75,000 டாலராக, இந்திய ரூபாயில் 55 லட்சம் ரூபாயாக இருந்தது.

    இந்த நிலையிலிருந்து சரிந்த பிட்காயின் இன்று சுமார் 25 ,000 டாலர்களுக்கு விற்பனையாகி வருகிறது.

  5. செஸ் ஒலிம்பியாட் - கோவையில் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட்பற்றிய விழிப்புணர்வு சித்திரங்கள் வரையப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன. கோவை முழுவதும் 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  6. இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க யார்?

  7. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

    ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும் நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதில் ஒரு படகும் அதிலிருந்து ஐந்து மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் படகையும்அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பினர்.

    இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி, அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர், ஆறு மீனவர்களும் தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

  8. இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்றார் ரணில்

    இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், சத்திய பிரமானம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் வீதிக்கு வந்துப் போராடத் தொடங்கினர். அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவையும் வெளியேற்றவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது.

    இந்த நிலையில், முதலில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் பதவி விலகி வெளியில் தெரியாக இடத்தில் பாதுகாப்பாக இருந்து வருகிறார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யாக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்கினார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டைவிட்டுத் தப்பி மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். அங்கிருந்து தமது விலகல் கடிதத்தையும் அவர் அனுப்பிவைத்தார்.

    இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

    இலங்கையில் ஜனாதிபதிகள் மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். ஆனால், அசாதாரண சூழ்நிலையில், ஜனாதிபதி விலக நேர்ந்தால், அவரது மீதமிருக்கும் பதவிக் காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக நாடாளுமன்றமே தேர்ந்தெடுக்க அரசமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது. இந்த அடிப்படையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, தனது பதவிக் காலத்துக்கு முன்பே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினார். இதனால், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆனார் ரணில் விக்கிரமசிங்க.இவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் மீதமுள்ள காலத்துக்கு இந்தப் பதவியை வகிப்பார். கடந்த ஜனாதிபதி தேர்தல் 2019ம் ஆண்டு நடந்ததால் இந்தப் பதவிக் காலம் 2024 வரை நீடிக்கும்.

  9. வணக்கம் நேயர்களே!

    நான், க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.எங்கள் நேரலைப் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்...

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.