You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்"- எ.வ. வேலு

கள்ளக்குறிச்சியில் கலவரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏ.வ.வேலு, மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் ஆய்வில் ஈடுபட்டனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, இப்போது கள்ளக்குறிச்சி போராட்டம்: 'கும்பல்' மனநிலைக்கு வசப்படும் இளைஞர்கள் - உளவியல் பார்வை

  2. சீர்காழி நகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் வாந்தி, பேதி - அரசு மருத்துவமனையில் அனுமதி.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ மாணவிகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளி விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அந்த பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாதிரி பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அந்த பள்ளியில் பயிலும் 18 மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை உதவி ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 அவசர ஊர்தி வாகனங்கள் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  3. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

    கள்ளக்குறிச்சியில் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

    இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பந்தபட்ட பள்ளியை தற்போது பார்வையிட்டு வருகிறார்.

    அவருடன் அமைச்சருடன் ஏ.வ.வேலு, சி.வி. கணேசன் மற்றும் அரசு அதிகாரிகளும் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர்.

  4. கள்ளக்குறிச்சி சம்பவம்: நெல்லையில் சாலை மறியல் செய்த வழக்கறிஞர்கள்

    கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நெல்லை வழக்கறிஞர்கள் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தவறான தகவலை அளித்த டிஜிபிக்கும், தமிழக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

    தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் பொதுமக்கள் போராட்டத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். காவல் துறையின் மெத்தன போக்கால் தான் இந்தப் போராட்டம் நடந்ததாக போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  5. மாநிலங்களவை விதிகள் 267ன் கீழ் நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ்

    பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்பதற்காக மாநிலங்களவையின் இன்றைய விவாதங்களை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை விதிகள், எண் 267இன் கீழ் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபால் நோட்டீஸ் அளித்துள்ளார்.

    அரிதாகவே, இந்த விதியின் கீழ் விவாதங்கள் நடைபெறும். முன்னதாக பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது இந்த விதி பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

  6. பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்: தமிழ் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் வரை

  7. கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற தனியார் பள்ளியின் வகுப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் பள்ளியில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து மாவட்ட முதன்மை கல்வி செயலாளர் விஜயலட்சுமி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், "கள்ளக்குறிச்சி பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். பள்ளி கட்டடம் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது." என்றார்

    மேலும் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளதாக கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வு முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

  8. மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு

    மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கல்காட் சஞ்சய் பாலத்தில் இருந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திங்கள்கிழமை காலை இந்தூரில் இருந்து புனே நோக்கி 55 பேருடன் சென்ற பேருந்து கல்காட் சஞ்சய் ​​பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திரமோதி ட்விட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

  9. குடியரசு தலைவர் தேர்தல்: மக்களவை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று தொடங்கியது. இரு அவைகளும் கூடிய நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையைத் தொடங்கி வைத்தார்.

    பின்னர், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

    அதேவேளை, மாநிலங்களவையில் இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வின் சி.வி.சண்முகம், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட புதிதாக தேர்வான ராஜ்யசபா எம்பிக்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

  10. தென்காசி மாவட்டத்தில் 50 சதவிகித தனியார் பள்ளிகளில் விடுமுறை

    தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்து இருந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் 50 சதவிகித தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுமென மாவட்ட முதன்மை பள்ளி கல்வித்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் 148 நர்சரி பிரைமரி, 55 மெட்ரிக் பள்ளிகள் என 203 பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  11. இலங்கையில் அமலுக்கு வந்த அவசரகால சட்டம் - ஒரு விளக்கம்

  12. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் விடுமுறை விட்ட தனியார் பள்ளிகளில் விசாரணை

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தனியார் நர்சரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை விடப்பட்ட தனியார் பள்ளியில் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து நேற்று வன்முறை வெடித்தது.

    இதனை கண்டிக்கும் வகையில் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்து இருந்த நிலையில் அரசு சார்பில் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

    இந்த நிலையில் இன்று ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் தனியார் நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் உள்ளது இதில் ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் விடுமுறை விடப்பட்ட பள்ளிகளில் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல கோவையில் சுகுணா, நேசனல் மாடல், வித்யாநிகேதன், கருமத்தம்பட்டி கோவை பப்ளிக் ஸ்கூல், அன்னூர் அம்பாள், பிலோகன்ஸ், நவபாரத், மதுக்கரை பிருந்தாவன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  13. கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்?

  14. கள்ளக்குறிச்சி சிறுமியின் உடலை மறு-உடற்கூராய்வு செய்ய அனுமதி

    கள்ளக்குறிச்சி சிறுமியின் வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டதோடு சில வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர். அதன்படி,

    • உடற்கூராய்வு முழுவதையும் வீடியோ எடுக்க வேண்டும்.
    • மறு பிரேத பரிசோதனையின் போது சிறுமியின் தந்தையும் அவரது வழக்கறிஞரும் ஆஜராக அனுமதி
    • வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CB-CID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

    அதே சமயம், சமூக ஊடகங்களில் இணை விசாரணை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

  15. "மாணவர்கள் எனும் போர்வையில் சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்"- எ.வ. வேலு

  16. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது

    இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

    குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையும், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும் தொடங்கின.

    இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் 24 மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன.

  17. கள்ளக்குறிச்சி வன்முறை - ஒரு வழக்குக்காக கூடிய நீதிமன்றம்

    கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டு 120 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் 120 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர் படுத்த உள்ளனர்.

    144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ள காரணத்தால், இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம்‌ அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், இன்று இந்த ஒரு வழக்கு மட்டுமே நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  18. தேவைப்பட்டால் விவாதம்: கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் உரை

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசினார் இந்திய பிரதமர் நரேந்திரமோதி.

    அவர் பேசியதாவது, " குடியரசு தலைவர் தேர்தலுடன் சேர்ந்து நடக்கும் இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. விரைவில் ஒரு புதிய குடியரசு தலைவரையும் குடியரசு துணை தலைவரையும் நாம் பெறுவோம்."

    தொடர்ந்து பேசிய அவர், " நாடாளுமன்ற அவைக்குள் அனைவரும் திறந்த மனதுடன் ஆலோசிப்போம். தேவைப்பட்டால் விவாதமும் நடத்த வேண்டும். அனைவரும் ஆழமாக சிந்தித்து உரையாற்றும்படி நான் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன்"

  19. குடியரசு தலைவர் தேர்தல்: வாக்களித்த மு.க.ஸ்டாலின்

    கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டபேரவையில் நடந்த இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் கலந்து கொண்டு வாக்களித்தார்.