அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர் - இபிஎஸ்
அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுகவினரிடையே இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், "அதிமுகவில் இருந்துகொண்டே நம்மை அழிக்க வேண்டும் என சில பேர் செய்த சதியினால்தான் நாம் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதிமுக ஆட்சி வருவதற்கு யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, அந்த தடைக்கற்கள் அத்தனையும் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளன.
அதிமுகவை இன்று முடக்கப் பார்க்கின்றார் மு.க.ஸ்டாலின். நம் துரோகிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த அரசாங்கம் எம்ஜிஆர் மாளிகைக்கு (அதிமுக அலுவலகம்) சீல் வைத்திருக்கின்றனர். அரசாங்கமும் காவல்துறையும் துரோகிகளுடன் துணைநின்று நாம் கோவிலாக வணங்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகைக்கு சீல் வைத்துள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு எம்ஜிஆர் விட்டுச் சென்ற சொத்து எம்ஜிஆர் மாளிகை. இதில் யாருக்கும் உரிமையில்லை, அது தொண்டர்களின் சொத்து" என பேசினார்.