சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அஇஅதிமுகவின் தலைமை அலுவலக வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
அந்த சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பும் வாதிட்ட நிலையில், ஜூலை 11ஆம் தேதி காலையிலிருந்து என்ன நடந்தது என்பதை காலவரிசைப்படி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்தபோது காவல்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்காமல் இருந்திருந்தால் அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்றும் பாதுகாப்பை மீறி அதிமுகவினர் சென்றதால்தான் கலவரம் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மீது தவறான கருத்தை காவல்துறை தரப்பு தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்வதாகவும் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், பொதுக் குழு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி தங்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்றும் பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க மறுத்து விட்டார் என்றும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.
ஜூலை 11ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்ததாகவும் அவர்கள் கட்சி வாயிலில் அமர்ந்துகொண்டு உள்ளே விடாமல் தடுத்ததால்தான் தகராறு ஏற்பட்டது என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் பொருளாளர் என்ற முறையிலும் கட்சி அலுவலகத்தில் தனக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கட்சி அலுவலகம் யாருக்கு உரிமையானது என்பதை ஆர்டிஓ தீர்மானிக்க முடியாது என்றும் சிவில் நீதிமன்றம்தான் தீர்மானிக்க முடியும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி அலுவலகத்தில் உரிமை இருப்பதாகச் சொல்லும் ஓ. பன்னீர்செல்வம் அத்துமீறி உள்ளே நுழைந்ததும் கட்சி ஆவணங்களை தூக்கிச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தலைமைக் கழக செயலர் என்ற நிலையில், கட்சி அலுவலகத்தின் பொறுப்பு தங்கள் வசம் மட்டுமே இருப்பதாகவும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அதே நேரம், ஓ. பன்னீர்செல்வம் ஆட்சேப மனுவைத் தாக்கல்செய்ய திங்கட்கிழமை வரை நீதிபதி அவகாசம் வழங்கியிருக்கிறார்.