செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் ரெட்ட ஏரிக்கரை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனில் ஏறிச்சென்று எதிர்ப்புற ( திருச்சி-சென்னை மார்க்கம்) சாலைக்கு சென்றது.
மேலும், அச்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது உரசியவாறு சென்ற லாரி, சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற நபர்கள் வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், ஆம்னி பேருந்தில் பயணித்த 6 பேர் மற்றும் வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
லாரி மோத வருவதை கவனித்த ஆம்னி பேருந்து ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிரிழப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால், திருச்சி-சென்னை செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிய பின் வாகன போக்குவரத்து சீரானது.