அதிமுக உள்கட்சி சண்டையில் திமுகவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ். பாரதி.
இது தொடர்பாக சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பரதி, "அதிமுக கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை எடப்பாடி பழனிசாமி எப்படி நடத்தினார் என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாகவே தெரியும்.," என்று கூறினார். அவரது பேட்டியில் இருந்து....
தன்னுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்து வருகின்றன. அந்த வருமான வரித்துறை அதிமுக கூட்டு வைத்திருக்கும் மத்திய அரசின் கையில் உள்ளது. அதைக் கண்டித்துப் பேச எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை.
எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சரையும் திமுகவையும் தொடர்புபடுத்திப் பேசிவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகி விட்டது. அவர்களின் கட்சிக்குள் நிலவும் பிரச்னையை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் கூட அதிமுக பொதுக்குழு கூட்டங்கள் நடந்துள்ளன. அப்போது எல்லாம் அந்த கூட்டங்களில் பங்கேற்க வந்தவர்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கடந்த இரண்டு நாட்களாக எந்த ஹோட்டல்களிலும் தங்குவதற்கு அறை கிடைக்காத நிலை இருந்தது. இதை செய்தியாளர்களே விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த அளவுக்கு கட்சிக்கூட்டத்தை நடத்தும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பணத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
ஆனால், இதில் திமுகவை தொடர்புபடுத்தக் கூடாது. நீதிமன்றத்துக்கு கட்சித் தலைமை தொடர்பாக சென்றது யார்? எம்ஜிஆர் மறைந்ததில் இருந்து அதிமுக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விவரத்தை சந்தித்து பிரிந்து பிறகு சேரும் வழக்கத்தை கொண்டுள்ளது.
இப்போது கூட இந்த கட்சியினர் பிரிந்து விட்டாலும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என நினைக்கிறேன். சசிகலா காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் ஒரே வாரத்தில் அவருக்கு எதிராக செயல்பட்ட வரலாறையும் அந்த கட்சி பார்த்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலக மோதலில் இரு தரப்பிலும் மோதல் கடுமையாக இருந்ததால் கட்சிக்கு உரிமை கொண்டாட முற்பட்டனர். அதனால், ஆர்டிஓ தலையிட்டு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார். எனவே நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வை அந்த கட்சியினர் பெற வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதாலேயே காவல்துறையும் ஆர்டிஓவும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு காலை 9 மணிக்கு வரும் என தெரியும்போது அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என்பது கூட தெரியாமல் கட்சிக்கூட்டத்தை வானகரத்தில் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஏமாந்து விட்டு பிரச்னை முற்றும் அளவுக்கு இடம்கொடுத்து விட்டு இப்போது திமுகதான் காரணம் என குற்றம்சாட்டுவதை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.