You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

எல்லை பகுதிகளில் சீன நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம் - இந்திய வெளியுறவுத்துறை

லடாக் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. நெல்லையில் மணமக்களுக்கு எரிவாயு சிலிண்டரை பரிசாக வழங்கிய நண்பர்கள்

    வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் தொடர் விலை ஏற்றத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு எரிவாயு சிலிண்டரை மணமகனின் நண்பர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

    வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் தொடர்ச்சியான விலையேற்றம் காரணமாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு மத்திய அரசு உடனடியாக விலை குறைப்புக்கான நடவடிக்கையை எடுக்க கோரிக்கை விடுத்தும், இன்று நடந்த திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு, மணமகனின் நண்பர்கள் ஒன்றிணைந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரை அன்பளிப்பாக வழங்கினர்.

    மணமக்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கும் மேடையில், எரிவாயு சிலிண்டர் அளித்தது அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  2. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: குவிந்த திரை பிரபலங்கள்; வைரலான புகைப்படங்கள்

  3. சென்னை - ரயில் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்

    சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இது குறித்து குரோம்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

    இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலை

  5. ஆபரேஷன் புளூஸ்டார்: சீக்கியர் பொற்கோவிலுக்குள் பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பிய வரலாறு

  6. மதுரை - வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 7 பேருக்கு கொரோனா

    சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு, விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தனியார் மருத்துவமனையிலும் சிலர் வீட்டிலிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை கொரோனா என்பதை கண்டறிய, மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  7. ஒரு கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை

  8. இலங்கை - எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார் பசில் ராஜபக்ஷ

    முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

    தனது விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இன்று (ஜூன் 9) அவர் அளித்தார்.

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில், நிதி அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்த நிலையில், அண்மையில் அமைச்சு பொறுப்பை ராஜிநாமா செய்திருந்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுப் பெற்றதை அடுத்தே, பசில் ராஜபக்ஷ அமைச்சு பொறுப்பில் இருந்து விலகினார்.

    இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் தற்போது விலகியுள்ளார்.

  9. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  10. குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று 3 மணிக்கு அறிவிப்பு

    குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று 3 மணிக்கு அறிவிக்க உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. டெல்லியில் விக்யான் பவனில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவதால் தேர்தல் நடைபெற உள்ளது.

  11. யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

  12. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒட்டி ஒரு லட்சம் பேருக்கு விருந்து

    விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் திருமண விருந்து வழங்கப்பட உள்ளது.

  13. ஊராட்சியில் முறைகேடு செய்ததாக ஆறு அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

    செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்ததாக, ஆறு அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சூணாம்பேடு ஊராட்சியில் 2017-18ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சி.துரை, தந்தை பெயர் சின்னையன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துரை என்பவருக்கு ஒதுக்கீடு செய்து 4 தவணைத் தொகைகள் வழங்கி முறைகேடு செய்ததாக, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லாபாய், பத்மா ஜானகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.ஜெயக்குமார் மற்றும் ரமேஷ், உதவி பொறியாளர் செந்தில் நாதன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் மீது சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  14. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,240 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை: 32,498

  15. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருவதாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டியதாக ஏற்கெனவே நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

    இச்சோதனை சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே நீடூரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக 5 பேரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களிடம் சில ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து வந்திருந்த எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து தனித்தனியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உத்திரங்குடியில் ஜெகபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுண்ணாம்பு கார வீதியிலுள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • வட கொரியா எந்த நேரத்திலும் தமது ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
    • தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு பிறகே நூபுர் ஷர்மா விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    • புத்தளம் - மாரவில பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
    • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    • கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.