பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு: 'துளியும் உண்மையில்லை' - மா.சுப்பிரமணியன் பேட்டி

பட மூலாதாரம், Subramanian.Ma
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கு பதிலாக ஆவின் பவுடர் கொடுத்தால் அரசு ரூ.45 கோடி பணத்தை மிச்சப்படுத்தலாம். ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் ஆகிய பொருட்களை வாங்குவதில் திமுக அரசு ஊழல் செய்துள்ளது.
இதனால் ரூ. 77கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அந்த குற்றசாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'கர்ப்பிணிகளுக்கு வாங்கப்படும் கிட் தொடர்பான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. டெண்டர் முடிவு வருவதற்கு முன்னர், டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சுமத்துவது நியாயமல்ல.' என்றார்.
மேலும், 'அண்ணாமலை சொல்வதுபோல் ஆவின் பால் பவுடரை, ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கு பதிலாக கொடுக்கமுடியாது. ஆவின் பால் பவுடர் டீ, காபியுடன் கலந்து சாப்பிடும் பவுடர்.' என்றார் அமைச்சர்.
பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது போல ஐயன் சிரப் வாங்குவதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,'' குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஐயன்சிரப் மருந்தில் இரண்டு பொருட்கள்மட்டும்தான் இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு தரும் ஐயன் சிரப்பில் 32 பொருட்கள் உள்ளன. குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப் மருந்தை கர்ப்பிணி பெண்களுக்கு தர முடியாது. இந்த இரண்டு மருந்துகளின் கலவையும் வேறுவேறு,''என்றார்.






