இலங்கை பெண் அகதி வீட்டில் இரவில் நுழைந்ததாக மெரைன் போலீஸ் தற்காலிக பணியிடை நீக்கம்

பட மூலாதாரம், special arrangement
இலங்கை பெண் அகதி வீட்டுக்குள் இரவில் நுழைந்த காவல்துறையை சேர்ந்த ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி படகில் வந்த இளம்பெண் ஒருவர் உட்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்த அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.
அப்பெண்ணிடம் மெரைன் போலீஸ் அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பெண் மறுத்ததையடுத்து அன்பு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
விசாரணை அறிக்கைபடி, மாவட்ட காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.


