யுக்ரேனுக்கு கூடுதல் உதவி - அமெரிக்கா தகவல்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
யுக்ரேன் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், '' தானும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினும் போலந்தில் இருந்து கியவ் வரை ரயிலில் சென்று, யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்ததாக'' தெரிவித்தார்.
ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்க அதிகாரிகளின் இந்த சந்திப்பு உயர் மட்ட அளவில் இருந்தது. ''யுக்ரேனுக்கு கூடுதலாக 700 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க உள்ளதாக'' அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க ராஜீய அதிகாரிகள் இந்த வாரம் யுக்ரேனுக்கு வருவார்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 'கீயவில் அமெரிக்க தூதரகத்தை மீண்டும் எப்போது திறக்க வேண்டும் என்பது குறித்து மிக கவனமாக முடிவு செய்யப்படும்.' என்று பிளிங்கன் கூறுகிறார்.
அவர் வெள்ளிக்கிழமை ஐ.நா. தலைமைச் செயலாளரிடம் பேசியதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம், போர் நிறுத்தத்தின் தேவை மற்றும் உதவிக்கான வழிகள், மக்கள் வெளியேறுவது ஆகியவை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு உறுதியான தகவல் அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.





