வணக்கம் நேயர்களே!
வணக்கம் இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.
குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேற்றைய முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை - ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 20ஆம் தேதி ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செல்லவுள்ளார்.
- தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கை வலுத்துள்ள நிலையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார்.
- சென்னையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.
- கேரளாவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கிறிஸ்தவ பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் இன்று, ஏப். 19 அன்று, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆப்கன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- மதநிந்தனை புகார் தொடர்பாக, பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.