ரஷ்யா தனது கவனத்தை
வடக்கிலிருந்து விலக்கி, தெற்கு
மற்றும் கிழக்கே டான்பாஸ் என அழைக்கப்படும் பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது.
ராயல் யுனைடெட் சர்வீசஸ்
இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் பணியாற்றும் நிலப் போர் ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ், யுக்ரேனில் அடுத்த சில வாரங்களில்
போர் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி கூறியுள்ளார்.
டான்பாஸில் நடந்த
சண்டை இரண்டாம் உலகப் போரை நினைவூட்டுவதாக இருக்கும் என்று யுக்ரேன் வெளியுறவு அமைச்சர்
கூறியது துல்லியமானதா?
“ஆம், அது துல்லியமானது என்று தான் நினைக்கிறேன்.
யுக்ரேனின் வடக்கில் இருந்து அனைத்து படைகளும் பின்வாங்கிவிட்ட நிலையில், பல தலைமுறைகளாகக்
காணப்படாத ஆயுத மோதலை ஐரோப்பிய மண்ணில் நாம் பார்க்கப் போகிறோம்,” என்றார்
ரெனால்ட்ஸ்.
யுக்ரேன் உண்மையில் அதன் பிரதேசத்தைத் திரும்பவும்
மீட்க முடியுமா?
“இதில், இன்னும் அறியப்படாத காரணிகள் நிறைய
உள்ளன. பல யுக்ரேனியர்கள் வடக்கில் ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுவதால் உற்சாகமடைகிறார்கள்.
ஆனால், வடக்கிலிருந்து
எந்த வலுவான படைகள் வருவதற்கும் முன்னமே தெற்கு மற்றும் கிழக்கில் வரைபடம் இன்னும்
மெதுவாக சிவப்பு நிறத்திற்கு மாறி வருகிறது.
ஆகவே, ரஷ்யா இன்னும் தெற்கு மற்றும் கிழக்கில்
வேகமெடுத்துள்ளது,” என்றார்.
மேற்கத்திய ஆயுதங்கள் இதில் எந்தளவுக்கு
வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்?
“மேற்கத்திய நாடுகள் இதுவரை யுக்ரேனுக்கு
அனுப்பிய ஆயுதங்கள் போரை மாற்றியமைத்துள்ளன. வரும் வாரங்களில் மேற்கத்திய ஆயுதங்கள்
முற்றிலும் இன்றியமையாததாக இருக்கும். ஆனால், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவற்றை
எவ்வாறு கொண்டு செல்வது என்பதை அறிவது கடினம்.
ஜாவெலின்கள், என்.எல்.ஏ.டபுள்யூக்கள் மற்றும் ஸ்டிங்கர்கள் போன்ற அதிநவீன
ஆயுதங்களின் தொழில்துறை உற்பத்தியை அதிகரிப்பது எளிதானதல்ல. இவை, சிக்கலான
விநியோகச் சங்கிலியைக் கொண்டிருப்பதால், மேற்கத்திய அரசுகள் தேவையைத்
தக்க வைக்கப் போராடுகின்றன,” என்றார்.