இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட வந்த மக்கள் - போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

இலங்கை அதிபரின் இல்லம் அருகே பேரணி நடத்திய ஒரு பிரிவு போராட்டக்குழுவினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க ஏற்கெனவே அங்கு தயார் நிலையில் துணை ராணுவ படையினர், போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. பிரதமர் மோதியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், @PMOIndia/Twitter

    படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    பிரதமர் நரேந்திர மோதியை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை நாளை மறுநாள் (ஏப். 2) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதற்காக நேற்றிரவு ஸ்டாலின் டெல்லி வருகை தந்தார். அவரை திமுக தலைவர்கள் வரவேற்றனர்.

    இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பிக்கள் சந்தித்தனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றார். அப்போது, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, "உங்களுக்கு 'வணக்கம்' சொல்லத்தான் வந்தேன். உங்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவில் நாம் சந்திப்போம்" என சோனியா காந்தி கூறியதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் வழங்கியதாகவும், நீட் தேர்வு ரத்து, மழை, வெள்ளம் தொடர்பான நிவாரண நிதி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

  2. வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து - அதிமுக மீது அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

    துரைமுருகன்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி கொண்டு வந்த அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால் தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

    முதல்வர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

  3. ஆம்பூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து - மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

    விபத்து

    ஆம்பூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் வேனில் அழைத்து வரப்படுவார்கள்.

    வழக்கம்போல் இன்று வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் அழைத்து வரப்பட்டார்கள் வடசேரி பகுதியைச் சார்ந்த ராமன் என்பவர் தொழிலாளிகளை ஏற்றிவந்த வேனை ஓட்டி வந்தார்.

    சோலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளர்கள் சத்தியா, பவுனம்மாள், பூர்ணிமா மற்றும் வேன் ஓட்டுநர் ராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த மற்ற தொழிலாளர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  4. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் பிரசாந்த் முத்துராமன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, 'வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது '

    வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்பின் இது தொடர்பான அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது.

    இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பினர். ''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம்.

    அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' எனத் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

  6. கிறிஸ் ராக்கை அறைந்த பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் வில் ஸ்மித்

    ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

    வில் ஸ்மித்திற்கு எதிராக "ஒழுங்கு விசாரணை" தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார்.

  7. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய உலகம், இந்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்.நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் இதோ.

    • இந்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் - ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரிபெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
    • "கேஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக திட்டமிடுவதாக" ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
    • யுக்ரேனின் துறைமுக நகரமான மிக்கோலைவ் நகரத்தில் உள்ள அரசு கட்டடத்தில் (ஆளுநர்அலுவலகம்) நடந்த ரஷ்யத் தாக்குதலில் 12 பேர்உயிரிழந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும், யுக்ரேன்அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
    • கிழக்குயுக்ரேனில் உள்ள ரஷ்யப் படைகள் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியதாக, யுக்ரேன் செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் தெரிவித்துள்ளது.
    • சூயஸ் திட்டம் தொடரும் என, கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
    • பாகிஸ்தானில் ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சி விலக்கிக்கொண்டது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.