பாகிஸ்தானில் அதன் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் அந்நாட்டு மக்களவையான தேசிய அவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரலின்படி, எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிய உள்ளனர்.
இந்த தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கட்சி தரப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.
தேசிய அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 172 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகள் தேவைப்படும்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பலம் என்ன?
தேசிய அவையின் இணையதள தகவலின்படி, ஆளும் கட்சியான பிடிஐக்கு கூட்டணி 178 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இந்த உறுப்பினர்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) உறுப்பினர்கள் 155 பேர், MQM கட்சியின் ஏழு உறுப்பினர்கள், BAP இன் ஐந்து உறுப்பினர்கள், PML-Q இன் ஐந்து உறுப்பினர்கள், GDA கட்சியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் அவாமி முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் அடங்குவர்.
எதிர்கட்சிகளின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 162. இவர்களில் மிகப்பெரிய எதிர்கட்சியான பிஎம்எல் நவாஸ் கட்சிக்கு 84 உறுப்பினர்கள், பாகிஸ்தான் மக்கள் கட்சி்ககு 57 உறுப்பினர்கள், முத்தஹிதா மஜிலிஸ் இ அமால் கட்சிக்கு 15 உறுப்பினர்கள், பிஎன்பி கட்சிக்கு 4 உறுப்பினர்கள், அவாமி தேசிய கட்சிக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் பலம் உள்ளது. இது தவிர இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் எதிர்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
பாகிஸ்தானில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் தவறாக நிர்வகிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு கட்சியும் தமது பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை.