You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தொடரும் தாக்குதல்: மீண்டும் அடைக்கலம் தேடும் மக்கள் - போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது?

போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஷெல் குண்டு தாக்குதல் சத்தம் தொடர்வதாக மேரியோபோலின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. “ரஷ்ய தாக்குதலால் ஒரு கட்டடம் விடாமல் சேதமடைந்துள்ளன”

    சுமார் 450,000 மக்கள் வசிக்கும் துறைமுக நகரமான மேரியோபோல் மீதான இரக்கமற்ற ஷெல் குண்டு தாக்குதல் மற்றும் முற்றுகை குறித்து நிறைய கேள்விப்பட்டோம்.

    ஆனால், சிறிய நகரமான வோல்னோவாகா கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், செய்திகளில் அதிகம் இடம் பெறவில்லை.

    அது, மேரியோபோல் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ள, 25,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரம்.

    ஏறக்குறைய ஒவ்வொரு கட்டடமும் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ இருப்பதாக அங்குள்ள மக்கள் தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

    உள்ளூர் அமைச்சர், டிமிட்ரோ லுபினெட்ஸ், சண்டை மிகவும் உக்கிரமானது என்றும் உயிரிழந்தோரின் உடல்கள் சேகரிக்கப்படாமல் கிடப்பதாகவும் கூறியுள்ளார்.

    சனிக்கிழமை அன்று, லுபினெட்ஸ் போர் நிறுத்ததை உறுதி செய்ததோடு, போக்ரோவ்ஸ்க் நகரத்தில் முடிவடைகின்ற வெளியேறுவதற்கான வழித்தடப் பாதை குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

  2. "மக்கள் வெளியேற்றம் ஒத்தி வைக்கப்படுகிறது" – அறிவித்த மேரியோபோல் நகர சபை

    நகரிலிருந்து வெளியேற்றப்படுவதை ஒத்தி வைப்பது குறித்து மேரியோபோல் நகர சபையிலிருந்து கூடுதலாகச் சில தகவல்கள் வந்துள்ளன.

    நகர சபையின் ஒரு டெலிகிராம் பதிவில், வெளியேற்றம் மற்றும் அதன் ஒத்திவைப்பு குறித்த சமீபத்திய தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க காவல்துறை ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவாதக் கூறியுள்ளது.

    போரை நிறுத்துவது மற்றும் நகருக்கு வெளியே பாதுகாப்பான மனிதாபிமான வழித்தடத்தை உறுதி செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, யுக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டு நாடுகளும் மேரியோபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களைச் சுற்றி ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தன.

    ஆனால், மரியோபோலின் துணை மேயரும் அங்கு வசிக்கும் ஒருவரும் பிபிசியிடம் ரஷ்ய படைகள் குண்டுவீச்சைத் தொடர்வதாகக் கூறினர்.

  3. யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் சீனா தலையிடுமா?

    யுக்ரேனில் தற்காலிக போர்நிறுத்தம் ஏன்? அடுத்து என்ன நடக்கும்? சீனா தலையிட வாய்ப்பு உண்டா?

    விரிவாக பிபிசி தமிழின் நேரலையில்...

  4. "ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் நிற்கவில்லை" - மேரியோபோலின் துணை மேயர்

    இப்போது மேரியோபோலின் துணை மேயர், மக்களை மீண்டும் உள்ளே அழைத்து வர செய்துள்ளதாகவும் தெருக்கள் பாதுகாப்பாக இல்லாததால், வெளியேற்றத்தை நிறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

    செர்ஹி ஓர்லோவ் பிபிசியிடம், மேரியோபோலிலும் ஒரிகிவ் நகருக்கு அருகிலுள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட வெளியேற்றப் பாதையிலும் தொடர்ச்சியான ஷெல் குண்டு தாக்குதல்கள் நடந்ததாகக் கூறுகிறார்.

    “இந்தச் சண்டைகளால் பாதையில் செல்வது பாதுகாப்பானதாக இல்லை” என்று அவர் கூறினார்.

    போர் நிறுத்தத்தை மீறியது குறித்து யுக்ரேன் அரசாங்கம் ஏற்கெனவே ரஷ்ய அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, மேரியோபோலில் தொடரும் ஷெல் குண்டு தாக்குதல் – போர் நிறுத்தப்படவில்லையா?

    உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியிருக்க வேண்டும். இருந்தபோதிலும், ஷெல் குண்டு தாக்குதல் சத்தம் தொடர்வதாக நகரின் உள்ளே இருக்கும் மேரியோபோலில் வசிக்கும் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

    “இப்போது நான் மேரியோபோலின் தெருவில் இருக்கிறேன். ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் ஷெல் குண்டு சத்தம் கேட்கிறது,” என்றார் 44 வயதான பொறியாளர் அலெக்சாண்டர்.

    மேலும், “அமைதி வழித்தடத்தின் வழியாகத் தப்பி ஓட முயன்றவர்களின் வாகனங்களை நான் பார்க்கிறேன். அவர்கள் திரும்பி வருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

  6. ஒருபுறம் தற்காலிக போர் நிறுத்தம், மறுபுறம் தொடர் வான்வழித் தாக்குதல் - என்ன நடக்கிறது?

    ரஷ்யத் தாக்குதல் நடக்கும் மேரியோபோல், வோல்னோவாகா ஆகிய யுக்ரேன் நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வசதியாக சனிக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 10 மணியில் இருந்து மனிதாபிமான வழித்தடம் அனுமதிக்கப்படும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறியுள்ளன. ஒருபுறம் தற்காலிக போர் நிறுத்தம் இருந்தாலும் மறுபுரம் வான் வழித் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கள நிலவரத்தை விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

  7. தாக்குதலுக்கு நடுவிலும் பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற யுக்ரேன்

    பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாராலின்பிஸ் போட்டிகளின் முதல் நாளில் யுக்ரேன், மொத்தம் மூன்று தங்கம் மற்றும் ஏழு இதர பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியிலும் 20 தடகள வீரர்கள் அடங்கிய குழு சீனாவுக்குச் சென்றது.

    தடகள வீரர் க்ரிகோரி வோவ்சின்ஸ்கி, தன்னுடைய போட்டியை யுக்ரேனில் அமைதிக்காக அர்ப்பணித்து, ஆண்கள் ஸ்பிரின்டில் முதல் பதக்கத்தை வென்றார்.

    ரஷ்ய மற்றும் பெலரஷ்ய விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  8. "இந்திய மாணவர்களை வெளியேற்ற உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு கோரியுள்ளோம்" - இந்திய வெளியுறவுத் துறை

    “யுக்ரேனில் உள்ள சுமியில் உள்ள இந்திய மாணவர்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். நம் மாணவர்களுக்காகப் பாதுகாப்பான வழித்தடத்தை உருவாக்க உடனடி போர் நிறுத்தத்திற்குப் பல வழிகள் மூலம் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய அரசாங்களுக்குக் கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளோம்,” என்று இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

  9. யுக்ரேன் படையெடுப்பின் விளைவாக ரஷ்ய ஃபார்முலா 1 வீரர் நீக்கிய அமெரிக்கா

    யுக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யா முடிவு செய்ததன் விளைவாக, ரஷ்ய ஃபார்முலா ஒன் வீரர் நிகிதா மெஸெபின், ஹாஸ் அணியால் நீக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹாஸ், அவர்களுடைய முதன்மை ஸ்பான்சரான, உரல்கலி என்ற ரஷ்ய ரசாயன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் முடித்துக் கொண்டது.

    அந்த நிறுவனம், ரஷ்ய முன்னணி வணிகர்களில் ஒருவரும் விளாதிமிர் புதினுடைய நெருங்கைய வட்டத்தில் ஒருவருமான, மெஸெபினின் தந்தை டிமிட்ரிக்குச் சொந்தமானது.

    படையெடுப்பு தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் மாளிகையில் புதினைச் சந்திக்க அழைக்கப்பட்ட பல ரஷ்ய முன்னணி வணிகர்களில் மெஸெபினின் தந்தையும் ஒருவர்.

  10. "என் வீட்டிற்கு வாங்க" ரஷ்ய தாக்குதலுக்கு நடுவே ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

    யுக்ரேன் எல்லையைக் கடந்து போலந்துக்குள் செல்லும் பல்லாயிரக்கணக்கானோர், அங்கு வாழும் உறவினர்களையோ அல்லது தெரிந்தவர்களையோ தேடிச் செல்கின்றனர். ஆனால், செல்வதறு இடமின்றித் தவிப்போருக்கு இவானாவும் அவருடைய தோழிகளும் உதவி வருகின்றனர்.

  11. “வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை” - உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்ட மேரியோபோல் மேயர்

    மேரியோபோலின் மேயர் வாடிம் பொய்சென்கோ, தனது நகரத்திலிருந்து மனிதாபிமான வழித்தடத்தை அறிவித்த பிறகு, உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டார்.

    அதில், “மேரியோபோல் தெருக்கள் மற்றும் வீடுகள் இல்லை, அதன் மக்கள்,” என்று கூறினார்.

    மேலும், “ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தொடர்ச்சியான, இரக்கமற்ற ஷெல் குண்டு தாக்குதல் இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மேரியோபோலில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று கூறியுள்ளார்.

  12. ரஷ்ய படைகள் நான்கு நகரங்களைச் சுற்றி வளைத்திருக்கலாம்

    முந்தைய நாட்களில் இருந்ததைவிடக் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாக நடந்துள்ளன என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அதேநேரம், ரஷ்ய படைகள் தெறு துறைமுக நகரமான மைகோலேய்வ் மற்றும் மற்றொரு துறைமுகமான ஒடெஸ்ஸாவில் முன்னேறி வருவதாகவும் எச்சரிக்கிறது.

    இருப்பினும், ஒடெஸ்ஸாவை நோக்கி முன்னேறுவதற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, மைக்கோலேய்வை சில படைகள் தவிர்க்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கார்ஹிவ், செர்னிஹிவ் மற்றும் மேரியோபோல் ஆகிய நகரங்களை யுக்ரேன் தொடர்ந்து கையில் வைத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதேநேரத்தில், வடகிழக்கு நகரமான சுமியில் தெரு சண்டைகள் நிகழ்ந்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

    நான்கு நகரங்களும் ரஷ்ய படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

  13. போலந்துக்குள் செல்ல வரிசை கட்டி நிற்கும் யுக்ரேன் மக்கள்

    யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்வதால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யுக்ரேனியர்கள் பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறுகிறது. மேலும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், யுக்ரேனின் அண்டை நாடான, போலந்துற்குச் சென்றுள்ளனர்.

    போலந்து-யுக்ரேன் எல்லைக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியிலிருந்து சாலையின் குறுக்கே, போலந்தில் தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லாத மக்களுக்கான வரிசை இருந்தது. அதிகாரப்பூர்வ வரவேற்பு மையங்களில் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் செல்ல அடிக்கடி பேருந்துகள் வந்தன.

    நான் சென்ற முகாம், படுக்கைகள் அமைக்கப்பட்டு, உணவு மற்றும் பானங்கள் கிடைக்கக்கூடிய ஒரு பெரிய கிடங்கு பாணியிலான கட்டடம்.

    மக்கள் இங்கு நீண்ட காலம் தங்குவதில்லை. மேலும் மேற்கே உள்ள இடங்களுக்கு மக்களை அழைத்துச் செல்ல போக்குவரத்து குறித்த அறிவிப்புகள் அடிக்கடி வருகின்றன.

    போலந்தின் இந்தப் பகுதியில் பொருளாதாரச் சவால்கள் உள்ளன. அதிக வேலைகள் இல்லை. சில பெரியளவிலான வேலை அளிக்கக்கூடிய முதலாளிகளில் ஒருவர் மேக்கப் நிறுவனமான இங்க்லாட் ஆகும்.

    ஆனால், எல்லையைக் கடக்கும் இடத்தில் போலந்து தன்னார்வலர்கள் இருந்தனர். ஒரு மார்ஷலாக பணிபுரியும் ஒருவர் என்னிடம், யுக்ரேன் குழந்தைகளின் எண்ணம் தான் தன்னை அங்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

    ரஷ்யர்களுக்கு எதிரான போராட்டத்தில் தானும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவ்வாறு செய்ய யுக்ரேனுக்குள் செல்ல முயன்று நான்கு முறை தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  14. விரைவில் மக்களை வெளியேற்றும் திட்டம் தொடங்கும்- மேரியோபோல் நகர மன்றம் தகவல்

    பல நாட்களாக ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டு இருந்த தென்கிழக்கு நகரமான மேரியோபோலில் இருந்து தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவது பற்றிய கூடுதல் தகவல்கள் மேரியோபோல் நகர மன்றத்தில் இருந்து கிடைத்துள்ளன.

    • போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும்.
    • பொதுமக்களின் வெளியேற்றம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்குத் தொடங்கும்.
    • அதற்கான வழித்தடம் மேரியோபோலில் இருந்து மேற்கு நோக்கிய நகரமான ஸாப்போரீஷியா வரை உள்ளது.
    • நகரின் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும். மேலும் தனியார் போக்குவரத்தும் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும்.
    • ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள அனைத்து இடவசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்துமாறு நகர மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
    • நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதையிலிருந்து விலகிச் செல்வது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  15. ரஷ்ய படையெடுப்பின் 10-வது நாள்: இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பத்தாவது நாளாக இன்று தொடர்கிறது. இந்நிலையில், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே:

    • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பிப்ரவரி 24 முதல் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
    • டினிப்பர் நதி கருங்கடலைச் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள கெர்சன் தான் முதலில் வீழ்ந்த பெரிய நகரம்.
    • ரஷ்ய ஏவுகணைகள் தலைநகர் கீயவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்ஹிவ் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. சாலை வழியாக கீயவை நெருங்கும் ஒரு பெரிய கவச வாகனத் தொடரணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • மேரியோபோல் தெற்கு துறைமுகம் இன்னும் முற்றுகையின் கீழ் உள்ளது. ரஷ்ய படைகள் மற்றொரு துறைமுகமான ஒடெஸ்ஸாவை நோக்கிச் செல்கின்றன. இரண்டையும் கைப்பற்றுவது யுக்ரேனின் கடல் பரப்புடனான தொடர்பைத் துண்டித்துவிடும்.
    • வெள்ளிக் கிழமையன்று பல மணிநேரம் ஷெல் குண்டு தாக்குதல் நடத்திய பின்னர், ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. இந்த நடவடிக்கையைப் பற்றி உலகத் தலைவர்கள், இந்தத் தாக்குதல் ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் கவலையுடன் கூறினர்.
    • 1986-ஆம் ஆண்டு அணு உலை விபத்து நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலையும் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.
    • யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, மேற்கு நாடுகள் தனது நாட்டில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கத் தொடர்ந்து மறுத்து வருவதைக் கண்டித்துள்ளார்.
    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நாட்டின் மத்திய வங்கி, அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் அவரது உள்வட்டத்தைக் குறி வைத்து, ரஷ்ய சொத்துகளை முடக்குவது போன்ற தடைகளை விதித்துள்ளன. அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரூபிள் மதிப்பு சரிந்துள்ளது. இது வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பயணங்களை பாதித்தது.
    • யுக்ரேனில் நடக்கும் படையெடுப்பின் செய்திகளைத் தணிக்கை செய்யும் கொடூரமான சட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிபிசி உட்பட சுயாதீன ஊடகங்கள் பலவும் ரஷ்யாவில் பணிகளை நிறுத்திவிட்டன.
    • சாம்சங் முதல் ஏர் பிஎன்பி மற்றும் கார்டியர் வரை, பல நிறுவனங்கள், ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரஷ்யாவிலான செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளன.
  16. ரஷ்யாவில் 'போலி செய்திகளை' பரப்பினால் 15 ஆண்டுகள் சிறை

    யுக்ரேன் படையெடுப்பு குறித்து "போலி செய்திகளை" பரப்புவோர் மீது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. செய்திகளின் சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் விளைவாக ரஷ்யாவில் நடந்தது என்ன?

  17. தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதி செய்த யுக்ரேன்

    இரண்டு தென்கிழக்கு யுக்ரேனிய நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான வழித்தடங்கள் திறப்பு பற்றிய செய்தியை நாம் முதலில் பார்த்தோம். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து வந்த அந்தத் தகவலை யுக்ரேனிய தரப்பு உறுதி செய்துள்ளது.

    தற்போது டொனெட்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தலைவரான பாவ்லோ கிரிலென்கோவிடம் இருந்து யுக்ரேனிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    உள்ளூர் நேரப்படி, 9 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் என்று அவர் உறுதி செய்தார். மேலும், அவருடைய நிர்வாகம் தற்போது பொதுமக்கள் வெளியேற்றம் குறித்த விவரங்கள் தொடர்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

  18. வான்வழித் தாக்குதல் குறித்து ரஷ்ய ஊடகங்கள் எச்சரிக்கை

    ரஷ்ய படையெடுப்பின் பத்தாவது நாளான இன்று, யுக்ரேனிய ஊடகங்கள் பல்வேறு நகரங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைப் பற்றி செய்தியளித்துக் கொண்டுள்ளன.

    தற்போது ரஷ்ய படைகளால் சூழப்பட்டுள்ள கிழக்கு நகரமான சுமியில் ஷெல் குண்டு தாக்குதல் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது என்று யுக்ரேன்-24 என்ற செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    கீயவ் இண்டிபெண்டென்ட் என்ற செய்தி நிறுவனம், கார்ஹிவில் பல குண்டுவெடிப்புகள் கேட்பதாகத் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு முன்னதாக ஒரு ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் மக்களில் ஒருவர் ப்ளாட்பாரத்தில் ராக்கெட்டுகள் தாக்குவது குறித்து ட்வீட் செய்தார்.

    கீயவ் இண்டிபெண்டென்ட் செய்தி நிறுவனமும் கீயவ் தலைநகரத்திலும் சுமி, ஷைடோமிர், செர்னிஹிவ் ஆகிய நகரங்களிலும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை குறித்து ட்வீட் செய்துள்ளது.

  19. இரு யுக்ரேனிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் - ரஷ்யா

    ரஷ்யத் தாக்குதல் நடக்கும் மேரியோபோல், வோல்னோவாகா ஆகிய யுக்ரேன் நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வசதியாக சனிக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 10 மணியில் இருந்து மனிதாபிமான வழித்தடம் அனுமதிக்கப்படும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன.

    பொதுமக்கள் நகரங்களை விட்டு வெளியேறுவதற்காக, அமைதி கடைபிடிக்கப்படும். யுக்ரேனிய அதிகாரிகளும் இதற்கு உடன்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இருப்பினும், யுக்ரேன் தரப்பிலிருந்து இதுவரை இதை உறுதி செய்ததாகத் தெரியவில்லை.

    முன்னதாக, மேரியோபோல் நகர மேயர் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய முற்றுகைக்கு நடுவில் ஒரு மனிதாபிமான வழித்தடம்” வேண்டும் என்று கேட்டிருந்தார்.

  20. ஸ்கை நியூஸ் தலைமை செய்தியாளர் மீது ரஷ்ய படையினர் தாக்குதல்

    ஸ்கை நியூஸ் (Sky News) தலைமை செய்தியாளர் ஸ்டூவர்ட் ராம்சே, தன்னுடன் பணி புரியும் நால்வருடன், திங்களன்று யுக்ரேன் தலைநகர் கீயவ் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த ரஷ்ய படையினர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

    இப்போது பிரிட்டனில் இருக்கும் அவர், நடந்த சம்பவம் பற்றி விளக்கியுள்ளார்:

    “என்னுடைய மரணம் வேதனையாக இருக்குமா என்று நான் எண்ணியது நினைவுக்கு வருகிறது. அப்போது என் கீழ் முதுகில் அடிபட்டது.

    “நான் தாக்கப்பட்டேன்” என்று கூச்சலிட்டேன். ஆனால், என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில், அது அவ்வளவாக வலிக்கவில்லை, என்னை முஷ்டியால் குத்தியதைப் போல் இருந்தது.

    நான் மிகவும் அமைதியாக உணர்ந்தேன் என்பது விசித்திரமாக உள்ளது."

    "என் தலைக் கவசத்தைப் போட்டுக்கொண்டேன். தப்பிக்க முயன்றேன். பிறகு, அந்த முயற்சியை நிறுத்திவிட்டு, மீண்டும் கதவில் இருந்த ஓர் அலமாரியில் இருந்து ஒரு வழியாக என் கைப்பேசியையும் பத்திரிகை அடையாள அட்டையையும் மீட்டெடுத்தேன்.

    நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், எங்களைப் போலவே பல குடும்பங்கள் ரஷ்ய குழுக்களால் குறிவைக்கப்பட்டு, தாக்கப்படுகின்றன.

    இந்தப் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.”