You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தொடரும் தாக்குதல்: மீண்டும் அடைக்கலம் தேடும் மக்கள் - போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது?

போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஷெல் குண்டு தாக்குதல் சத்தம் தொடர்வதாக மேரியோபோலின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. வணக்கம் நேயர்களே!

    மார்ச் 5ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
    • யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்றைய குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது வோல்னோவாகா மற்றும் அதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து 400 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.
    • ரஷ்யாவில் ராணுவ சட்டத்தை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
    • உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • யுக்ரேனில் இருந்து 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இது தேர்தலிலும் சரி மக்களிடமும் சரி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், பேசியபோது, ரஷ்ய ராணுவத்தைப் பற்றி “போலி செய்திகளை” வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
    • பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாராலின்பிஸ் போட்டிகளின் முதல் நாளில் யுக்ரேன், மொத்தம் மூன்று தங்கம் மற்றும் ஏழு இதர பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

  2. கணவரையும் நாட்டையும் பிரிந்த யுக்ரேன் பெண்கள்

    கணவர் மற்றும் தந்தையைப் பிரிந்து யுக்ரேனை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் போலந்து எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

  3. இதுவரை 13 லட்சம் யுக்ரேனியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்

    ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.

    “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் கண்ட மிக வேகமாக இடம்பெயரும் அகதிகள் நெருக்கடி இது,” என்று ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

    படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 13 லட்சம் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

    போலந்து நாட்டின் அதிபருடைய கூற்றுப்படி, இதுவரை வந்த அகதிகளில் பாதிக்கும் மேலானவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.

    ஆனால், அனைத்து அகதிகளும் தாங்கள் முதலில் தப்பி வரும் நாடுகளில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதில்லை.

    உதாரணமாக, ருமேனியாவை எடுத்துக் கொள்ளலாம். போரின் முதல் எட்டு நாட்களில் அங்கு பயணித்த 200,000 பேரில் 140,000 பேர் பிற நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்ம் சுமார் 60,000 பேர் மட்டுமே ருமேனியாவில் இருந்ததாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் எல்லையிலுள்ள நாடுகள், போரிலிருந்து வெளியேறும் பலருக்கும் முதல் புகலிடமாகச் செயல்படுகின்றன. ஏனெனில், அவர்கள் அங்கிருந்து மற்ற தொலைவிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.

  4. மேரியொபோல் நகரம் ரஷ்ய படையெடுப்பில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

    மேரியோபோல் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தப்பிக்கும் நம்பிக்கையைக் கொடுத்த, திட்டமிட்ட வெளியேற்றத்தை ரத்து செய்ய வைத்தது.

    இந்த நகரம் பல நாட்களாகக் கடும் தீயில் சிக்கியுள்ளது. ஆனால், இது ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது?

    இது கருங்கடலில் யுக்ரேனின் மிகப்பெரிய துறைமுகங்களில் இன்று. மேலும் க்ரீமியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பாதையில் இருக்கும் ஒரு முக்கிய நகரம்.

    ரஷ்யா மேரியோபோலைக் கைப்பற்றினால், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகியவற்றை க்ரீமியாவோடு இணைக்கும் ஒரு பாதையின் கட்டுப்பாட்டைக் கைக்கொள்ள முடியும்.

  5. "பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்" - மாணவர்களுக்கு இந்திய தூதரகம் கடிதம்

    கீயவில் இருக்கும் இந்திய தூதரகம் சற்றுமுன் யுக்ரேனில் இருக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதில், “கடந்த ஒரு வாரத்தில், 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை யுக்ரேனிலிருந்து வெளியேற்றியுள்ளோம். கார்ஹிவ், சுமி ஆகிய நகரங்களைத் தவிர் யுக்ரேனின் மற்ற பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைவரையும் வெளியேற்றிவிட்டோம்.

    கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிசோச்சின் பகுதியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர். தற்போது பிசோச்சினில் சுமார் 300 இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்று வெளியேற்றப்படுவார்கள்.

    சுமியில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய தூதரகம் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நம் மாணவர்கள் பல துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது புரிகிறது. அனைவரும் இன்னும் சிறிதளவு பொறுமையோடும் மிக பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இந்திய அரசு உங்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வரும்,” என்று கூறியுள்ளது.

  6. யுக்ரேன் கட்டடங்கள்: ரஷ்ய தாக்குதலுக்கு முன்னும் பின்னும்

    ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் யுக்ரேன் முழுவதும் நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களை அழித்துள்ளன. கடந்த வாரம் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பொதுமக்கள் பகுதிகளில் ஏற்பட்ட சில அழிவுகளுக்கு முன்னரும் பின்னருமான நிலைமையை கீழுள்ள படம் காட்டுகிறது.

    ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில், அந்த நகரத்தின் மீது பல கொடிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    கீழேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடந்த சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டது.

    யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்ஹிவ், பல நாட்களாக ரஷ்யர்களின் தீவிர வான்வழி குண்டுவெடிப்புகளின் மையமாக உள்ளது. இதனால் அந்த நகரின் மையப் பகுதி மோசமாகச் சேதமடைந்துள்ளது.

    புதன் கிழமையன்று நகரின் குடியிருப்பு மற்றும் பிற பகுதிகள் கண்மூடித்தனமாக ஷெல் குண்டுகளால், “இரவு முழுவதும் தாக்கப்பட்டதாக” யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதை போர்க் குற்றமாக ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

  7. “ஒப்பந்தங்களை மீறீயதற்கு ரஷ்யாவை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும்” – யுக்ரேன்

    முன்பே கூறியிருந்ததைப் போல், உள்ளூர் நேரப்படி மேரியோபோல் மற்றும் வோல்னோவாகாவில் நடக்கவிருந்த போர் நிறுத்தத்தை யுக்ரேனியர் “தேசியவாதிகள்” உடைத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

    கடந்த ஒரு மணி நேரத்தில், யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.

    “மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பது தொடர்பான ஒப்பந்தங்களை மீறியதற்காக ரஷ்யாவை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டுமென்று யுக்ரேன் அழைப்பு விடுத்தது.

    மேலும், “நடந்துகொண்டிருக்கும் ஷெல் குண்டு தாக்குதல்களுக்கு நடுவே, பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் உணௌ மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும் மனிதாபிமான வழித்தடங்களைத் திறப்பது சாத்தியமில்லாதது,” என்று யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

  8. குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது, 400 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்

    யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இன்றைய குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது வோல்னோவாகா மற்றும் அதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து 400 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர்.

    உள்ளூர் நேரப்படி 9 மணிக்குத் தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 15,000-க்கும் மேற்பட பொதுமக்களை இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவது ஆரம்பத் திட்டமாக இருந்தது.

    ஆனால், பிராந்திய ஆளுநர் பாவ்லோ கூருலென்கா, “இன்னும் அதிகமான மக்களை வெளியேற்றுவதற்கான எண்ணமும் தேவையான போக்குவரத்தும் எங்களுக்கு இருந்தபோதிலும், நீண்ட வரிசையை நாங்கள் நிறுத்த வேண்டியிருந்தது. ஏனெனில், ரஷ்யா மீண்டும் வோல்னோவாகா மீது இரக்கமின்றி ஷெல் குண்டுகளை வீசத் தொடங்கினர். மேற்கொண்டு நகர்வது ஆபத்தானது,” என்று கூறினார்.

    இதேபோல், பெரிய நகரமான மேரியோபோலில் இருந்து நடக்கவிருந்த மற்றொரு வெளியேற்றமும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டது.

  9. “ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் திட்டமில்லை” – விளாதிமிர் புதின்

    ரஷ்யாவில் ராணுவ சட்டத்தை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஏரோஃப்லாட்டில் பணிபுரியும் உதவியாளர்களுடனான சந்திப்பில், ரஷ்ய அதிபர் “வெளிப்புற ஆக்கிரமிப்பு நிகழ்வுகளில், ராணுவ நடவடிக்கைகளின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில்” மட்டுமே அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும், நாம் அப்படியொரு நிலையில் இல்லை என்றவர், அத்தகைய நிலை வராது என்று நம்புவதாகவும் கூறினார்.

    புதின் ராணுவ சட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் வந்துள்ளன. ராணுவ சட்டம் என்பது சாதாரண சிவில் சட்டம் இடைநிறுத்தப்படுவது அல்லது ராணுவம் அரசின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்றவையாகும்.

    “பெரியளவிலான வெளிப்புற அச்சுறுத்தல்” ஏற்படும் சூழலில் பயன்படுத்தக்கூடிய பிற சிறப்பு அவசரக்கால நிலைகள் உள்ளன என்ற புதின், அதைக் கடந்து ராணுவ சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என்றும் கூறினார்.

  10. ஸெலன்ஸ்கி நேட்டோவை விமர்சிப்பதன் காரணம் என்ன?

    யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்கு நாடுகள் பச்சைக் கொடி காட்டுகின்றன என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். யுக்ரேன் வான் பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை நேட்டோவின் ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும். அதனால், உடனடியாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்று மேற்கத்திய ஆட்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.

  11. ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள யுக்ரேன் நகரத்தில் மக்கள் போராட்டம்

    உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இன்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய தேசிய கீதத்தைப் பாடியபடி சென்றனர். மேலும், “ரஷ்யர்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்”, “கெர்சன் யுக்ரேனுடையது” என்று முழக்கங்களை எழுப்பினர்.

    நகரம் முழுவதும் ரஷ்ய ராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடந்து செல்லும் ஒவ்வோர் ஓட்டுநரையும் நிறுத்துகின்றனர்.

    மேலும், ரஷ்ய படையினர் தாங்கள் பிடிக்க விரும்பும் யுக்ரேனிய ஆர்வலர்களின் பட்டியலை வைத்திருப்பதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

  12. படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டம்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தப் படங்கள் சுவிட்சர்லாந்து, க்ரோஷியா, தாய்லாந்து மற்றும் பிரிட்டனில் உள்ள லண்டன் மற்றும் பாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டவை.

  13. யுக்ரேனில் இருந்து மார்ச் 4 வரை 16,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

    யுக்ரேனில் இருந்து 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இது தேர்தலிலும் சரி மக்களிடமும் சரி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் தெரிவித்துள்ளார்.

    மேலும், “யுக்ரேனுக்கு அருகிலுள்ள நான்கு நாடுகளுக்கு ரஷ்ய மொழி பேசும் குழுக்களை அனுப்பியுள்ளோம். ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளோம்," என்று கூறினார்.

    மார்ச் 4-ஆம் தேதிக்குள் யுக்ரேனில் இருந்து 13,300 இந்தியர்களை 63 விமாங்களில் வெளியேற்றியுள்ளோம், என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

  14. இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர போர் நிறுத்தம் தான் ஒரே வாய்ப்பு

    பிசோச்சின் மற்றும் கார்ஹிவில் இருந்து, அடுத்த சில மணிநேரங்களில் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றிவிட முடியும். எங்களுக்குத் தெரிந்தவரை, தற்போது கார்ஹிவில் யாரும் இல்லை.

    இப்போது சுமி நகரத்தின் மீது முக்கியக் கவனம் உள்ளது. தொடர்ந்து வன்முறை மற்றும் போக்குவரத்து பற்றாக்குறை உள்ளது. போர் நிறுத்தம் மட்டுமே சிறந்த வாய்ப்பாக இருக்கும்,” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  15. “யுக்ரேனிய அதிகாரிகள் மக்களை வெளியேற விடவில்லை” – ரஷ்யா குற்றச்சாட்டு

    யுக்ரேனில் இப்போது பிற்பகல் ஆகிறது. போரின் 10-வது நாளில் பல நகரங்களில் கடுமையான குண்டுவீச்சு தொடர்கிறது. சில இடங்களில் நேரடி சண்டைகள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இரண்டு நகரங்களில் திட்டமிடப்பட்ட போர் நிறுத்தம் விரைவில் சரிந்து, சம்பவங்கள் வேகமாக நடந்தன. காலையில் இருந்து இதுவரை நடந்தவற்றை மீண்டும் பார்ப்போம்:

    ரஷ்யாவும் யுக்ரேனும் பொதுமக்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கும் வகையில், மேரியோபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

    உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு போர் நிறுத்தமும் முதல்கட்ட வெளியேற்றம் இரண்டு மணி நேரம் கழித்து தொடங்குவதாகவும் இருந்தது.

    ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், ரஷ்ய படைகள் நகரத்தின் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழித்தடப் பாதையில் சண்டை தொடர்ந்ததாகவும் மேரியோபோலின் துணை மேயர் கூறினார்.

    யுக்ரேன் பொதுமக்கள் வெளியேற்றத்தை ஒத்தி வைத்தது. மேரியோபோலில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கிப்பட்டது.

    பொதுமக்கள் தப்பிக்கும் வழிகளைப் பயன்படுத்தவில்லை என்றும் யுக்ரேனிய அதிகாரிகள் மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியதாக ரஷ்ய அரசு ஊடகம் கூறியது.

    இரண்டு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக மேயர் கூறினார்.

  16. யுக்ரேனில் இருந்து வளர்ப்புப் பூனையை இந்தியா கொண்டு வரும் கேரள மாணவர்

    கார்ஹிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார், கேரளாவைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அகில் ராதாகிருஷ்ணன். யுக்ரேன் மீதான படையெடுப்பு தொடங்கிய பிறகு, அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்வதற்கான அவருடைய முயற்சியில் பல போராட்டங்களுக்கு நடுவே, அங்கு தான் வளர்த்து வந்த வளர்ப்புப் பூனையையும் உடன் கொண்டு வரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

    நான்கு மாதங்களுக்கு முன்பு, அவருடைய சீனியர் அம்மினி என்று பெயரிட்ட அந்தப் பூனையை அவருக்கு வழங்கியதாகவும் விரைவில் அவரும் அவருடைய பூனையை இந்தியா வந்தடைவார்கள் என்றும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

  17. யுக்ரேன் எல்லைக்குச் செல்ல முயலும் தமிழக அமைச்சர்கள்

    யுக்ரேன் எல்லைக்குச் செல்ல தமிழக அமைச்சர்கள் அனுமதி கோருவது ஆக்கப்பூர்வமான முயற்சியா? அல்லது வெறும் அரசியல் நகர்வா?

  18. “போலிச் செய்திக்கு 15 ஆண்டுகள் சிறை” – நியாயப்படுத்திய ரஷ்ய செய்தித் தொடர்பாளர்

    ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், பேசியபோது, ரஷ்ய ராணுவத்தைப் பற்றி “போலி செய்திகளை” வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

    யுக்ரேனில் நடப்பதை “போர்” என்று குறிப்பிட செய்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத ரஷ்யாவில் சுதந்திரமாக செய்தி வெளியிடுவதை இந்தச் சட்டம் நடைமுறையில் தடுத்து நிறுத்துகிறது.

    பிபிசி, சிபிஎஸ் நியூஸ் மற்றும் ஏபிசி நியூஸ் அனைத்தும் பதிலுக்கு அந்த நாட்டில் தங்கள் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

    ஆனால், பெஸ்கோஃப், “நம் நாட்டிற்கு எதிராக கட்ட விழ்த்துவிடப்பட்ட தகவல் போர் காரணமாக இந்தச் சட்டம் மிகவும் அவசியமானது. இது அவசரமாகத் தேவைப்பட்டது,” என்று கூறியுள்ளார்.

  19. “மேற்கு நாடுகள் ரஷ்யாவில் பொருளாதாரக் கொள்ளை” – ரஷ்யா குற்றச்சாட்டு

    பல மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுகின்றன அல்லது குறைந்தபட்சமாக தங்கள் பணிகளை நிறுத்துகின்றன. ஜாரா நிறுவனம், 500-க்கும் மேற்பட்ட கடைகளை மூடுவதாக அறிவித்தது.

    அதற்கு முன்பாக, ரஷ்ய அரசு மேற்கு நாடுகளை “பொருளாதார கொள்ளையில்” ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியது. மேலும் ரஷ்ய அரசு அதன் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் என்றும் எச்சரித்தது.

    இந்தக் கருத்துகளை வெளியிட்ட, ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், பதிலடி என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால், அது ரஷ்ய நலன்களுக்கு ஏற்ப இருக்கும் என்றார்.

    பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள், ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிபர் புதினுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் கோடீஸ்வரர்களுக்கு எதிராகப் பரந்த அளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்த பின்னர் இது நடந்துள்ளது.

    ஆனால் பெஸ்கோஃப், உலகம் “அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட மிகப் பெரியது” என்று கூறியதோடு, அதைப் போலவே ரஷ்யாவும் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் பெரியது என்றார்.

  20. யுக்ரேன் vs ரஷ்யா: இந்த போர் முடிவதற்கான 5 சாத்தியங்கள் என்னென்ன?

    யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் போர் எப்படி முடியக்கூடும் என்பதை யூகிப்பது கடினம்தான். போரின் இழப்புகள், இடம் பெயர்ந்தவர்கள், போரை நிறுத்துவதற்கான குரல்கள் எனப் பலவும் இப்போது உலகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றுக்கு இடையே இந்தப் போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது குறித்த சில சாத்தியங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகக் கடினமானவை. மிகவும் இருண்டவை.