யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்: ஐ.நா தீர்மானத்துக்கு 141 நாடுகள் ஆதரவு, இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் யுக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்களை தடை செய்யத் திட்டம்

    விமானம்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து வரும் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் நுழையத் தடை விதித்துள்ளன.

    ரஷ்யாவுக்கு சொந்தமான அல்லது ரஷ்யாவால் இயக்கப்படும் விமானங்களுக்கு அமெரிக்கா அடுத்த 24 மணி நேரத்தில் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா வரவேண்டிய சில விமானங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

  2. வணக்கம் நேயர்களே!

    நான் அ.தா.பாலசுப்ரமணியன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப்படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனின் கார்கிவ் நகரில் நேற்று காலை வெடிகுண்டு தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் கர்நாடகவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
    • யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய படையினர், மறுபுறம் தலைநகர் கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தையும் தாக்கியுள்ளனர்.
    • மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் நேற்று கீயவ் நகரை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. அந்த நகரில் இயங்கி வந்த இந்திய தூதரகமும் மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேனின் கார்கிவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் தலைநகரில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்க தயாராகி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
    • பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்.
    • கீயவ் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா எச்சரித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ரஷ்யாவால் "உளவியல் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
    • ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளதாக ஏ எஃ பி செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.