யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப பிரிட்டன் முடிவு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், PA Media
யுக்ரேனுக்கு உதவி வழங்குவது தொடர்பாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் பேசியதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நம் மோசமான அச்சம் உண்மையாகியுள்ளதாகவும், ரஷ்ய படையெடுப்பு குறித்த அனைத்து எச்சரிக்கைகளும் துல்லியமானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐரோப்பாவில் போரை கட்டவிழ்த்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
“தரை, கடல் மற்றும் வான் வழியாக பரவலாக படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என அவர் கூறினார்.
“இது மிக தொலைவில் உள்ள சிறிய நாட்டில் நடக்கவில்லை” என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடு யுக்ரேன் என கூறிய அவர், பல தசாப்தங்களாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அனுபவித்த நாடு என தெரிவித்தார்.
“அந்த சுதந்திரம் தடைபட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.
யுக்ரேனுக்கு உதவ அந்நாட்டுக்கு தற்காப்பு ஆயுதங்களை முதலாவதாக வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.



















