You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதுச்சேரி ஹிஜாப் விவகாரத்தை விசாரிக்க புதிய அதிகாரி - கல்வி அமைச்சர்

புதுச்சேரியில் பள்ளி மாணவியிடம் ஹிஜாப் அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததாக எழுந்த புகாரில் ஏற்கெனவே விசாரணை நடத்திய கல்வி அலுவலர் மீது நம்பிக்கை இல்லை என சமூக நல அமைப்புகள் புகார் கூறின. இதையடுத்து புதிய அதிகாரியை கல்வித்துறை நியமித்திருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன் and நந்தினி வெள்ளைச்சாமி

  1. பிப்ரவரி 10ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. புதுச்சேரி ஹிஜாப் விவகாரம்: விசாரணைக்கு புதிய அதிகாரி நியமனம் - கல்வி அமைச்சர் நமச்சிவாயம்

    புதுச்சேரி ஹிஜாப் விவகாரத்தை விசாரிக்க புதிய அதிகாரியை நியமித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது அதற்கு கட்டுப்பாடு‌ விதித்ததாக மாணவியின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பாளர் புகார் எழுப்பினர்.

    இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை முதன்மை செயல் அலுவலர் மீனாட்சி சுந்தரத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவாகாமியை விசாரணை அதிகாரியாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நியமித்துள்ளார்.

    இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, "இந்த விவகாரத்தில் முந்தைய விசாரணை அதிகாரியான கல்வித்துறை முதன்மை செயல் அலுவலர் மீது நம்பிக்கை இல்லை என்று சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதனால் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளோம். அவர் ஹிஜாப் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்துவார். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை கல்வித்துறை எடுக்கும்," என்று தெரிவித்தார்.

  3. "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை": சீமான்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப். 10) கோவையில் பிரச்சாரம் செய்தார்.

    கோவை குனியாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்களை ஆதிரித்து பேசிய சீமான், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை. கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமான வரவேற்பு உள்ளது. அதனால் தான் நாம் தமிழர் வேட்பாளர்களை மிரட்டுவது, கடத்துவது போன்ற சம்பவங்களில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் ஈடுபடுகிறது.

    அரசியல் கட்சிகள் வீடு வீடாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஆனால், வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து கணக்கு காட்டுகின்றனர்.

    இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களது உரிமை. பூணூலை கழட்டிவிட்டு பள்ளிக்கு வருவார்களா, சீக்கியர்கள் டர்பனை கழற்றிவிட்டு ராணுவத்தில் சேருவார்களா?

    திராவிட கட்சிகள், ஒன்றிய கட்சிகள் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருவது போல் கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.

    தமிழகத்தில் எந்த இடத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படவில்லை? மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, அதானி துறைமுகத்திற்கு கற்கள் எடுத்துச் செல்கின்றனர்” என்றார்.

  4. தந்தையை விட பத்து மடங்கு கூடுதலாக பொய் சொல்பவர் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    தந்தையை விட பத்து மடங்கு கூடுதலாக பொய் சொல்பவர் உதயநிதி என, எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    சேலத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 10) உரையாற்றியதாவது:

    “இந்திய நாட்டிலேயே தேர்தல் நேரத்தில் அதிக வாக்குறுதிகளை கொடுத்த கட்சி திமுக தான். 525 வாக்குறுதிகளைக் கொடுத்து ஒன்றைக்கூட உருப்படியாக நிறைவேற்றவில்லை .

    ஸ்காட்லாண்ட் காவல் துறைக்கு இணையாக விளங்கும் தமிழ்நாடு காவல் துறை, ஏவல் துறையாக மாறக் கூடாது.

    திமுகவின் கைப்பாவையாக மாறினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள். கீழே இருக்கும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.

    திமுக தலைவர் விரக்தியின் விளிம்புக்கு சென்று இருப்பதால் ஏதேதோபேசி வருகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்வது தான் எங்களது ரகசியம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்.

    இந்த ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

    உதயநிதி ஸ்டாலின் தன் தந்தையை விட பத்து மடங்கு கூடுதலாக பொய் சொல்பவர்.

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஒரே கட்சி திமுக தான்.

    நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

  5. ரஜினிகாந்த் 169: இயக்குநர் நெல்சனுடன் இணையும் ரஜினிகாந்த்!

      • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    நடிகர் ரஜினிகாந்தின்169வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

    'கோலமாவு கோகிலா' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இதற்கு பிறகு கடந்த வருடம் இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான'டாக்டர்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    'டாக்டர்' திரைப்படத்திற்கு பிறகு தற்போது நடிகர் விஜய்யுடன் 'பீஸ்ட்' திரைப்படத்தை இயக்குகிறார் நெல்சன். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 'அண்னாத்த' திரைப்படத்திற்கு பிறகு அவரது 169-வது திரைப்படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே நெல்சன் ரஜினியை இயக்குவார் என முன்பு உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வந்தன.

    இப்போது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

    'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களுக்கு பிறகு ரஜினியும், 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சனும் சன் பிக்சர்ஸ்ஸுடன் இணைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    'பீஸ்ட்' பட வெளியீட்டிற்கு பிறகு மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானாலும் இது குறித்து வரும் நாட்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெல்சன், 'என்னுடைய அடுத்த படம் நடிகர் ரஜின்காந்த் அவர்களுடன் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் மீண்டும் ஒரு முறை சன் பிக்சர்ஸ் உடனும் என் நண்பர் அனிருத்துடன் வேலை பார்ப்பதும் சந்தோஷம்' என தெரிவித்துள்ளார்.

    ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  6. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    சென்னை தியாகராய நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் அமைந்திருக்கிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் அந்தத் தெருவுக்குள் வந்த ஒருவர், பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.

    அந்த அலுவலகத்தின் முன் கதவு சாத்தப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடந்தது.

    இதற்குப் பிறகு அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்ததில், இருசக்கர வாகனத்தின் எண் கண்டுபிடிக்கப்பட்டு, நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாஜ.க. அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கோரியிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

    இந்நிலையில், இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சிற்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

  7. உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தல்: 57.79% வாக்குகள் பதிவு

    உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு அங்குள்ள 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் ம்வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இன்று வாக்குரிமை செலுத்தி வருகின்றனர்.

    இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில, இந்திய தலைநகர் டெல்லியை இணைக்கும் கடைசி எல்லை மாவட்டங்களில் உள்ளன.

    முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணிநிலவரப்படி, 57.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  8. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைகிறது: நிதி ஆயோக் உறுப்பினர்

    நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றின் நிலைமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கேரளா, மிசோரம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாம் தளர்த்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பெருந்தொற்றின் மூலம் நாம் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இந்த வைரஸ் குறித்து எல்லாவற்றையும் உலகம் இன்னும் அறியவில்லை. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலகம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். தொற்றை அகற்றுதலில் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    புனேவில் செயல்பட்டு வரும் ஜெனோவா பயோபார்மகியூடிகல்ஸ் உருவாக்கிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.என்.ஏ கொரோனா தடுப்பூசி தற்போது மருத்துவப் பரிசோதனையில் உள்ளது. அதனை ஒருநாள் பயன்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    தடுப்பூசி செலுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி. 96% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது நினத்துக்கூட பார்க்க முடியாதது. எந்தவொரு அரசுக்கும் இது ஒரு கனவாகும். தடுப்பூசி செலுத்துவது இன்னும் வலுப்பெற்று வருகிறது” என்கிறார் அவர்.

    மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில், “ஜனவரி 24 அன்று தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 20.75% என்ற அளவில் இருந்தது. இப்போது, 4.44% என்ற அளவில் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இது, தொற்று பாதிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதைக் காட்டுகிறது” என்றார்.

  9. ஆதிமலை பழங்குடியினர் நிறுவனத்திற்கு ஐ.நா. வளர்ச்சி திட்ட விருது

    நீலகிரி மாவட்டம், ஆதிமலை பழங்குடியினர் நிறுவனத்திற்கு ஐ.நா. வளர்ச்சி திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் வழங்கும் 150 வகையான பொருட்களை, ஆதிமலை பழங்குடியினர் என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இது சம்பந்தமான விரிவான தகவலை இந்தக் காணொலியில் பார்ப்போம்.

  10. கர்நாடகா ஹிஜாப் வழக்கு: பிப்ரவரி 14க்கு ஒத்திவைப்பு, பள்ளி-கல்லூரிகளை திறக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

    கர்நாடகாவில் பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பதால் அரசியலமைப்பு வழங்கியுள்ள தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட உத்தரவிடக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை, மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது எவ்வித மதம் தொடர்பான ஆடைகளை அணியக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் இரண்டு நீதிபதிகள் இடம்பெற்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்களை வியாழக்கிழமை பிற்பகல் விசாரித்தது.

    அப்போது “ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளின்கீழ் வருகிறதா என்பது குறித்தும், மத நடைமுறையின் முக்கிய அங்கமா என்பது குறித்தும் கருத்தில் கொண்டுள்ளோம்” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக, உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை அவசரமாக உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    இதே விவகாரத்தை மாநில அமைச்சரவை கடந்த புதன்கிழமை கூடி விவாதித்தது. அப்போது இந்த பிரச்னையில் அரசு எந்த முடிவையும் எடுக்கும் முன்பு நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது.

  11. லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு: பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக சாடிய பிரியங்கா காந்தி

    உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை ஜாமீனில் விடுவிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, "பிரதமர் மோதியிடம் ஏதாவது தார்மீக பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்று நான் கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோதிக்கு நாடு மற்றும் நாட்டு மக்கள், விவசாயிகள் மீது தார்மீக பொறுப்பு ஏதும் உள்ளதா? முதலில், நீங்கள் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யவே தயாராக இல்லை. எல்லோரும் போராடினார்கள். பின்னர் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார், இன்னும் அவரது அப்பாவான மத்திய இணை அமைச்சருடன் நீங்கள் நிற்கிறீர்கள். ஒவ்வொரு நிகழ்விலும் அமைச்சர் பிரதமர் மோதியுடன் இருக்கிறார் என்று பிரியங்கா கூறினார்.

    அப்படி அவர் இருப்பது தவறு என்று நீங்கள் நினைக்கவில்லையா? நாட்டு மக்களை எப்போதும் குழப்ப முடியாது. இந்த வழக்கில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பிரதமருக்கும் தார்மீக பொறுப்பு என ஒன்று உள்ளது. இதற்கு முன், ரயில்வே விபத்து நடந்தபோது தார்மீக முறையில் ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்வது இல்லையா.... அவர் என்ன ரயிலை கையாண்டாரா? தார்மீக பொறுப்பேற்றுத்தானே ராஜிநாமா செய்வார். அது ஏன் இப்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

  12. லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது லக்னெள உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் கிளை

    லக்கிம்பூர் கேரி வன்முறையின்போது நான்கு விவசாயிகள் உயிரிழக்க காரணமான வாகன மோதல் வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபராக இருந்தவரும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுமான ஆஷிஷ் மிஸ்ராவை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது லக்னெள உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் கிளை.

  13. "நான் ஏன் கேட்க வேண்டும்?": பிரதமர் விமர்சனத்திற்கு ராகுல் பதில்

    ஏஎன்ஐ செய்தி முகமைக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோதி அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி மற்றவர்கள் சொல்வதை கேட்பதில்லை” என விமர்சித்தார்.

    இந்நிலையில், உத்தராகண்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோதிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ராகுல் காந்தி, “நேற்று பிரதமர் நரேந்திர மோதி அளித்த நேர்காணலில், ‘ராகுல் கேட்பதில்லை’ என கூறியிருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா? அமலாக்கத்துறை, சிபிஐயின் அழுத்தம் ராகுலிடம் வேலை செய்வதில்லை, நான் என் நிலையிலிருந்து பின்வாங்குவதில்லை என்கிறார். நான் ஏன் அவர் சொல்வதை கேட்க வேண்டும்?” என்றார் ராகுல் காந்தி.

  14. உ.பி.தேர்தல்: பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு

    உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு அங்குள்ள 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இன்று வாக்குரிமை செலுத்தி வருகின்றனர்.

    இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில, இந்திய தலைநகர் டெல்லியை இணைக்கும் கடைசி எல்லை மாவட்டங்களில் உள்ளன.

    பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில்,பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், "இயந்திரங்களில் கோளாறுகள் தொடர்பான புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சட்டம்-ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆக்ராவில் வாக்கு செலுத்த வந்த ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக எழுந்த புகார் ஆதாரமற்றது என கண்டறியப்பட்டது" என உ.பி மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, உத்தர பிரதேச தேர்தலுக்கான 33 வேட்பாளர்கள் அடங்கிய 9-வது பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

  15. இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை: மத்திய சுகாதாரத்துறை

    இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை இன்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை எனவும், அவர்கள் 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள், 72 மணிநேரத்திறேகு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இப்போது பயணிகள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ஒமிக்ரான் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலையும் நீக்கியிருக்கிறது இந்திய சுகாதாரத்துறை.

  16. வேட்டி, ஹிஜாபுக்காக போராடுவது அதிர்ச்சியளிக்கிறது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

      • எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை கோயில் நுழைவு வாயில்களில் வைப்பதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி இடம்பெற்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றில் வெளிநாட்டினர் டவுசர், லுங்கி போன்றவற்றை அணிந்து வருகின்றனர். இதனை அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், “மதச்சார்பற்ற நாட்டில் சிலர் ஹிஜாப்புக்காகவும் சிலர் கோயில்களில் வேட்டிக்காகப் போராடுவதும் அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தியா மத சார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்திலும் ஒரே மரபு பின்பற்றப்படுகிறதா? வேட்டிதான் அணிய வேண்டும் என ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அப்படி ஏதாவது மரபு உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் உள்ளதா?” என கேள்வி எழுப்பினர்.பின்னர், மனுதாரர் மற்றும் தமிழ்நாடு அரசு என, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இதுபோன்ற பிரச்னைகள் மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தக்கூடியது. 2 வாரங்களுக்குள் இதுதொடர்பாக தமிழக அரசும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான ஆதாரங்களை மனுதாரரும் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

  17. 'ஹிஜாப் புர்கா' அணிந்து வர அனுமதி மறுத்ததா புதுவை அரசுப் பள்ளி? நடந்த உண்மை என்ன?

      • எழுதியவர், நடராஜன் சுந்தர்
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    புதுவையில் 'ஹிஜாப் புர்கா' அணிந்து வர முஸ்லிம் மாணவி ஒருவருக்கு அரசுப் பள்ளி ஒன்றில் அனுமதி மறுத்ததாக கூறி சர்ச்சை எழுந்தது. இதையடுத்து திமுகவும் சில சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலரும் பயில்கின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) அன்று இந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி வகுப்பறைக்கு புர்கா அணிந்து வந்துள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் புகார் எழுப்பினர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 7) அன்று திமுக மற்றும் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  18. உ.பி தேர்தல்: இதுவரை 35.03% வாக்குகள் பதிவு

    உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று தொடங்கி 7 கட்ட வாக்குப் பதிவுகள் வரும் ஒரு மாத காலத்தில் நடக்கவுள்ளன. இன்று தொடங்கிய முதல் கட்ட வாக்குப் பதிவு, பாஜக-வுக்கு சோதனைக் களமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் நடக்கிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் வாக்காளர்கள் இன்று வாக்குப் பதிவு செய்கின்றனர்.

    இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில இந்தியத் தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்திருக்கக்கூடியவை.

    நண்பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  19. “திமுக நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது”: கோவையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் இன்று (பிப். 10) அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    கோவை சிவானந்தா காலணியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பத்து ஆண்டுகள் அதிமுக சிறப்பான ஆட்சியை நடத்தியது. திமுக சட்டமன்ற தேர்தலின்போது பொய் வாக்குறுதிகளை கொடுத்தது. 505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தது.

    அதை நம்பிய மக்களுக்கு திமுக நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. திமுகவின் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். அதை இன்னும் செய்யவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் அவ்வளவு குளறுபடி செய்து வைத்திருக்கிறார்கள்.

    பெண்களுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக கூறினார்கள். அதுவும் இன்னும் வரவில்லை. அதனால் மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.

    பொங்கல் பரிசாக ரூ.2,500 ரூபாயுடன் பரிசுப் பொருட்கள் தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது. கொடை வள்ளல் ஸ்டாலின் அப்போது ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது திமுக அரசு எதுவும் கொடுக்கவில்லை. பொங்கல் பரிசு பெருட்களை வடநாட்டில் இருந்து வாங்கி இருக்கின்றனர். அதில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகியுள்ளது.

    கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது. சட்டமன்றத் தேர்தலில் சின்ன சரிவினால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதை சரி செய்துவிட்டது. மக்கள் இப்போது அதிமுகவை ஆதரிக்க தயாரிக்க உள்ளனர்” என்றார்.

  20. உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் பாபான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து – போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமார். அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச்சென்ற சிறுவன் வகுப்பில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக ஆசிரியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் பாபான் விடுதி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, நிதிஷ்குமாரின் பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 10) வெளியிட்ட அறிவிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் பாபான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து – போதினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன். மகனை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு எனது ஆந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.