தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள சமூகநீதிக் கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகெளடா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டிலும், அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, தி.மு.க தலைவர் எழுதிய கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது ராகுல்காந்தி எம்.பி உடனிருந்ததாக தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் திமுக தலைவர் தொடங்கவுள்ள சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்பமொய்லியை நியமித்து காங்கிரஸ் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவும், 'ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக, மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து நேரில் கலந்தாலோசிப்பதாகத்' தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்புக்கு தமது கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில் சேரப் போவதில்லை என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பதில் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.