You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிவசங்கர் பாபா உடல்நிலை: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பெண் வன்கொடுமை வழக்கு, போக்சோ வழக்குகள் என எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விட தொடங்கிய இலங்கை அரசு, பிரபுராவ் ஆனந்த்

    தமிழக மீனவர்களின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை முகாம்களில் கைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான தமிழக மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு இன்று காலை முதல் ஏலம் விடும் பணியை தொடங்கியுள்ளது.

    கடந்த 2014ஆம் ஆண்டு முதல், இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நல்லிணக்க அடிப்படையில் படகுகளை, தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டது அதன் அடிப்படையில், படகுகளை தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் என்று இலங்கை அரசு அறிவித்தது.

    இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் தமிழக மீனவர்களால், இலங்கையில் தடுத்து கைபடுத்தப்பட்ட படகுகளை மீட்க முடியவில்லை. இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன்' வளத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர்.

    அந்த வழக்கில் இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள படகுகளை, தமிழக மீனவர்கள் திருப்பி எடுத்துச் செல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் விபத்துள்ளாவதுடன் இலங்கை கடற்படை வீரர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதால், அந்தப் படகுகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக படகுகளை ஏலமிட்டு, கிடைக்கும் பணத்தை விசைப்படகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.

    ஆனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை செல்ல முடியாத சூழ்நிலையில், பயனற்று இலங்கை வசமுள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம், பரிக்கபட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விசைப்படகுகளுக்கு 5 லட்ச ரூபாயும், நாட்டு படகுகளுக்கு ஒரு லட்சத்தி 50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்தது. இதனை அறிந்த மீன் வளத்துறை, இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை, இன்று முதல் வரும் 10ம் தேதி வரை அந்தந்த கடற்படை தளத்தில் வைத்து ஏலம் விட உத்தரவிட்டிருந்ததது. இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் ஏலம் துவங்கி நடைபெற்று வருகிறது.

  2. பாகிஸ்தானில் அஹமதியா சமூகத்தின் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 45 அஹமதியா சமூகத்தை சார்ந்த கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று ஏ.என்.ஜ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், இந்த பிரச்னை தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அசாஸ் சையது தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹபிஸாபாத் போலீஸ் இம்மாதிரியான இழிவுபடுத்தும் செயலில் இறங்கி உள்ளனர். இது மனித உரிமை மீறல். இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    2020ஆம் ஆண்டு ஏபிபிஜி என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, அஹமதியா சமூகத்தைப் பற்றி பள்ளிகளில் தவறான முறையில் கற்றுக் கொடுப்பதை கண்டறிந்தனர். அவர்கள் அரசிடம் அனைத்து மதங்களையும் ஒன்றாக நடத்துமாறு வலியுறுத்தி மேலும், அஹமதியா ‌சமூகத்தின் புனித நூல்களை அச்சிடுவதற்கான தடையை நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர், என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

  3. சீன தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் மீண்டும் மறுப்பு

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் தான் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மேற்கத்திய ஊடகத்திற்கு அளித்த முதல் பேட்டியில் மீண்டும் மறுத்துள்ளார்.

    குளிர்கால ஒலிம்பிக்கில் பிரெஞ்சு நாளிதழானL'Equipe நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

    பெங் ஷாய், கடந்த ஆண்டு முன்னாள் சீன துணை பிரதமர் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு அவரைக் குறித்த எந்த விவரங்களும் தெரியாததால், சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

    இதையடுத்து, குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் அளித்துள்ள பேட்டியில், தான் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள அவர், தான் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

  4. உத்தர பிரதேச தேர்தல் 2022: நரேந்திர மோதியின் வாரணாசி தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா?

    புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாத்திரமல்லாமல், அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது வாரணாசி. இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பது இதற்கு முதன்மையான காரணம்.

    பிரதமரின் தொகுதி என்றாலும் குறுகலான சாலைகள், வாகன நெரிசல், மிகவும் சேதமடைந்த பழைய பேருந்துகள், சுகாதாரமற்ற திறந்தவெளி சாக்கடைகள், சாலையோரங்களில் மக்கள் வசிப்பதையும் காண முடிகிறது.

    வாரணாசி மாத்திரமல்லாமல் உத்தரப் பிரதேசம் முழுவதுமே இளைஞர்கள் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் திண்டாடி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் வந்தனா சிங் பிபிசி தமிழிடம் கூறினார்.

    ஆனால் இவையெல்லாம் 2014-க்கு முந்தைய நிலையைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதாகக் கூறுகிறார் வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ரொஹானியா சட்டப் பேரவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயண் சிங். புதிய மேம்பாலங்கள் கட்டப்படுவதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  5. இணைய தாக்குதல்களால் திருடப்படும் கிரிப்டோகரன்சி: : ஏவுகணை சோதனைகளுக்கு பயன்படுத்தும் வடகொரியா

    வடகொரியாவால் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் மூலம், அந்நாட்டின் ஏவுகணை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளன என்று ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சைபர்-தாக்குதல்கள் மூலம் 50 மில்லியன் டாலர்களுக்கும் (37 மில்லியன் பவுண்ட்) அதிகமான டிஜிட்டல் சொத்துக்களை திருடியதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இத்தகைய தாக்குதல்கள் பியோங்யாங்கின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு "முக்கியமான வருவாய் ஆதாரம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளிக்கிழமை ஐ.நா.வின் தடைகள் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  6. ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

  7. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது ஆ. லட்சுமி காந்த் பாரதி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.