நிதின் கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: "உங்கள் பேச்சு வியப்பளிக்கிறது"

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியீடு.

    தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4,349 இடங்கள் உள்ளன.

    மேலும், சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

    இந்த தரவரிசைப் பட்டியலையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை http://tnhealth.tn.gov.in , https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடுகிறார்.

    ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்றும் இந்தக் கலந்தாய்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

  2. கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

    இந்த எண்ணிக்கை, முந்தைய நாளான சனிக்கிழமை பதிவான பாதிப்புடன் ஒப்பிடும்போது 27 ஆயிரத்து 469 குறைவாகும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய விருதுக்கு தேர்வு

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே. செந்தில்ராஜ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு உள்ளிட்ட பலர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ், வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் 2020-2021-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விருது 25 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    DC

    பட மூலாதாரம்,

  4. தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கும்பல் தாக்குதல்

    Fisherman

    பட மூலாதாரம், .

    தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் மூன்று தமிழக மீனவர்கள் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் இன்று அதிகாலை கோடிக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல், தமிழக மீனவர்களின் படகில் ஏறி, அவர்களை கம்பு, இரும்புக்கம்பி கொண்டு தாக்கியும் அவர்களை தண்ணீரில் தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், படகில் இருந்த 200 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்களை கொள்ளையடித்து படகில் இருந்து டீசலையும் எடுத்து சென்று உள்ளதாக தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

    கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கி கொண்டு அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

    கரை திரும்பிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு கொண்டு செல்லபட்டனர்.

    இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  5. இலங்கையில் டிஜிட்டல் வாலெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டம்

    இலங்கையில் அதன் குடிமக்களுக்கு தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அவர்களின் செல்பேசியுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் கம்பாவில் நடைபெற்ற லங்கா க்யூஆர் கோட் பேமென்ட் திட்ட அறிமுக விழாவில் பேசிய அவர், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டம் நாட்டில் 13 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

    இந்த திட்டத்தை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    எதிர்காலத்தில் இந்த டிஜிட்டல் வாலெட் சேவை மூலம் பொதுமக்கள் தங்களுடைய பிறப்புச்சான்றிதழ், திருமண சான்றிதழ், தேர்வு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து, தேவைப்படும் இடங்களில் அவற்றை செல்பேசி வாயிலாக காண்பிக்கலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

  6. நார்வேயில் மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் தாலிபன் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை

    தாலிபன்

    பட மூலாதாரம், EPA

    நார்வேயின் ஓஸ்லோவில் தாலிபன் உறுப்பினர்களுடன் மேற்கு நாடுகளின் அதிகாரிகள் முதல் முறையாக பேச்சுவாரத்தை நடத்தவுள்ளனர்.

    நார்வே தலைநகர் ஓஸ்லோவில் மேற்கு நாடுகளின் அதிகாரிகளுடன் தாலிபன் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு ஐரோப்பாவில் இத்தகைய பேச்சுவார்த்தைக்காக அவர்கள் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஆப்கானிஸ்தானில் தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் பட்டினியால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிப்படுவதாக செய்திகள் வருகின்றன.

    அந்த நாட்டில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேருக்கு சாப்பிட உணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், மேற்கு நாடுகளுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும்போது, தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க வங்கிகளில் முடக்கப்பட்ட பல நூறு கோடி டாலர்களை விடுவிக்கும் கோரிக்கையை தாலிபன்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  7. யுக்ரேன்: தூதரக ஊழியர்களின் குடும்பங்கள் வெளியேற அமெரிக்கா உத்தரவு

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீஃபில் உள்ள அமெரிக்க தூதரகம்

    யுக்ரேனில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமது தூதரக ஊழியர்கள் குடும்பங்களுடன் வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

    அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    மேலும், யுக்ரேனில் உள்ள அமெரிக்க குடிமக்களும் வெளியேற பரிசீலிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யுக்ரேன் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த நாட்டுக்குள் ஆக்கிரமிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் நாட்டில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக சாத்தியம் மிக்க துன்புறுத்தல்கள் நடக்கலாம் என்பதால் யுக்ரேன், ரஷ்யாவுக்கு அவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

  8. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.