You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது - இந்திய சுகாதார அமைச்சகத்தின் அமைப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் தற்போது சமூக பரவல் நிலையில் உள்ளது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. யுக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் ஒரு லட்சம் வீரர்கள் - பதற்றம் அதிகரிப்பு

    யுக்ரைனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது.

    இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவானவரை யுக்ரைனின் அதிபராக நியமிக்க விளாதிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  2. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 3.33 லட்சம் - தமிழ்நாட்டில் முழு பொது முடக்கம்

    இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது முந்தைய தினத்தை விட 4,171 குறைவாக உள்ளது.

    இந்தியா முழுவதும் ஒரு நாள் கொரோனா தொற்று 3, 33, 533 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் மொத்தம் 2, 59,168 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மொத்தம், 21, 87, 205 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி கொரோனா தொற்று விகிதம் 17.78 விழுக்காடாக உள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று (ஜனவரி 22ஆம் தேதி) 30,744 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,47,857 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 6,452 பேரும், செங்கல்பட்டில் 2,377 பேரும், கோவையில் 3,886 பேரும், கன்னியாகுமரியில் 1,266 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்பட்டுத்தும் வகையில் இன்று முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,926 பேரும், கேரளாவில் 45,136 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  3. நேதாஜி பிறந்த நாளன்று தேசிய விடுமுறை - மமதா பானர்ஜி கோரிக்கை

    இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று ஜனவரி 23, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் மோதி கூறுகையில், ''அவர் தேசத்திற்கு ஆற்றிய பெரும்பங்கால் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறோம். இந்நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன்.''என்கிறார்.

    இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் இந்திய தேசத்தின் நாயகனுக்கு அஞ்சலி செலுத்த, சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

  4. கொரோனா ஊரடங்கு அறிவித்த கிரிபாட்டி நாடு

    இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி நாடு கொரோனா ஊரடங்கு அறிவித்துள்ளது.

    உலகில் பல நாடுகளும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. ஆனால் கிரிபாடி என்கிற சிறிய நாடு, தன் முதல் கொரோனா ஊரடங்கை சனிக்கிழமை தான் அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறிய தீவு தேசத்தில் 1.2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கடந்த வாரம் வரை இந்த தேசத்தில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை, ஃபிஜி நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 54 பேரில் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிபாடி மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  5. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்..

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்