உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்பட ஐந்து மாநில சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 10 மார்ச் 7ஆம் தேதிவரை நடைபெறவுள்ள தேர்தலின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளியிடங்களில் தேர்தல் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு விதித்துள்ள தடையை ஜனவரி 31ஆம் தேதிவரை தலைமைத் தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, துணை ஆணையர்கள் ராஜிவ் குமார், அனூப் சந்திர பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில் சில முக்கிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனவரி 31வரை எவ்வித சாலை பேரணியோ பாத யாத்திரையோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள், வேறு வாகன பேரணிக்கோ அனுமதியில்லை.
முதலாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஜனவரி 27ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு விடுவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் திறந்தவெளியில் 500 பேருக்கு மிகாமல் அல்லது அந்த இடத்தின் கொள்ளவில் 50 சதவீத அளவுக்கான பார்வையாளர்களைக் கொண்ட பேரணியை நடத்தலாம்.
இதே நடைமுறை ஜனவரி 31ஆம் தேதி இறுதி செய்யப்படும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் பொருந்தும்.
வீடு, வீடாக 5 பேர் வரை சென்று வாக்கு சேகரிக்க நிர்ணயிக்கப்பட்ட வரம்பு இனி 10 ஆக உயர்த்தப்படுகிறது.
உள்ளரங்க தேர்தல் கூட்டம் என்றால் அதிகபட்சமாக 300 பேர் அல்லது அந்த அரங்கில் பாதி அளவுள்ள பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்தலாம்.
காணொளி வாயிலாக திரையிடப்படும் பிரசார காணொளிகளை திரையிடும் வாகனங்கள், கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றப்படும் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்படும்போது, அதை அதிகபட்சமாக 500 பேர் வரையோ அந்த வாகனம் நிறுத்தப்படும் இடத்தின் அளவில் 50 சதவீத அளவுக்கோ மக்களைக் கொண்டதாக இருந்தால் அந்த காணொளிகள் திரையிடப்படலாம்.
இந்த வசதிகள் இருப்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.